குரல் கொடுப்போம் வாருங்கள்!

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

வெடி குண்டு வென்று
வெறியினை ஊட்டி நிற்பார்
பறி போகும் உயிர்பற்றி
பார்த்து விட மறுக்கின்றார்
நெறி முறைகள் பற்றியவர்
நெஞ்ச மதில் கொள்ளாமல்
பொறி புலனை எல்லாமே
அழியும் வழி ஆக்குகிறார் !

அறம் அவர்கள் சிந்தையிலே
அமர்ந்து விட மறுக்கிறது
அழி என்னும் தத்துவமே
ஆணி வேராய் அமர்கிறது
அரக்கர் எலாம் இருந்திருந்தார்
என்று கதை படித்திருப்போம்
அரக்கரை நாம் காண்பதற்கு
அடையாளம் இவர் அன்றோ !

மதம் என்னும் பெயராலே
மனிதம் தன்னை அழிக்கின்றார்
புனிதம் உடை பாதையினை
புறந் தள்ளி நிற்கின்றார்
சாந்தி சமாதானம் அதை
சற்றும் அவர் பாராமல்
சங்காரம் எனும் வழியை
தமது வழி ஆக்கிவிட்டார் !

வீரதீரம் என நினைக்கும்
வெறிச் செயலை ஒழிப்பதற்கு
நாடு எல்லாம் ஒன்றிணைந்து
நல்ல வழி காணவேண்டும்
கேடு கெட்ட குணமதனை
நாடு விட்டு ஒழிப்பதற்கு
கூடி நின்று யாவருமே
குரல் கொடுப்போம் வாருங்கள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *