மீ.விசுவநாதன்

தட்டித் தட்டிப் பார்க்கின்றான் – மனத்
தங்கத் தரத்தை அறிகின்றான்
முட்டி மோதித் தவித்தாலும் – உள்
முழுதும் அவனே இருக்கின்றான்.

வேத ஒலியாய் வாழ்கின்றான் – ஒரு
விதைக்குள் வினையாய்க் கருவானான்
நோதல் இலாத சுகமுண்டோ – என
நோன்புப் பலனாய் அணைக்கின்றான்.

இன்ப துன்பச் சக்கரத்தை – அவன்
ஏற்றே அளவாய்ச் சுற்றுகிறான்
வன்மம் அவனுக் கேதுமிலை – நம்
வழிக்கு அவனே துணையாவான்.

ஆசைப் பட்டு வருந்தாதே – என
அன்பாய் அறிந்து சொல்கின்றான்
பாச வலையில் சிக்காமல் – கருணை
பழகிக் கொள்ள அருள்கின்றான்.

உதவிக் கரமாய் உருமாறி – நீ
உயிர்கள் மகிழப் பழகென்றான்
எதையும் இறையாய்ப் பார்த்தாலே – என்
இருப்பை உணர்வாய் எனச்சொன்னான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *