நாங்குநேரி வாசஸ்ரீ

97. மானம்

குறள் 961

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்

கட்டாயமா செஞ்சு முடிக்க வேண்டிய வேலையின்னாலும் அதால தன் குடும்பப் பெரும கொறையும்னு நெனச்சா செய்யக் கூடாது.

குறள் 962

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்

புகழோட சேந்த வீர வாழ்க்க வேணும்னு நெனக்கவுக புகழச் சேக்கதுக்காவ மானங்கெட்ட காரியத்த செய்ய மாட்டாக.

குறள் 963

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

பணக்காரனா ஒசந்த நெலயில இருக்குதப்போ அடக்கம் வேணும். ஏழையா இருக்குதப்போ அடிமயா அடங்கிப்போவாம மானத்தோட இருக்கணும்.

குறள் 964

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

மக்களோட மனசுல ஒசந்த நெலயில இருந்த ஒருத்தர் மானங்கெட்டு தாழ்ந்துட்டாருன்னா தலையிலேந்து உதிந்து கெடக்க தலமயிருக்கு சமமா நெனக்கப்படுவார்.

குறள் 965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்

மலை போல ஒசந்து கம்பீரமா இருக்கவுகளும் குந்துமணி அளவு தாழ்ச்சியான காரியத்த செஞ்சாகன்னா தாழ்ந்து போயிடுவாக.

குறள் 966

புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை

மதிக்காம எளக்காரம் செய்யுதவன் பொறத்தால மானங்கெட்டு போவதால இப்பமும் புகழ் கெடைக்காது. மேலோகத்துலயும் சேர்க்காது. வேற என்னதான் தரும் அது?

குறள் 967

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

மதிக்காதவன் பொறத்தால போயி உசிரு வாழுதான்னு இருக்கதவிட செத்துப் போயிட்டாம்னு சொல்லப்படுதது எம்புட்டோ மேல்.

குறள் 968

மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து

தன் குடும்ப மானங்கெட்டு சீரளியுதப்போ கூட சாவாம இந்த ஒடம்ப காத்து வாழுத வாழ்க்க சாவாமைக்கு மருந்து ஆவுமா?

குறள் 969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

ஒடம்புல இருக்க உரோமமெல்லாம் உதிந்துபோச்சுதுன்னா கவரிமான் உசிர உடுதது கணக்கா மானங்கெட்ட பொறவு உசிரு வாழ மாட்டாக மானமுள்ள பெரிய மனுசருங்க.

குறள் 970

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு

மானம் போவுத நேரம் உசிர உடுத மனுசங்களோட புகழ இந்த ஒலகம் எப்பமும் போற்றி நிக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *