திருச்சி புலவர் இராமமூர்த்தி

 

கையினிற்     புனைபொற்   கோலும்   காதினி   லிலங்கு  தோடு
மெய்யினிற்  றுவளு    நூலு    நெற்றியின்   விளங்கு    நீறு
மையனுக்      கழகி     தாமென்   றாயிழை   மகளிர்   போற்றச்
சைவமெய்த்   திருவின்   கோலந்   தழைப்பவீ  தியினைச்   சார்ந்தார். (331)

சுந்தர மூர்த்தி  நாயனார் திருவாரூரில்  மன்னவர்திருப்பொங்க, அரசர் மைந்தர் என்ற வகையில் பொலிந்து  விளங்கினார்.  பின்னர் தங்கள் வைதிகத் திருவும் பொங்கத்  திருமணக் கோலத்துடன் விளங்கினார். இந்தத் திருக்கோலத்தைப் பார்த்த பெண்கள், ‘’இவருக்கு இந்த  வைதிகக் கோலமே  பொருந்துகிறது’’ என்று மகிழ்ந்து  போற்றினர்.

அத்திருக்கோலம், கைகளிலே  தாங்கிய பொற்கோலும், காதுகளிலே  விளங்கிய குண்டலங்களும்,  மார்பிலே  துவண்டு  அசையும் பூணூலும், நெற்றியிலே விளங்கிய திருநீறும் புனைந்து பொலிந்த கோலம்ஆகும். இக்கோலமே சுந்தரருக்கு என்றும்  உரியதாய் நித்தியமாகத்  தங்கியது. அதனால்தான் பின்னர் இந்திரர் மால் பிரமன் எழிலால் மிகு  தேவரெல்லாம்  வெள்ளை யானையுடன்  வந்து நம்பிகளை  எதிர் கொண்டு வணங்கித்   திருக்  கயிலைக்கு அழைத்துச்   சென்றனர்.

அவர் இங்கே அவரது திரு அவதாரத்தின் பயனாகிய ’’தீதிலாத் திருத்தொண்டத் தொகை‘’ வழங்கச் சென்றார். அங்கே இறைவனை ஆசிரயித்து, வாயிலைக்  காத்துக்  கொண்டு, தேவாசிரிய மண்டபத்துள் எழுந்தருளிய அடியார்களைத்  துதித்து வணங்கவே அவர்சென்றார். இதனால் அடியார்களின் பெருமையை உணர்ந்து கொண்டார்; தம் பெருமையை அடியார்களுக்கும் உணர்த்தினார். இருவகையினர் பெருமையையும் உலகம் உணர்ந்துகொண்டு போற்றியது. ஆகவே மன்னவர் கோலத்தின் மேம்பட்டது வைதிகத் திருக்கோலம் என்பதை இப்பாடல் புலப்படுத்துகிறது.

கையினிற்  புனை பொற்கோல், சைவ ஆட்சியின் செங்கோலாகி  ஐயனுக்கு அழகிய தாயிற்று  என்று மகளிர்  போற்றினர், காதினில் இலங்கும்  தோடு செவிக்குத்  தேனாகிய பாடல்களை  வழங்குவதால்  ஐயனுக்கு  அழகிய  தாயிற்று  என்று  மகளிர்  போற்றினர்.  மெய்யினில்  துவளும்  பூணூல் வைதிகச்  சைவத்தின்  சிறப்பை  உணர்த்தி,  ஐயனுக்கு  அழகியதாயிற்று, என்று மகளிர்  போற்றினர். நெற்றியில் விளங்கும் நீறு, சிவஞானப் பொலிவை உலகிற்கே  உணர்த்தி, ஐயனுக்கு  அழகியதாயிற்று என்று  மகளிர் போற்றினர். அங்கிருந்த பெண்டிர் அடியார்க்கு அடிமை பூண்ட  ‘’சிவவேதிய’’ மகளிர் ஆதலால் அவர்கள் மனநிலைக்கு ஏற்ப சுந்தரரின் வைதிகத் திருக்கோலத்தைத் தனித்தனியே புகழ்ந்தனர். முன்பிருந்த  இந்திரத் திருக்கோலத்தை விடவும், சைவ மெய்த்திருவின் கோலம் உயர்ந்தது என்பதை ‘’மெய்த்திரு’’ என்ற அடைமொழி உணர்த்துகிறது. இதுவே மெய், இந்திரத் திருக்கோலம் பொய் என்பதை நமக்கு உணர்த்தும்தொடர் இது.

இதில், ‘’வைதிகத்திரு, இன், கோலம்’ ’என்ற தொடர், இக்கோலமே அழிவில்லாதது என்பதையும், சிவத்தின் சார்பு பெறுதலையும், இக்கோலம் பிராரத்தத்தின் வாசனையை  இனித் தொலைக்கும்  என்பதையும் புலப்படுத்துகிறது என்று உரையாசிரியர் விளங்குகிறார்.

கண்டார் விரும்பும் திருவுடைய  இனிய கோலம் நெற்றியில் விளங்கும்  நீற்றினால் முழுமை  பெற்றது.

“காண  வினியது  நீறு, கவினைத்  தருவது நீறு
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம்
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு’’

என்பன,  சம்பந்தரின்   தேவாரத்  திருவாக்குகளின்  பொருளைக்  குறித்தன. இப்பாடலைச்  சீர் பிரித்து  மீண்டும் காண்போம்,

கையினில்      புனைபொன்    கோலும்   காதினில்    இலங்கு  தோடும்
மெய்யினில்   துவளும்     நூலும்     நெற்றியில்    விளங்கும்     நீறும்
ஐயனுக்கு       அழகிதாம்      என்று    ஆயிழை   மகளிர்   போற்றச்
சைவமெய்த்   திருவின்   கோலம்     தழைப்பவீ  தியினைச்   சார்ந்தார்.

இப்பாடலில் ‘’சைவ  மெய்த்   திருவின்  கோலம்  தழைப்ப   வீதியினைச்  சார்ந்தார் ‘’என்ற ஈற்றடி, இனி  இச்சைவ  மெய்க்கோலம்  வீதியெங்கும்  விளங்கி, உலகெங்கும்  பரவத்    தீதிலாத்  திருத்  தொண்டத்   தொகையை  அன்றைக்கே  வழங்கினார் என்பதை   உணர்த்துகிறது.

‘’உயிர்க்கோலமான இம் மெய்த்திருக்கோலத்தைப் புறக்கணித்து ஏனை ஆடை ஆபரணங்களையும், வாகன முதலிய சடங்களையும் பெரிதாய் எண்ணி வீண்நாள் போக்கும் இந்நாள் மாக்கள் ‘சைவமெய்த் திருவின்கோலம்’ என்று ஆசிரியார் இடித்துக் கூறி எடுத்துக்காட்டிய இதன் உண்மையை உற்றுநோக்கி உணர்ந்து உய்வார்களாக.’’ என்று உரையாசிரியர் கூறுவதன்  உண்மையை  உற்று நோக்குக.

ஆகவே  சுந்தரரின்  சைவ மெய்த் திருக்கோலம் என்றும் நின்று நிலவி, பிற்காலப் பொய்க் கோலங்களை வென்று நிற்கும் என்பதே  இப்பாடலின் உட்பொருளாகி சேக்கிழாரின்  நயம் மிக்க  பாடலை  உணர்த்துகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *