வல்லமையாளர் விருது 307 – திவான்ஷு

0

-விவேக்பாரதி

அறிவியலின் துணை கொண்டு மனிதன் எத்தனையோ இயலாமைகளைச் சாத்தியமாக்கி இருக்கிறான். மனிதனால் வேகமாக நகர முடிந்தது, இருட்டை விலக்க ஒளி உருவாக்க முடிந்தது, பறக்க முடிந்தது, தண்ணீரின் ஆழம்வரை காண முடிந்தது, விண்வெளியின் விளக்கங்களைப் பார்த்துப் பகிர முடிந்தது. மனிதன், தன்னுடைய எத்தனையோ இயலாமைகளை அறிவியலால் சாத்தியமாக்கி இருக்கிறான். ஆனாலும் இன்னும் சில இடங்களில் மனிதராகிய நாம் பின் தங்கித்தான் இருக்கிறோம். காற்றில்லா வெற்றிடத்தின் (Vacuum) மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கும் நம் தொழில்நுட்பம், செப்டிக் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இன்னும் சில இடங்களில் மனிதக் கரங்களைத்தான் நம்பி இருக்கிறது. அதற்கும் அறிவியல் விடையைக் கண்டுகொண்டால்? இன்னும் பல நகரப்பார்வை படாத உள்முக கிராமங்களில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்துகிறார்கள். இந்த நிலையை மாற்ற ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள் ஐஐடி மாணவர்கள். அவர்களே இந்த வாரத்தின்  வல்லமையாளர்கள்.

ஐஐடி மதராஸைச் சேர்ந்த திவான்ஷு என்ற மாணவரும் அவருடைய குழுவும் தங்கள் பேராசிரியர் பிரபு ராஜகோபால் என்பவருடன் இணைந்து இந்தச் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது செப்டிக் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் இயந்திரம். மீன் போன்று செயல்படும் வடிவமைப்பைக் கொண்ட இந்த ரோபோ, செப்டிக் தொட்டிகளில் இருக்கும் அழுக்குகளை பிரத்யேகமான ஒரு வெட்டுக் கருவி  கொண்டு வெட்டி எடுத்து, வெற்றிடக் குழாய்களின் வழியே அழுக்கையும் வண்டலையும் சுத்தம் செய்கிறது. இது குறித்த வெங்கடாச்சலம் என்பவர் லிங்க்டு இன் தளத்தில் பதிவேற்றியது.

 

மாணவர்களாகச் சேர்ந்து சமுதாயத்தில் ஒரு முன்னேற்றப் பாதைக்கு வித்திட்டிருப்பதை வல்லமை மின்னிதழ் மிகவும் பாராட்டுகிறது. அந்தக் குழுவுக்கு “வல்லமையாளர்” என்ற விருதை அளித்து இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *