சேக்கிழார் பா நயம் – 47
-திருச்சி புலவர் இராமமூர்த்தி
ஒருநாள் திருவாரூர் வீதி வழியே தம் சேடியர்களோடு திருக்கோயில் நோக்கிப் பரவையார் சென்றார். அவர் முன்பு கைலாயத்தில் மலர்களைக் கொய்து தம் நாயகியாகிய உமையம்மை பூசைக்கு உதவியவர். அதன் தொடர்ச்சியாகத் திருவாரூரிலும் புற்றிடங் கொண்டாருக்கும், அன்னை கமலாம்பிகைக்கும் வழிபாடு செய்யப் பூக்களைப் பறித்து அளித்தார். அவற்றை இறைவியின் நிர்மாலியமாய்த் தலையில் சூடிக்கொண்டார். அதனால் அப்பூக்களின் தெய்வமணம் ஊரெங்கும் கமழ்ந்தது!
இறைவழிபாட்டை மட்டுமே அவர் தம் அன்றாடக் கடமையாகக் கொண்டிருந்தார். திருவாரூர்த் தியாகராசப் பெருமானின் திருவுருவைக் கண்ணாரக் கண்டு மகிழ்வதற்காகத் தம் சேடியருடன் மெல்ல நடந்து சென்றபோது சுந்தரர், இறைவன் திருவருளினால் பரவை நாச்சியாரைக் காண நேர்ந்தது. அப்போது அவர் திருவடிகளில் சிலம்பும், இடையில் மேகலையும், கூந்தலில் சூடிய மலர்களைச் சூழ்ந்த வண்டுகளும் ஆரவாரம் செய்தன!
அவருடைய பேரழகு மிகப்பேரழகியான கமலாம்பிகைக்குத் திருப்பணி செய்தமையால் தமிழகமே போற்றிப் புகழும் அளவுக்கு ஒளிவீசி விளங்கியது!
அதனால் அவள் அழகிய பாதங்களில் அணிந்திருந்த சிலம்புகள், ’’ இவள் பாதங்கள் இந்தப் பாருலகினையே வென்று தம் அடிமைப் படுத்தி விட்டமையால். இந்த நிலமே இவற்றைப் பணிந்து தாங்குகின்றன!’’ என்று ஆரவாரம் செய்கின்றன! ஆகவே அவள் பாதங்கள் நிலவுலகையே அடிமைப்படுத்தின! அடுத்து அவளுடய இடை, அழகிய நாகம்போன்ற அல்குலின் மேலே மணிகள் கட்டிய மேகலைகளை அணிந்து விளங்குகின்றது. ஆகவே அவர் இடையில் அணிந்த மணிமேகலை, ‘’இவள்அழகு கீழே அரவம் திகழும் நாகலோகத்தினை அடிமைப்படுத்தி விட்டது,! என்பதைப் புலப்படுத்தி ஆரவாரிக்கின்றன! அடுத்து பரவையாரின் கரிய மேகத்தை வென்ற கூந்தலில் சூட்டிக்கொண்ட பூக்களின் மணத்தையும் தேனையும் நுகரும் ஆவலில் வண்டுகள் சூழ்ந்து பறந்து, ரீங்காரிக்கின்றன! வண்டுகள், ‘’ எம் தலைவியின் கூந்தலின் கருமைக்கு வானத்தின் மேகங்கள் தோற்றுவிட்டன, அதாவது வானுலகே தோற்றுவிட்டது!’’ என்று அறிவிக்கின்றன!
மூன்று அங்கங்கள் முறையே மூன்று உலகங்களை வென்றதற்கு அடையாளமாக, மூன்றுபொருள்கள் ஆர்த்தன. மேலும் – நடுவும் – கீழும் உள்ளன மூவுலகங்கள் என்பர். இவையேசுவர்க்க மத்திய பாதலமாம்.
மூவுலகையும் வெல்லுதலாவது இம்மூன்று உலகத்திலும் இவருக்கு ஒப்பாரும் மிக்காரு மில்லையாதல். தமிழ் நூற்களின்படி இதுவே தலைவியினது இலக்கணமாதலின் இவ்வாறு கூறினார். ஒவ்வோர் உலகை வென்றதற்கு ஒவ்வோர் பகுதி காரணமும் உதாரணமு மாயிற்று!.
இனிப்பாடலை முழுவதும் படித்துப் பயில்வோம்.
“அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப
மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும்
பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில்.”
இதனை உரையாசிரியர் மேலும் விளக்குகிறார். பரவையாரது அடிகள் மண்ணை அடிப்படுத்தி மிதித்தற் றொழிலாலும், அல்குல் அரவுலகை அரவரசாகிய நாகத்தினும் மிக்க வடிவினாலும், காஞ்சியில் உள்ளனபோன்ற மணிகள் அரவுகளில் இல்லாமையினாலும், குழல் மேகத்தின் மிக்க நிறத்தாலும் வென்றதை, முறையே, அங்கங்குள்ள சிலம்பும் – காஞ்சியும் – வண்டுகளும் தெரிவித்து ஆர்த்தன என்க. மண் அடிப்பட்டது; விண்பணிந்தது; ஆனால் அரவுலகு உறுதியாய் வெல்லப்பட்டது; ஆதலின் இதைத் தெரிவிக்குமாறு ‘துணிவு கொண்டு காஞ்சி ஆர்க்க’ என்றமை காண்க.
விண் – புண்ணியத்தால் வரும் இன்பானுபவமும், மண் – புண்ணிய பாவங்களால் வரும் மிச்சிரமாகிய கலப்பு அனுபவமும் பெறும் இடங்கள் ஆதலின் இவற்றைக் கீழ்ப்படுத்தலே அமையும். ஆனால் அரவுலகு என்ற கீழுலகம் பாவத்தால் விளையும் துன்பானுபவத்திற்கே உரியதாதலின் அது முற்றும் வெல்லப்பட்டொழிதல் வேண்டும் என்பதுபற்றி “வென்ற துணிவுகொண்டு“ என்றதாம். துணிவுகொண்டு – அடியும் குழலும்போல வெளித் தோற்றாது, அல்குலினது செயல் காஞ்சி யணியின் தன்மையால் அனுமானித்துத் துணியப்படு பொருளாதலும் குறிப்பாம்.
அடி – அல்குல் – குழல் – பாதாதிகேச வருணனை. மண்ணும் அரவுலகும் அன்றி விண்ணும் என்ற பொருளில்வந்த இறந்தது தழுவிய எச்சவும்மை. சிறப்பும்மையுமாம். பரவையார் என்ற பெண்மணியின் அவதாரத்தால் சிவத்துவம் விளங்க நாகலோகம் தூர்ந்து ஒழியக் காரணமாயிற்று என்ற குறிப்பும் காண்க. இதனால் பரவையார் மறுகுசூழ ஒப்பற்ற இறைவனை வணங்கப்போந்த நடைச் சிறப்பும், பயனும் கூறியபடி.’’ என்று உரையாசிரியர் விளக்குகிறார்!
பரவை நாச்சியார் இறைவனது கருணையால் நிலவுலகிற்கு அனுப்பப் பெற்றமையால், அவருடைய தனிச் சிறப்பு வாய்ந்த தகுதி இப்பெரிய புராணத்தில் விளங்கும். அதனாலேயே இறைவன் தம் திருப்பாதங்கள் ஆரூர் வீதியில் படிய, இருமுறை தூது நடந்தார். இப்பாடல் பரவை நாச்சியார் மற்றைய பெண்களிலும் மேம்பட்டவர் என்பதை சேக்கிழார் பாநயம் புலப்பட
விளக்குகிறார். பெண்ணின் பெருமையைப் போற்றும் பகுதி இது.