அம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019

0

-விவேக்பாரதி 

நமக்கு அவள் அணைப்பு போதும்! அவளுக்கு என்ன வெண்டும்? நம்மையே வேண்டும் என்று கேட்கிறாளே! அட! யாரடா இவள் என்று பார்த்தால் அவள் பெயரே பெயராத அளவு நெஞ்சத்தில் நிற்கிறது…

என்னையே தனக்காகக் கேட்பவள் – அவள்
என்னுளே தானாகிப் பூப்பவள்
மின்னலே சிரிப்பாகக் கொண்டவள் – எனை
மீட்டவே விரல்கொண்டு வந்தவள்!
முன்னமே நிற்கின்ற மாயையள் – ஒரு
முறுவலில் சாய்க்கின்ற பூவிதழ்
அன்னையாய் அன்பளாய் வருபவள் – அவள்
ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!

சிம்மத்தின் மேல்வீற்றிருப்பவள் – பிள்ளைச்
சிணுங்கலை அறிகின்ற காதினள்
சும்மா இருக்காமல் ஓரமாய் – நின்று
சுருக்கென்று கிள்ளிச் சிரிப்பவள்!
நம்மையே அவள்தான் படைத்தவள் – எனில்
நம்முள்ளும் அவள்தான் இருப்பவள்!
அம்மாடி எத்தனைப் புதிரவள் – அவள்
ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!

கிண்ணத்தில் தேன்கொண்டு வருபவள் – பழம்
கிள்ளிநம் வாயிலே தருபவள்
கன்னத்தில் முத்தம் இழைப்பவள் – அடர்
காட்டினில் தனியாய் வசிப்பவள்!
அன்னத்தில் அமுதாய் இருப்பவள் – மக்கள்
அகத்தினில் அன்பாகி வளர்பவள்
அன்னவள் எப்போதும் எளியவள் – அவள்
ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!

பூச்சூட்டிப் பார்க்கச் சிரிப்பவள் – பகை
பொய்சூடும் நெஞ்சை எரிப்பவள்
காய்ச்சலைத் தந்தே ரசிப்பவள் – அதைக்
கவிதையாய் மாற்றிக் கொடுப்பவள்
பாய்ச்சலில் வரியற்ற புலியவள் – கொஞ்சம்
பச்சிளம் பிள்ளைபோல் வாழ்பவள்!
ஆய்ச்சியர் பால்போல் குணத்தினள் – அவள்
ஆதிதுர்க்கை எனும் பெயரினள்

பெயர்சொல்லிக் கூப்பிட வருபவள் – குணம்
பெயராத வண்ணமே தருபவள்
மயல்வந்து சாய்க்கின்ற வேளையில் – சூலம்
மழுவேந்திக் காத்திடும் தைரியள்
புயல்வந்து நின்றதாய்த் தெரிபவள் – சிறு
பூவுக்குள் தேன்போல் இனிப்பவள்
அயலென்ப தில்லாத அசலிவள் – எங்கள்
அம்மை துர்க்கை எனும் பெயரினள்!!

03.10.2019

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *