மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
வெடி குண்டு வென்று
வெறியினை ஊட்டி நிற்பார்
பறி போகும் உயிர்பற்றி
பார்த்து விட மறுக்கின்றார்
நெறி முறைகள் பற்றியவர்
நெஞ்ச மதில் கொள்ளாமல்
பொறி புலனை எல்லாமே
அழியும் வழி ஆக்குகிறார் !
அறம் அவர்கள் சிந்தையிலே
அமர்ந்து விட மறுக்கிறது
அழி என்னும் தத்துவமே
ஆணி வேராய் அமர்கிறது
அரக்கர் எலாம் இருந்திருந்தார்
என்று கதை படித்திருப்போம்
அரக்கரை நாம் காண்பதற்கு
அடையாளம் இவர் அன்றோ !
மதம் என்னும் பெயராலே
மனிதம் தன்னை அழிக்கின்றார்
புனிதம் உடை பாதையினை
புறந் தள்ளி நிற்கின்றார்
சாந்தி சமாதானம் அதை
சற்றும் அவர் பாராமல்
சங்காரம் எனும் வழியை
தமது வழி ஆக்கிவிட்டார் !
வீரதீரம் என நினைக்கும்
வெறிச் செயலை ஒழிப்பதற்கு
நாடு எல்லாம் ஒன்றிணைந்து
நல்ல வழி காணவேண்டும்
கேடு கெட்ட குணமதனை
நாடு விட்டு ஒழிப்பதற்கு
கூடி நின்று யாவருமே
குரல் கொடுப்போம் வாருங்கள் !
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.