நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் 

62. இடுக்கண் அழியாமை

குறள் 621:

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வ தஃதொப்ப தில்

சங்கடம் வரும்போது கலங்காம சிரிக்கணும். சங்கடத்த எதித்து செயிக்கதுக்கு அதப்போல வேற இல்ல. 

குறள் 622:

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்

வெள்ளம் வருதது கணக்கா சங்கடம் கரபுரண்டு வந்துச்சின்னாகூட அறிவாளிங்க அதப்பத்தி மனசுக்குள்ளார நெனச்ச நேரத்துலயே அது விலகி ஓடிப்போவும். 

குறள் 623:

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்

சங்கடம் வருதப்போ வருத்தப்படாம இருக்கவங்க சங்கடத்துக்கே சங்கடத்த உண்டாக்கி அதத் தோக்கடிப்பாங்க.

குறள் 624:

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

கரடுமுரடான பாதையில கூட வண்டிய இழுத்துக்கிட்டு போகுத காள மாடு கணக்கா அசராம முனையுதவனுக்கு வந்த சங்கடம் சங்கடப்பட்டு போவும். 

குறள் 625:

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்

தொடர்ச்சியா ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா சங்கடம் வந்தாலும் மனசு தளராதவனுக்கு அந்தச் சங்கடமே சங்கடப்பட்டுக்கிட்டு போயிடும். 

குறள் 626:

அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்

சொத்துசொகம் சேரும்போது அதுக்காக சந்தோசப்பட்டு காப்பாத்திவச்சிக்கிடாதவங்க அது கைவிட்டுப்போவும் போது வெசனப்படுவாங்களோ?

குறள் 627:

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்

ஒடம்பு துன்பத்துக்கு இடமானது னு அறிஞ்சுக்கிட்ட பெரியவங்க துன்பம் வருதப்போ அத துன்பமாவே நெனைச்சுக்கிட மாட்டாங்க.  

குறள் 628:

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்

சந்தோசத்த தேடி அலையாம துன்பத்தையும் சாதாரணமா எடுத்துக்கிடுதவன் மனசு தளர்ந்து சங்கடப்பட மாட்டான்.

குறள் 629:

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்

சந்தோசம் வார நேரம் ஆட்டம் போடாதவன் சங்கடம் வரும்போது துக்கப்படமாட்டான். 

குறள் 630:

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு

சங்கடத்த சந்தோசம் னு நெனைக்குத நெஞ்சுரம் உள்ளவங்களுக்கு பகையாளியும் பாராட்டுத பெரும வந்து சேரும். 

(அடுத்தாப்லையும் வரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *