-நாங்குநேரி வாசஸ்ரீ 

நெல்லைத் தமிழில் திருக்குறள் 

74.நாடு

குறள் 731:

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு

செழிப்புகொறையாத வெளச்சலும், படிச்ச அறிவாளிகளும், சுயநலம் இல்லாத பணக்காரங்களும் சேந்து இருக்க எடம் தான் நாடு.   

குறள் 732:

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

அதிக பொருள் வளம் இருக்கதாவும், எல்லாரும் விரும்புதமாரியும், கேடு இல்லாம நல்ல வெளச்சலோட இருக்கதும்தான் சிறந்த நாடு.  

குறள் 733:

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு

மத்த நாட்டுலேந்து வந்து குடியேறுதவங்களோட சுமையத் தாங்கி அரசுக்கு வரி செலுத்துதக்கு ஏதுவா வளமா இருக்கது சிறந்த நாடு. 

குறள் 734:

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு

வயித்துப் பசி, நோவுநொடி, பகையாளிங்க இவையெல்லாம் இல்லாம இருக்கதுதான் நாடு.

குறள் 735:

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

கூட்டங் கூட்டமா கூடவே இருந்து குழிபறிக்குத பகையும், அரச நெருக்கடிக்குத்தள்ளுத கலகக்காரங்க , கொலைகாரங்க இவுகளால வெளையுத பொல்லாப்பும் இல்லாம இருக்கதே சிறந்த நாடு. 

குறள் 736:

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை

பகையாளியால பாழ்பட்டுப் போவாம ஒருக்கா போனாலும் அத சரி செஞ்சுக்கிடுத அளவு வளமா இருக்கதும் தான் மத்ததவிட சிறந்த நாடு.

குறள் 737:

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

ஊத்துத் தண்ணி, மழைங்குத ரெண்டு வகை நீர்வளமும் உயரமாவும் அகலமாவும் இருக்க மலையும் அதுலேந்து கெளம்பி ஓடுத ஆறும் , பலமான கோட்டச்சுவரும் நாட்டுக்குத் தேவைப்படுத உறுப்புக்கள் ஆவும். 

குறள் 738:

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

நோவுநொடி இல்லாமை, செல்வம், நல்ல வெளச்சல், சந்தோசமான வாழ்க்க, நல்ல பாதுகாப்பு இந்த அஞ்சும் ஒரு நாட்டுக்கு அழகு னு படிச்சவங்க சொல்லுவாக. 

குறள் 739:

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு

அதிகமா சிரமப் பட்டு முனைஞ்சு ஒழைச்சு வளமா இருக்க நாடுகள விட இயற்கையிலயே எல்லா வளத்தையும் கொண்டிருக்கது தான் சிறந்த நாடு. 

குறள் 740:

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு

நல்ல ராசா இல்லாத நாட்டுல எல்லாவித வளமும் இருந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லாமப் போவும்.  

(அடுத்தாப்லையும் வரும்…) 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *