திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்

1

சேசாத்திரி ஸ்ரீதரன்

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்

துரோகம் என்றால் இரண்டகம், நம்பிக்கை குலைத்தல், நன்மதிப்பை பாழடித்தல் என்று கொள்ளலாம். இதில் ஒருவரை ஒருவர் மோசம் செய்வது என்றில்லாமல் இராசதுரோகம், ஊர்த்துரோகம், இனத்துரோகம், சிவத்துரோகம் என்பனவும் உண்டு. சிவத்துரோகம் என்பதற்கு சிவநெறிக்கு புறம்பாக நடத்தல் இதாவது, சிவன் கோவில் சொத்துகளை மோசடி செய்தல், களவாடுதல் ஆகியன அடங்கும். இதற்கு அக்காலத்தே கடும்தண்டனை இருந்தது. சிவத்துரோகத்தை புரிந்தவர் பெரும்பாலும் சிவன் கோவில் ஊழியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பிராமணர், வெள்ளாளர்  ஆகியோரே ஆவர். இந்த குற்றத்தை கண்டுபிடித்தவரும் பிராமணர் வெள்ளாளரே ஆவர். கஜினி முகம்மது, மாலிகாபூர் போன்றோர்  பல கோவில்களை இடித்துபோட்டு பொன்னும் பொருளுமாய் கொள்ளையிட்டுச் சென்றனர். அதற்கு காரணம் அவர்களிடத்தில் உருவ வழிபாட்டு நம்பிக்கை இல்லை என்பதும், பிறமத அவமதிப்பு ஆகியனவே காரணம். ஆனால் சிவன் கோவிலில் ஊழியம் செய்து கொண்டு மோசடியிலும் களவிலும் ஈடுபடும் செயலும் இத்தகையதன்றோ என எண்ணத் தோன்றுகிறது, இதாவது சிவன்பால் நம்பிக்கை இன்மை என்பதே.  இது குறித்த சில கல்வெட்டுகள் அக்காலத்தே இருந்த சட்ட முறைமைகளை எடுத்துக் காட்டுகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் திருத்தளீசுவரர் கோவில் முதல் சுற்றில் உள்ள தென் சுவரில் பொறிக்கப்பட்ட  15 வரிக் கல்வெட்டு. இடத்தேவைக்காக சாய்வுக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ ஸகாப்தம்  1309 ன் மேல் செல்லாநின்ற ப்ரபவ வருஷத்து மேஷநாயற்று இரண்டாந்தியதியும் பூர்வ்வபக்ஷத்து நவமியும் ப்ரஹஸ்பதிவாரமும் பெ ற்ற பூசத்து நாள் கேரளசிங்க வளநாட்டு ப்ரஹ்மதேய ந்திருப்பத்தூர் உடையார் திருத்தளியாண்ட நாயினார் கோயிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்ரீகாரியஞ் / செய்வார்களும் மாடாபத்தியஞ் செய்வானும் முப்பது வட்டத்து ஸிவப்ராஹ்மணரும் தானத்துக் கமைந்த தானத்தாரும் ஆக இவ்வனைவோமும் இக்கோயிற் /  கணக்கு ப்ரஹ்மப்ரியனுக்கும் இன்னாட்டு மட்டியூரான ந்ருபசேகரச் சதுர்வ்வேதி மங்கலத்து சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானுக்கும் அதளையூர் / நாட்டு தேனாற்றுப்போக்கு சிறுவயலுடையான் வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும் கணக்கெழுத்துக் காணியாட்சி விலைப்ரமாணம் பண்ணி / க்குடுத்த பரிசாவது கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல் வ / ழக்கமும் இல்லையாயிருக் கச்சிதே தானறிந்ததாக ஸிவத்ரோகமாக காணாமல் களவிலே ஆயிரத்தெழுநூற்றுத் தட்டானை ஆட்பிடித்து கற்தச்சன் அலைவாயுகந் / தானைக் கொண்டு தன்னுதென்று கல்வெட்டுவிக்கையில், இப்படி செய்த இந்த வெளிப்பட்டு ஸிவத்ரோகம் வெளிப்பட்டு அம்பலத்தாடுவோன் ஓடிப்போகையில் தட்டானை / யுங் கற்தச்சனையுங் கைக்கொண்டு கண்மாளர் கைய்யிலே காட்டிக்குடுத்து கண்மாளரும் இவர்களை அழியச் செய்து தானத்துக்கு பொருந்த ப்ராய / ச்சித்தம் பண்ணிவிடுகையாலும் இந்த ஸிவத்ரோகியான அம்பலத்தாடுவான் முன்னில்லாமல் ஓடிப்போகையாலும் கோயிற் கணக்கெழுத்துக் காணியாட்சியில் ப்ரஹ்மப்ரியன் காணியாட்சி ஒன்று பாதி நீக்கி இவனோ பாதி ஒன்று பாதிக்கும் விலை நிச்சயித்த ஆடூர் பணம் 300. இதில் தேவர் விசையாலய தேவற்கு கற் / பூர முதலாக குடுத்த ஆடூர் பணம் 200 ஸ்ரீ பண்டாரத்துக்கு முதலாக பற்றின ஆடூர் பணம் 100 ஆக ஆடூர் பணம் 300. இப்பணம் முன்னூற்றுக்கும் கணகெழுதுத்துக் காணி / யாட்சியும் ஸுதந்த்யங்கள்  எப்பேற்பட்டனவும் சந்த்ராதித்யவல் செல்லவிற்று விலை ப்ரமாணம் பண்ணிக்குடுத்தோம் உடையார் திருத்தளியாண்ட நாயினார் கோயிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்ரீ காரியஞ் செய்வார்களும் மாடாபத்தியஞ் செய்வானும் முப்பது வட்டத்து ஸிவப்ராஹ்மணரும் தாநத்துக் கமைந்த / தாநத்தாரும் ஆக இவ்வோமும் ப்ரஹ்மப்ரியருக்கும் கரியமாணிக்காழ்வாநுக்கும் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும்.

பூர்வபக்ஷம் – வளர்பிறை; ஸ்ரீ காரியம் – திருப்பணி; மாடாபத்தியம் – மடைபள்ளி நிர்வாகம்; தானத்துக் கமைந்த தானத்தார் – அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர்; பரிசாவது – விதம், எப்படி எனில்; முதலெழுத்தும் முதல் வழக்கமும் – தந்தை முகவரியும் முதல் மதிப்பும்; காணாமல் – கண்டுபிடிக்கமுடியாதவாறு; களவிலே – திருட்டுத்தனமாக; கைக்கொண்டு – பிடித்துவைத்து; காட்டிக் கொடுத்து – பிடித்துக் கொடுத்து.

விளக்கம்: சக ஊழி 1309 பிரபவ ஆண்டு மேழஞாயிறு 2-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் நிகழும் போது (1387, மார்ச்சு 28) வெட்டப்பட்ட கல்வெட்டு. இது விசயநகர ஆட்சிக்காலம்.

கேரளசிங்க வளநாட்டில் பிரமதேயமான திருப்பத்தூர் திருத்தளியில் அமைந்த இறைவர் கோவிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர திருப்பணி செய்பவர்களும் மடைபள்ளி நிர்வாகம் செய்பவனும், முப்பது வட்டத்து சிவபிராமணரும், அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர் ஆக எல்லோரும் கூடி இக்கோயிற்  கணக்கு பொறுப்பில் உள்ள பிரம்மபிரியனுக்கும், சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானுக்கும், வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும் கணக்கெழுத்திற்கான காணியாட்சியை விலைப்பிரமாணம் செய்துகொடுத்தது எப்படி எனில் பிரம்மபிரியன் தனக்கு உதவியாக கணக்கு பணிக்கு அமர்த்திய கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு இக்கிராமத்தில் வீடும், இன்னார் மகன் என்ற முகவரியும், முதல் மதிப்பும் இல்லாத போதிலும் இவ்வாறு இருப்பதாக காட்டி வீடும், பிற சலுகைகளும் தனக்கு வர வேண்டி எவரும் கண்டு பிடிக்காதபடி திருட்டுத்தனமாக ஆயிரத்தெழுநூற்று தட்டானை கண்டு அவன் மூலம் கல்தச்சன் அலைவாயுகந்தானை ஏற்பாடு செய்து கொண்டு இந்த கிராமத்து வீடு தனதென்று கல்வெட்டிக் கொண்டான். இது ஒரு சிவத்துரோகம் ஆகும் என்கின்றது கல்வெட்டு. இப்படி மோசடி செய்த சிவத்துரோகச் செயல் வெளிப்பட்டு அம்பலத்தாடுவான் ஊரைவிட்டு எங்கோ ஓடிப்போய்விட  கோவிலார் தட்டானையும் கல்தச்சனையும் பிடித்து வைத்து கம்மாளரிடம் விசாரிப்பதற்கு ஒப்படைத்து விடுகின்றனர். கம்மாளர் இந்த இருவரையும் தக்கபடி அடித்து உதைத்து கோவிலுக்கு பொருத்தமான வகையில் கழுவாய் செய்ய வைத்து விடுகின்றனர். சிவத்துரோகி அம்பலத்தாடுவன் கண்ணில்படாவாறு எங்கோ ஓடிப்போனமையால் பிரம்மபிரியன் கோயில் கணக்கெழுதும் காணியாட்சியில் ஒருகாணியைப் இரு பாதியாகப் பிரித்து ஒரு பாதியை தான்  வைத்துக்கொண்டு அதற்கு விலை கொடுத்துவடுகின்றான் மற்றொரு பாதியை அம்பலத்தாடுவான் பங்காக கோயிலாரிடம்  ஒப்படைக்கின்றான்.அதை கோவில் நிர்வாகத்தார் ஊராருக்கு விற்றுவிடுகின்றனர். இப்படியாக 300 ஆடுர் பணம் விற்ற காசாக சேர்கின்றது. அதில் 200 ஆடூர் பணம் விசையாலைய தேவருக்கு கற்பூர முதலாக கொடுக்கப்பட்டது. எஞ்சிய100 ஆடூர் பணம் கோவில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிரம்மபிரியனுக்கு நிலமும் அதன் உரிமைகள் அனைத்தும் விற்கப்பட்டு கோவிலாரால் விற்றுஆவணம் செய்து தரப்பட்டது. திருத்தளி இறைவர் கோயில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர திருப்பணி செய்பவர்கள், மடநிர்வாகம் செய்பவனும், முப்பது வட்டத்து சிவப்பிராமணரும், அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர் ஆக இவரனைவரும் பிரம்மபிரியன், கரியமாணிக்காழ்வான்,  ஆயப்பிள்ளை ஆகிய இம்மூன்று கணக்கருக்கும் விலைப் பிரமாணம் செய்து கொடுக்கின்றனர் .

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 158-161, (A.R.No 126  of 1908)

இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் திருத்தளீசுவரர் கோவில் முதல் சுற்றில் உள்ள தென் சுவரில் பொறிக்கப்பட்ட  19 வரிக் கல்வெட்டு. இடத்தேவைக்காக சாய்வுக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ ஸகாப்தம்  1309 ன் மேல் செல்லாநின்ற ப்ரபவ வருஷத்து மேஷநாயற்று இரண்டாந்தியதியும் பூர்வ்வபக்ஷத்து நவமியும் ப்ரஹஸ்பதி வாரமும் பெ ற்ற பூசத்து நாள் கேரளசிங்க வளநாட்டு ப்ரஹ்மதேய ந்திருப்பத்தூர் மூலவ[ரு]ஷ மஹாஸபையோம் நம்[மூர்]க்கணக்கு  மத்யஸ்தன் ப்ரஹ்மப்ரியனுக்கும் / இன்னாட்டு ப்ரஹ்மதேயம் மட்டியூரான நிர்ப்பசேகரச் சதுர்வ்வேதி மங்கலத்து மத்யஸ்தன் சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானான மஹாஜன ப்ரியனுக்கும் அதளையூர் / நாட்டு தேனாற்றுப்போக்கு சிறுவயலுடையான் வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் [ஆக] இவ்வனைவற்கும்  கணக்கெழுத்துக் காணியாட்சி விலைப்ரமாணம் பண்ணி / க்குடுத்த பரிசாவது நம்மூர்க்கண் கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல் / வழக்கமும் இல்லையாயிருக் கச்சிதே ஸபை தனக்குக் கல்வெட்டிக்குடுத்ததாக அம்பலத்திலே ஸபையை /  அரியாமல் க்ராமத்ரோகமாகக் காணாமல் களவிலே நம்மூர் ஆயிரத்தெழுநூற்றுத் தட்டானை ஆட்பிடித்து இவனைக் கொண்டு திருக்கோட்டியூர் கல்தச்சன் / அலைவாயுகந்  தானை  அழைப்பித்து நங் க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல்  வழக்கமும் தன்னுதென்று களவிலே கல்வெட்டுவிக்கை / யில், இப்படி செய்த  க்ராமத்ரோகம் வெளிப்பட்டு இ[வ்வம்]பலத்தாடுவான் ஓடிப்போகையில் தட்டானைய்யும் [க]த்தச்சனையுங் கைக்கொண்  டு கண்மாளர் கைய்யிலே காட்டிக்குடுத்து இவர்க[ளை] _ _ _ _  றைக்கு கண்மாளர் அழியச் செய்து ஸபைக்குப் பொருந்த ப்ரா ச்சித்தம் பண் / ணிவிடுகையில் இந்த க்ராமத்ரோகம் செய்த அம்ப[லத்தா]டுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான்  முன்னில்லாமல் ஓடிப் / போகையில் நம்மூற்கணக்கெழுத்துக் காணியாட்சியில் ப்ரஹ்மப்ரியன் காணியாட்சி ஒன்று பாதி நீக்கி இவனோ பாதி ஒன்று பாதிக் / கும் இவன் ஒற்றி விலை கொண்ட நிலக்காணியாட்சிக்கும் விலை நிச்சயித்த ஆடூர் பணம் 300. இதில் இவன் ஒற்றி விலை கொண்ட காணியா / யாட்சியாய் பலற்கும் ஸபா விநியோகமாக விற்ற நிலத்துக்கு ஆடூர் பணம் 100 நீக்கி தேவர் விசையாலய தேவற்கு கற்பூர முதலாக குடுத்த ஆடூர் பணம் 200. / இப் பணம் இருநூற்றுக்கும் கணக்கெழுத்து காணியாட்சியும் ஸு[த]ந்த்யங்கள்  எப்பேர்பட்டனவும் சந்த்ராதித்யவல் செல்லக் கல்வெட்டிக் குடுத்தோம் / மூலபருஷ மஹாஸபையோம் இந்தக் கொள்கின்ற மு[றைக்]கும் நங்க்ராமத்தில்  ப்ரமப்ரியன் மனையை அடுத்த ஒருமனை சேர்ம்மா / னமாக அனுபவிப்பார்களாகவும் இப்படி சம்மதித் கணக்கெழுத்துக் காணியாட்சி விலை ப்ரமாணம் பண்ணிக்குடுத்தோம் மூலபருஷ மஹா / ஸபையோம் ப்ரஹ்ம்ப்ரியனுக்கும் கரியமாணிக்காழ்வானுக்கும் ஆயப்பிள்ளைக்கும் அருளால் ஸபைக் கணக்கு மத்யஸ்தன் பெருமாண்டான் /  மயிலேறுவானான ப்ரஹ்மப்ரியன் எழுத்து.

காணியாட்சி – நில உரிமை, மூலபருஷ மகாசபை – கோவில் நிர்வாக சபை,

விளக்கம்: சக ஊழி 1309 பிரபவ ஆண்டு மேழஞாயிறு 2-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் நிகழும் போது (1387 ல்) வெட்டப்பட்ட கல்வெட்டு.  மேற்கண்ட கல்வெட்டின் அதே செய்தியை கொண்டுள்ளது. ஆனால் இதில் சிவத்துரோகம் என்ற முறையில் அணுகாமல் கிராமத்துரோகம்ர ஊர்த்துரோகம் என்ற முறையில் அணுகி உள்ளனர். இக்கோயிற்  கணக்கு பொறுப்பில் உள்ள பிரம்மபிரியன், சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வான், வேண்டவளந்தான் ஆயப்பிள்ளை ஆக இம்மூவரும் இக்கல்வெட்டில் ஊர் மத்தியஸதராக அறியப்படுகின்றனர். அம்பலத்தாடுவான் தனக்கு ஊர்ச்சபை வீடு கொடுத்ததாக கல்வெட்டிக் கொள்கிறான். இந்த மோசடி அறியப்பட்டதும் அம்பலத்தாடுவான் ஊரைவிட்டு ஓடிப்போகின்றன். பிரம்மபிரியன் ஒரு காணி நிலத்தை பாதியாக பிரித்து தான் ஒரு பாதியை வைத்துக் கொண்டு எஞ்சிய பாதியை அம்பலத்தாடுவான் பங்காக அறிவிக்கிறான்.  அம்பலத்தாடுவானுடைய பறிமுதல் செய்த நிலத்தில் பாதியை வைத்துக் கொண்டு அதை பிரம்மபியனே விலைக்கு வாங்கிவிடுவதால் அதற்கு விற்று ஆவணமும் அடுத்த பாதி நிலத்தை பலருக்கும் விற்று அவற்றுக்கும் விற்று ஆவணம் கொடுத்தனர் கோவில் நிர்வாக சபையார். இக்கிராமத்து நிலத்தை வேறு எவரும் வெளியில் இருந்து வந்து வாங்கி பயிர் செய்யப்போவதில்லை. எனவே  உள்ளூரான் பிரம்மபிரியன் வாங்கியதில் தவறு ஏதும் இல்லை. அதே வேளையில் பிரம்மபிரியன் வீட்டிற்கு அடுத்துள்ள வீட்டை கணக்கர் மூவரும் சேர்ந்தே அனுபவிப்பதற்கான உரிமை ஆவணத்தையும் கோவில் நிர்வாக சபையார் கொடுக்கின்றனர். இந்த வீட்டையும் விலைக்குத் தானே விற்றிருக்க வேண்டும். ஏன் இந்த மூன்று கணக்கரும் காசில்லாமல் வீட்டை அனுபவிக்க கோவில் நிர்வாக சபையார் ஒப்புக் கொண்டனர் என்று புரியவில்லை.  இதைத் தான் தன்னதென்று அம்பலத்தாடுவான் கல்வெட்டிக் கொண்டானா? தெரியவில்லை.

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 162-163.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்பெரும்பூதூர் வட்டம், குமட்டூர், 10 வரிக் கல்வெட்டு

ஸ்வஸ்த்திசிரி திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரைகொண்ட பாண்டியன் முடிதலையுங் கொண்டருளிய சிரிகுலோத்துங்க சோழதேவருக்கு யாண்டு பதினாறாவது விக்கிரமசோழ வளநாட்டு இன்னம்பர்நாட்டு உடையார் சிரிவி_ _ _ _ கோயிலில் கும்பிட்டு இருக்கும் ஆண்டார்கள் பெரியதேவர் இராசாதிராச தேவர்க்கு யாண்டு ஏழாவது நாளிலே பழையனூருடையார் / பல்லவராயருக்கு உடையார் தேவதானமான கமுகுதிருநந்தவன மாத்தலாறு நூற்றுநால்பது கமுகாக்கி கல்வெட்டவேமும் விண்ணப்பஞ்செய்து பிரசாதம் செய்தருளிச் செய்யும்படி பெறவேணுமென்று அவரும் விண்ணப்பஞ் செய்தும் _ _ _ _  இருந்து வருகையாலும் திருக்கொடிக்கமுகும் தெண்டும் திறப்பிலே கைவிலைக் கொண்டு வெட்டிவந்து இப்படியாய் வருகிற / கமுகை இக்கோயில் மாடாபத்தியம் பழுவூர் ஆண்டான் பதிநாலாவதும் பதினைஞ்சாவதும் கமுகு தன்னகத்துக்கு வெட்டியும் காசுக்கு வெட்டி விற்றும் தன் சம்மந்திக்கு வெட்டிக்குடுத்தும் இப்படியாக அழித்து கமுகு மூவாயிரத்தி இருநூற்றுக்கும் பாக்கு முப்பத்திரண்டு நூறாயிரமும் பதினைந்தாவது _ _ _ _  நாற்பத்திராயிரத்தறநூற்று சின்னமும் மின்னிலே மேனோக்கிப் பாழாய்த் தேவர்கடமை இழந்து வருகையாலு மித்தேவருக்கு தானத்தாரும் / கும்பிட்டிருக்கும் ஆண்டார்களும் இருந்து முதலாய் சீபண்டாரத்து ஒடுக்கினகாசு முதலிடாதேயிவன் தான் கையுற்றக் காசு முப்பத்தினாயிரத்தி நானூறு மிவன் பேரவரியோலை ஏற்றத்தாலுமிவன் கல்லிமுக்கி வாங்கிய காசிலுமிவன் சிவநாமத்து வரிசைக்கு முதநிலத்தாலும் கமுகு கடைமையாலும் _ _ _ _  அஞ்சாவது ஆனிமாதத்தே திருக்காப்புக்கொண்டு கிடந்தவாறே ஆண்டார்கள் பழுவூருடையானை யழைத்து முறையாட்டம் கேட்க புக இவன் புழக்கடையே விழுந்து ஓடிப்போனவாறே யிவனகத்தை சோதிச்ச இடத்து நாற்பதில் கல  நெல்லும் கோயிற்குறியான திருப்பரிகலமும் கண்டு எடுக்கையாய் மற்றும் பல  சிவதுரோகம் முன்னாளிவன்  செய்கையாலும் இவன் வீட்டை இடித்து குலோத்துங்க சோழ வினாயகப்பிள்ளையாரை எழுந்தருளிவித்து இவனகத்தே கண்டு எடுக்காயாயிவனும் சிவதுரோகம் செய்கையாலும் சிரீபண்டாரத்து தன்கையுற்ற காசாலுமிப்பல / படியால் முதலாந காசிலி காசுக்கு திறப்பில் சிரீபராந்தக சதுர்வேதி மங்கலத்திலத்து இவன் தனக்கு கொண்ட காணியாக்கக் கொண்ட கமுகும் விளைநிலமும் திருநாமத்து சிரீபண்டாரத்து கொண்டகாசுக்கு சிரீவீரநாராயணர்க்கு விண்ணப்ப _ _ _ _ பிடாரி வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ கிழக்கடைய நிலம் ஒருமாவரைக்காணி நீக்கி தெற்கடையதிலம் ஒருமாவரைக்காணியில் தெற்கடைய நிலம்முக்காணியில் / கிழக்கடைய ஒரு பூ நிலம் காணி அரைக்காணியும் எட்டாங்கண்ணாற்று நாலஞ்சதிர நிலம் இரண்டுமாமுக்காணியும் கோதண்டராம வாய்க்காலில் _ _ _ _வடக்கடைய நிலம் நான்மாவரையில் கிழக்கடைய நிலம் ஒருமாவரையின் உத்தேசம் நீக்கி இதன்மேற்கு நிலம் முக்காணியில் இதன் கிழக்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகை நீக்கி இதன்மேற்கு கமுகு நிலம் காணிமுந்திரிகையும் இதன் தெற்கடைய  நிலம் நான்குமாவரையில் கிழக்கடைய நிலம் இரண்டுமாக்காணியில் தெற்கடைய நிலம் ஒரு மாவரைவரை_ _ _ _  நிலம் அரையான்த தேசம் நீக்கி / இதன் தெற்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகையில் முந்திரிகை கீழ்கால் நோக்கி மேற்கடைய நிலம் முந்திரிகை கீழ் முக்காலும் இதன் மேற்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகையில் தெற்கடைய நிலம் அரைக்காணி நீக்கி வடக்கு_ _ _ _ வதிக்கு மேற்கு வானவன்மாதேவி வாய்க்காலுக்கு வடக்கு நாலாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்து தெற்கடை ய நிலம் நான்மாவரையில் / மேற்கடைய நிலம் முக்காணியில் வடமேற்கடைய நிலம் மாகாணி யிப்படியாக காசுக்குடலாக திருநாமத்துகாணியாக கூட்டினோம். இது பன்மாஹேஷ்வர ரக்ஷை.

