இலக்கியத் தேடல்!
பேரா.பெஞ்சமின் லெபோ
அன்பு நண்பர்களே!
தமிழகத்தில் இருந்து முனைவர் ம. சொ. விக்டர் என்னும் ஆராய்ச்சி அறிஞர் அண்மையில் பாரீஸ் வந்திருந்தார். எங்கள் ‘ இலக்கியத் தேடல்’ அமைப்பில் பேச அழைத்திருந்தோம்.
பைபிளில் வரும் பல சொற்கள் நம் தமிழ்ச் சொற்களே என்பதைத் தெளிவு படுத்தினார்.
அவர், ஆப்பிரிக்க வரலாற்றைத் தொகுத்து வெளியிட்ட யுனெஸ்கோ நிறுவனமே, தமிழர் வரலாற்றையும் தொகுத்து வெளியிட்டால், அது பொருத்தமாகவும் இருக்கும்’
என்று கூற, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம் இந்தியாவில் இருந்து அவர் தயார் செய்து கொண்டுவந்திருந்த ஆவணத்தை யுனெஸ்கோ பாரீஸ் நிறுவனத்தில் சேர்த்து வந்தோம். இந்த விவரங்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தொல்தமிழரின் வரலாறு தொகுக்கப்பட்டு வெளியிடுதல் தொடர்பாக
பாரீசு, யுனெஸ்கோ நிறுவனத்திடம் தமிழர்கள் விண்ணப்பம். 08.09.2011 பாரீசு:
பழம்பெரும் கண்டமான ஆப்பிரிக்கா பற்றியும் அதன் தொன்மக்குடிகள் பற்றியும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட யுனெஸ்கோ நிறுவனம் 1970 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கா வரலாற்றைத் தொகுத்து வெளியிட்டது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அவ்வாய்வு நூல், 13 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. அவை 52 உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, உலகின் அனைத்துப் பலகலைக் கழகங்களிலும் இடம் பெற்றுள்ளது. ஆப்பிரிக்கர்களிலும் மூத்த குடியாகிய தமிழ் இனம் மற்றும் தமிழ்மொழி பற்றிய வரலாறுகள் இதுவரையிலும் முறையாகத் தொகுத்து வெளியிடப்படவில்லை. தமிழ் நாட்டிலும் அதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் அறிஞர்களும் அதுபற்றிச் சிந்திக்கவுமில்லை. உலகின் முதல் குடியான தமிழ்க்குடியின் வரலாறு வெளியிடப்படுமேயானால், இதுவரையிலும் கூட தெளிவுபடுத்த இயலாமல் உள்ள சுமோரிய, பாபிலோனிய, மெசபத்தோமிய, எபிறேய இனத்தின் வரலாறுகளும் வெளிப்படும். எவ்வாறெனில், இவ்வினங்களுக்கும் தமிழ் இனத்துக்கும் உள்ள இனம், மொழி, பண்பாடு, நாகரீகம் பற்றிய நெருங்கிய தொடர்புகள் அண்மையில் வெளிவந்துள்ள ஆய்வுகளால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க வரலாற்றை யுனெஸ்கோ சார்பில் தொகுத்து வெளியிட்ட நூல்களில், பல்வேறு அறிஞர்கள், ஆப்பிரிக்க மக்களின் இனம், மொழி, வழக்குகள், வழக்காறுகள் ஆகியவை தமிழர்களோடும், தமிழ்மொழியோடும் தொடர்பு கொண்டுள்ளனவென்பதைக் குறிப்பிடுகின்றனர். பிரான்சு நாட்டின் வரலாறு மற்றும் மொழியியல் அறிஞரான மதாம் பிளாவட்ஸ்கி என்பார், ஆப்பிரிக்க மொழிகளின் மூலமும் வேரும் தமிழ்மொழியோடு தொடர்பு கொண்டுள்ளதை, ஆப்பிரிக்க வரலாற்று நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். எனவே, ஆப்பிக்க வரலாற்றைத் தொகுத்து வெளியிட்ட யுனெஸ்கோ நிறுவனமே, தமிழர் வரலாற்றையும் தொகுத்து வெளியிட்டால், அது பொருத்தமாகவும் இருக்கும்.
சென்னையில் செயல்பட்டு வரும் ‘தமிழ் வளர்ச்சிப் பேராயம்” என்ற நிறுவனத்தின் தலைவர் திரு டாக்டர் ம.சோ.விக்டர் யுனெஸ்கோ நிறுவனத்திடம் அளிப்பதற்கென விரிவான விண்ணப்பம் ஒன்றினை எடுத்துவந்தார். அதில் தமிழர் வரலாறு யுனெஸ்கோ நிறுவனத்தால் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவ்விண்ணப்பத்தினை, பாரீசு நகரில் செயல்பட்டுவரும் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், குழுவாகச் சென்று, யுனெஸ்கோவிடம் அளிப்பதென முடிவு செய்தனர்.
அதன்படி, பாரீசு பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர் டாக்டர் திரு.தேவகுமரன் தலைமையில், பாரீசு முத்தமிழ்ச்சங்க அமைப்பாளரும் தமிழ் இலக்கிய உலகநாட்டின் தலைவருமான பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பாரீசு முத்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கோவி.செயராமன், திரு. டாகடர் ம. சோ. விக்டர் மற்றும் தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள், யுனெஸ்கோவின் பொதுச்செயலாளர் நாயகம் செல்வி. இரீனா பெகோவா அவர்களிடம் விண்ணப்ப மனுவை அளித்தனர். யுனெஸ்கோவிற்கான செனகல் நாட்டுத்தூதர் திரு. புளோனண்டின் தியோப், தமிழ்க் குழுவினருக்குப் பல்வேறு நிலைகளில் உதவிகள் புரிந்தார்.
டாக்டர் ம.சோ.விக்டர் – தமிழியக்கன் தேவகுமரன் , தலைவர், தமிழ் வளர்ச்சிப் பேராயம், சென்னை. இந்திய – பாரீசு தமிழியக்கச்சங்கம்
கோவி செயராமன் – பேராசிரியர் பெஞ்சமின் லெபோ , தலைவர் முத்தமிழ்ச்சங்கம், பாரீசு தலைவர், தமிழ்இலக்கிய மாநாடு, பாரீசு
சிறந்த முயற்சி. இந்தக் கோரிக்கையை வழிமொழிகிறேன்.