அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.05.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி – 213

  1. நிறைவின் அறியாமொழிகள்

    வாழ்தலின் அர்த்தத்தில்
    உழைப்பின் அதிசுகத்தில்
    மனதின் அடியாழ விழைவின்
    இயற்கை நுகர்ந்து கலை தெளிந்து
    நீண்ட வாழ்க்கையில்
    பயிற்றுவிக்கப்படும் வறுமையும்
    வறுமையில் பணமும்!

  2. ஏழ்மை

    ஏக்கமதைச் சுமந்த
    விழிகள் மட்டும்
    ஏழைக்கு மாறவில்லை
    இற்றை மட்டும் – என
    எடுத்துக்காட்டாய் வீற்றிருக்கும்
    ஏழ்மை அணி பூண்டமர்ந்த
    ஏந்திழை நீ……….

  3. குறையுமா…

    பருந்தை எதிர்க்கப்
    பறந்து காக்கும் தாய்க்கோழிபோல்
    பிள்ளைகளைப்
    பாதுகாத்து ஆளாக்கிய தாய்,
    வருந்திக் காத்திருக்கிறாள்
    எமனின்
    வரவுக்காக..

    படித்த பிள்ளைகளைப் பெற்ற
    பல தாய்களின்
    நிலை இதுதான்..

    அறிவுக் கண்கள் திறக்க
    அவர்கள் கற்ற கல்வியால்
    இன்று அதிகமாய்த் திறக்கின்றன
    முதியோர் இல்லங்கள்..

    மாறுமா இந்த அவல நிலை,
    ஏங்கிக் காத்திருக்கும்
    இத்தகு அன்னையரின்
    எண்ணிக்கை குறையுமா-
    காத்திருப்போம்…!

    செண்பக ஜெகதீசன்…

  4. நேற்று வீசிய ஏச்சாலே
    சொல்பட்டு சிதறிய மனம்
    புண்பட்டு இற்றி விடுமென
    நூத்துப் போன சேலையுடன்
    வாசற்படியில் வாசமற்று
    காத்துக் கிடக்கும் கணங்களில்
    எஞ்சிய கணநேர நிம்மதியும்
    கண்பட்டு கழியாதிருக்க
    அயராது காவலிருக்கும்
    கண்திருஷ்டி கண்பதி

    -சக்திப்ரபா

  5. அன்னையின் எழிலை காக்க
    கண் திருஷ்டி விநாயகர்
    எண்ணத்தின் செல்வத்தை காக்க
    காக்கும் விநாயகர்
    பிரசவித்தும்
    ஏனோ அவள்
    வறுமையின் தாயாகவே
    காட்சியளிக்கிறாள்…?

  6. தன் எழிலை போற்றும்
    மாந்தர்தம் பரவிகிடக்கும்
    இப்பூவுலகில்
    உன் சிந்தையை விட்டு அகலாத
    காதல் நாயகனின்
    வரா வருகையை
    நித்தமும் எதிர்நோக்கி
    வீற்றிருக்கும் அன்னையே
    நீ பூண்ட இக்கோலம் ஊரறியும்
    உன் நினைவுகளின் ஏக்கங்களை
    முதற்கடவுள் அறியாத போதும்
    உன் வழிபாட்டில் சிறிதும்
    குறைவில்லை
    உன் நெற்றி இறக்கிய திலகம்
    பரிகார மோட்சமாக
    அருகால்படியை அலங்கரிக்கின்றது.
    வறுமையின் வாசம் வீட்டை நிறைத்தாலும்
    அன்பானவனினன் நினைவுகளை சுவாசித்து
    வாழும் தாயே நீ என்றுமே இல்லறத்தின்
                மகாலெட்சுமியே…….

  7. சிறகு முளைத்து நகரம் பறந்த செல்லப்பறவைகள்
    இவ்வருடப் பண்டிகைக்கேனும்
    கூடு திரும்புமென்னும் நம்பிக்கையோடு
    குந்திக் கிடக்கிறது தாய்ப்பறவை.

    உள்ளும் புறமும் நடையாய் நடந்து
    நோகும் கால்கள் நீவி,
    வரவெதிர்பார்த்துப் பார்த்துப்
    புரையோடிய கண்கள் பூத்து,
    புன்னகை மறந்த உதட்டில் துடிக்கும்
    சிறுவிம்மல் மறைத்து
    பஞ்சப்பராரியெனக் காத்திருக்கும்
    நெஞ்சத்தின் தவிப்பு யாருக்குத் தெரியும்?
    உடையின் கிழிசல் பார்வைக்குத் தெரியும்
    இந்த உள்ளத்தின் கிழிசல் யாருக்குப் புரியும்?

    துணையிலா முதுமை துயரம்.
    உறவிலா தனிமை பெருந்துயரம்.
    அடக்கிவைக்கும் கேவல் வெடிக்குமுன்னே
    அன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ…
    முடக்கிவைக்கும் ஆவி விடுபடுமுன்னே
    முன்னால் வந்து முகங்காட்டிப் போகுமோ…

Leave a Reply to ShakthiPrabha

Your email address will not be published. Required fields are marked *