ஆண்டார்கள் – அடியார்கள்; கமுகு திருநந்தவனம் –பாக்குதோப்பு; முறையாட்டம்- கணக்கு.

விளக்கம்: கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதினாறாவது ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1194ல்)  வெட்டப்பட்டது. இன்னம்பர் நாட்டில் இறைவனை கும்பிட்டு இருந்த அடியார்கள் இரண்டாம் இராசாதிராசனின் 7-ம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ.1173 ல்) பழையனூர் பல்லவராயரிடம் வேந்தரின் தேவதானமாக 140 மரங்கள் கொண்ட பாக்குத் தோப்பை இறைவனுக்கு எழுதித்தர வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள். பல்வரையரும் இறைவனுக்கு பிரசாதம் செய்தருளும்படி பாக்குத் தோப்பை தேவதானமாக எழுதிக் கொடுத்தார். கோவில் மடைபள்ளி நிர்வாகி பாக்குத்தோப்பிற்கே சென்று விலை கொடுத்து பாக்கை வெட்டிவருகின்றான். இப்படி வரும் பாக்கை தன்வீட்டிற்கும் கொண்டு வந்து, பிறருக்கு காசிற்கு வெட்டி விற்றும், தன் சம்பந்திக்கு கொடுத்தும் அப்படியாக பச்சைப் பாக்கை  3200 காசிற்கும், 3200000 பாக்கை 42,600 காசிற்கும் விற்றதனல் கோவிலுக்கு முன்புவந்துகொண்டிருந்த நில வருவாய், பாக்கு வரி இழப்பு ஏற்பட்டது. பல்வரையரும், கோவில் பொறுப்பாளரும், இறைவனைத் தொழும் அடியார்களும் கொடுத்த காசை 30,400 இவன் கோவில் கருவூலத்தில் சேர்க்காமல் தானே கையாடல் செய்துகொண்டான். இதனால் சிவநாமத்து நில வருவாயும், பாக்கு வரியும் வராமல் போனது. ஆடிமாதத்தில் காப்புகட்டிய அடியார்கள் இந்த மடைபள்ளி நிர்வாகியை கணக்குதரும்படி கேட்டனர். அவன் தன் விட்டின் புழக்கடைவழியே ஊரைவிட்டு ஓடிப்போனான்.அவன் வீட்டை வந்து சோதித்தபோது 40 கல நெல்லும் கோயில் திருப்பரிகலமும் கண்டு எடுத்தனர். இன்னும் பல சிவதுரோகம் செய்திருந்ததினால் இவன் வீட்டை இடித்து பிள்ளையார் கோவில் கட்டினர். இவன் பாக்கு விற்ற காசில் ஊரில் பல்வேறு இடங்களில் வாங்கிப் போட்டிருந்த நிலங்கள் அத்தனையும் பறிமுதல் செய்து அவற்றை இறைவன் பெயருக்கு உரிமை ஆக்கினர். மடைபள்ளி நிர்வாகி பழுவூர் ஆண்டான் ஒரு பிராமணர் ஏனென்றால் மடைபள்ளியில் பிராமணரே பணியாற்றுவர்.

பார்வை நூல்: தமிழ்க் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக் 292-293, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம். 0-9886769865

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *