பழுதற்ற பவுத்திர வரிகள் தான்!
உழுது உலகையெழுப்பும் வரிகள் தான்!
எழுது! எழுது! எழுத்து வாசிக்கப்படுகிறதா!
எழுதுவது யாரெனப் பார்ப்பதே தோல்வி
உழுத்த சிபாரிசு பேதம் பார்த்தல்
எழுத்தைக் காட்டினுள் வேகமாய்த் தள்ளுது.
எழுத்திற்கு வயதில்லை பிறகு ஏன்
எழுதுபவன் இளமையா, முதுமையாவென ஒப்பீடு!
தொழுதிடும் வரிகள் நேர்த்தியைப் பார்!
வழுவற்ற வரிகளா! கம்பன் பாரதியின்
விழுதுகளா என்று தமிழைப் பார்!
கழுவி ஊற்றாதே கருத்துடை எழுத்துகளை!
எழுத்து நான்கு வயதிலொரு கூறு
எழுமையாம் நாற்பது வயதிலொரு கூறு.
எல்லாமே இனிமை இல்லையது சேறு.
வல்லமையோடு வாரியெடு இது ஆறு!
வாரியிறைக்க குளம் குட்டையல்ல
வல்ல தமிழை நெருங்கி அண்டு!
கொல்லாது குடையும் இன்ப வண்டு!
இல்லாத ஆனந்தம் நிச்சயம் உண்டு!
நல்ல எழுத்து தலைநிமிர்ந்து நிற்கும்
அல்லல் செய்யும் கரகாட்டத் தினவெடுப்பு
நில்லாது எழுத்தாணி எழுதி வடித்திடும்
நெல்லாக விளைந்து நூலாகி உருவெடுக்கும்.
(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம்
தொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
ஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை.
எனது நூல்களாக
2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு
2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ”..குழந்தைகள் இளையோர் சிறக்க..”
2007ல் உணர்வுப் பூக்கள் – தொகுப்பு – இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் ” எனது நூல்கள்” என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம்.
1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம்.
அதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ”பெட்டகோ” எனும் தகுதி பெற்றேன்.
14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.