-நாங்குநேரி வாசஶ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் 

65.சொல்வன்மை

குறள் 641:

நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று

காரியத்த சாதிக்குத மாரி பேசுததும் ஒரு சொத்து தான். அது மத்த எல்லாச் சொத்தையும் விட ஒசந்தது.

குறள் 642:

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

ஒருத்தனுக்கு நல்லதும் கெட்டதும் அவன் பேசுத பேச்சுனால வாரதால சொல்லுத வார்த்தையில கொறையில்லாமப் பாத்துக்கிடணும். 

குறள் 643:

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

கேக்குதவங்கள வசப்படுத்தி, கேக்காதவங்களும் கேக்கணும்னு விரும்புத அளவுக்கு பேசுததே சொல்வன்மை.  

குறள் 644:

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்

என்ன பேசுதோம்னு உணந்துக்கிட்டு பேசணும். அந்த சொல்வன்மையப் போல அறமும் பொருளும் வேற இல்ல.

குறள் 645:

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

தான் சொல்லுதத செயிக்க வேற சொல்லு இல்லன்னு தெரிஞ்சுக்கிட்ட பொறவு தான் அத சொல்லணும். 

குறள் 646:

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்

மத்தவங்களுக்குபிடிச்சா மாரி பேசுததும், அவுக பேசுதப்போ கவனிச்சி புரிஞ்சிக்கிடுததும் தான் அறிவாளிங்களோட செயல். 

குறள் 647:

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

தான் நெனைக்குதத மத்தவங்க ஏத்துக்கிடதாப்போல சொணக்கமில்லாம சொல்லி, துணிச்சக்காரனாவும் இருக்கவன எதித்து யாராலயும் செயிக்க முடியாது.

குறள் 648:

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்

வகையா இனிக்கப் பேசுதவர் ஏவுத வேலய ஒலகத்தார் உடனடியா கேட்டு நடப்பாங்க. 

குறள் 649:

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்

தப்பில்லாம கொஞ்சமா பேசி விளங்க வைக்கத்தெரியாதவங்க புரிய வைக்கதுக்காவ நெறையா பேசிக்கிட்டேயிருப்பாக.  

குறள் 650:

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்

தான் படிச்சத மத்தவுக விளங்கிக்கிடுத அளவுக்கு எடுத்துச் சொல்லத் தெரியாதவங்க கொத்துக் கொத்தா பூத்திருந்தாலும் வாசனை இல்லாத பூ கணக்கா தான். 

(அடுத்தாப்லையும் வரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *