-சியாமளா ராஜசேகர்

இல்லறத்தை நல்லறமாய்ப் பேணி வாழ்ந்தால்
***இல்வாழ்வில் என்றென்றும் அமைதி தங்கும் !
கல்லெறிந்தால் கலங்கிவிடும் குட்டை நீராய்க்
***கவலைகளை நினைத்திருந்தால் குழம்பும் நெஞ்சம் !
பல்வேறு சங்கடங்கள் தொடர்ந்த போதும்
***பக்குவமாய்க் கலந்துபேசப் பறந்து போகும் !
வெல்லுவழி புரிந்துகொள்ள மூத்தோர் கூற்றை
***விருப்போடு செவிகொடுத்துக் கேட்டல் நன்றே !!

இருகைகள் தட்டினாற்தான் கேட்கும் சத்தம்
***இதையுணர்ந்து கொண்டாலே நீங்கும் பித்தம் !
ஒருவருக்கொ ருவர்விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்
***ஒருபோதும் நிம்மதிக்கு மில்லை பஞ்சம் !
செருக்கோடு தானென்று மார்தட் டாமல்
***சிறுபிணக்கை முளையினிலே கிள்ளல் வேண்டும் !
வருந்துயரைத் துணிந்துயெதிர் நீச்சல் போட்டால்
***வாழ்க்கையெனும் படகுகரை யேறும் நன்றே !!

பிறைநிலவை குறையென்று நீல வானம்
***பிரித்துவைத்தா தான்மகிழ்ச்சி இரவில் கொள்ளும் ?
குறைகளையே எப்போதும் குத்திக் காட்ட
***குமைந்திருக்கும்‌ மென்மனமும் கனலைக் கக்கும் !
நிறைகண்டால் பாராட்டும் உயர்ந்த வுள்ளம்
***நீடித்த மகிழ்விற்கு வித்தே யாகும் !
உறவுகளை மதித்திருந்தால் மேன்மை பெற்றே
***உயர்ந்திடலாம் வாழ்வினிலே நாளும் நன்றே !!

சியாமளா ராஜசேகர்
இராயபுரம் , சென்னை – 600013
அலைபேசி – 9840769555

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *