எமக்கும் தொழில் எழுத்து

0

பாஸ்கர் சேஷாத்ரி

எழுதுவது சிந்திப்பின் பெரிய வெளிப்பாடு. உணர்வுகளை வெளிப்படுத்த எவ்வளவு வகையான ஜன்னல்கள் இருப்பினும் எழுத்தின் மூலம் வெளியாகும் விஷயத்திற்குத் தனித்துவம் உண்டு. பெரும் கோபத்தையும், அழகுணர்ச்சியையும் வேதனைகளையும் ஆச்சர்யங்களையும் அவஸ்தையையும் சொல்ல, எழுத்தைத் தாண்டிய வலிமை எதற்குமில்லை. இதர கலைஞர்கள் என் கருத்தில் இருந்து மாறுபடலாம். ஆனாலும் இந்த உணர்ச்சி, வலியை, ஆழ்மனச் சிந்தனையை வார்த்தைகளில் வடிக்கும் போது அது போக வேண்டிய இடத்திற்கு மிகச் சரியாய்ப் போய்ச் சேருகிறது.

எழுத்து என்ன செய்யும்? 

படிப்பவன் மனசைப் பிசைய வைக்கும். அவன் மனத்தின் ஆழத்திற்கு இட்டுச் செல்லும். மனத்தின் விகாரங்கள் எழுத்தால் பதறும். ஆச்சரியங்களையும் அவஸ்தைகளையும் படிப்பவர் மனத்தில் ஊடுருவச் செய்து, அவரோடு இணைய முடியும். இந்த இணைதல்தான் வெற்றிக் கனி.

எனக்குத் தெரிந்து ஒரு விஷயத்தை எதிராளியிடம் பகிரும்போது வரும் நிறைவும் மனத்தெளிவும் எழுதிய கருத்தில் மேலும் நாட்டம் கொள்ள வைக்கும். எழுதுவதற்கு அனுபவங்களைத் தேடவே வேண்டாம். நிஜமான எழுத்தில் படைப்பாளியின் சத்தியம் பிரகாசிக்கிறது .

எழுதுங்கள். தினசரி எழுதங்கள். இந்த மனம், மனிதர்கள், குழந்தைகள் என எல்லாவற்றிலும் வாழ்க்கை ஒளிந்துகொண்டு இருக்கிறது.

எழுதும் சிந்திப்பை விட்டு, நிகழ்வுகளை இயல்பாய்ப் பார்க்க முடியுமா? முடியும். அப்படியே பாதிப்பு இருப்பினும் அது பாதகமில்லை.

எழுத்து வாழ்வை தேட… தேடுவது எது எனப் புரியாமலே தேடுவது தான் வாழ்க்கையின் சிறப்பு. தேடினால் கிடைக்காமல் போகும் விஷயங்கள் பலவுண்டு. தேடுபவன் முடிவில் காணாமல் போக வேண்டும். காணாமல் போய் நிற்பது இங்கு இலக்கு. காணாமல் போன பின், எழுத்து வேறு எழுத்தாளன் வேறு இல்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *