மீனாட்சி பாலகணேஷ்

(மொழி பயிலல்)

பிள்ளைப்பருவத்தின் ஆடல்களும் செயல்களும் நிகழ்வுகளும் இலக்கணத்தால் வரையறுக்கப்பட்ட பத்துப்பருவங்களுக்கு மட்டுமே உட்பட்டனவன்று. எண்ணற்ற விளையாட்டுகளும், தாய்தந்தையரும், குடும்பத்தினரும் குழந்தையின் நலன்கருதிச் செய்யும் கண்ணேறு கழித்தல், காது குத்துதல் ஆகிய சில சடங்குகளும் இன்னபிறவும் குழந்தைப் பருவத்திற்கு மட்டுமே உரியனவாம். இவற்றுள் பல அரிதாகப் பாடப்பட்டும் பல பாடப்படாமலேயும் உள்ளன.

இப்பருவங்களுள் பல ஆண்பால், பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் தனித்தனியாகப் பாடப்பட்டுள்ளன. சிற்றில் பருவம் ஒன்றே இருபாலருக்கும் பொதுவாக அமைந்துள்ளது. ஆண்மக்களின் வளர்ச்சிப் பருவத்தில் நிகழும் சில நிகழ்ச்சிகளும் சடங்குகளும் பிங்கலந்தை நிகண்டுவில் இலக்கணமாக வரையறுக்கப்பட்டுள்ளதனைக் காணலாம்.

       ‘ஆறாந் திங்களிற் கூறுதற் கற்றலோ
         டேழாந் திங்களி னின்னமு தூட்டலும்
         ………………………………………….
         பத்திற் பூணணி பன்னீ ராண்டினிற்
         கச்சொடு சுரிகை காமுறப் புனைதலென்
         றின்னிவை1 ……………………….,‘ என்பன பாடல்வரிகள்.

இருப்பினும் பிங்கல நிகண்டு குறிப்பிடும் இப்பருவங்கள் கதிர்காமப்பிள்ளைத்தமிழ் எனும் ஒரேயொரு பிள்ளைத்தமிழ் நூலில் மட்டுமே பாடப்பட்டுள்ளது வியப்பிற்குரியதாகும்.

சிவங். கருணாலய பாண்டியப்புலவர் இயற்றிய இந்நூல் இலங்கையிலுள்ள கதிர்காமம் எனும் பதியில் உறையும் முருகப்பிரானைப் பற்றியதாம். பதினான்கு பருவங்களைக் கொண்டமைந்த இந்நூலின் பருவங்கள் ஒவ்வொன்றும் மூன்று பாடல்களைக் கொண்டே அமைந்தவையாகும் என்பதும் இதன் இன்னொரு சிறப்பாகும். காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, நிலாவழைத்தல், சிறுபறை முழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேர் உருட்டல், ஆகிய பத்துப்பருவங்களுடன் மொழிபயிலல், உணவூட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் ஆகிய நான்கு பருவங்களும் சேர்த்து மொத்தம் பதினான்கு பருவங்களால் கவினுறப் பாடப்பட்டுள்ளது.

மொழிபயிலல் பருவமானது இப்பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்திற்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ளது. மகவு, தன் தாய், சுற்றியுள்ளோர் ஆகியோர் பேசுவதனைக் கண்டு தானும் தனது தாய்மொழியின் வழக்குகளை அறிந்து பேசக் கற்றுக்கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளலாம். குழந்தையின் வளர்ச்சியில் இதுவும் மிக இன்றியமையாததொரு பருவமாகும். மொழியினைத் தன் தாயிடமிருந்தே அவள் தனக்குத் தாலாட்டுப் பாடும்போது கேட்டுக் குழந்தை கற்றறிகிறது. உறவுமுறைகள், உணர்வுகள், உணவு பற்றிய சொற்கள், காகம், நாய், பூனை முதலான விளையாட்டுத் தோழர்கள் ஆகியனவற்றைத் தாய் இப்பருவத்தில் குழந்தைக்குச் சிறுசொற்களாலும் சொற்றொடர்களாலும் அறிமுகப்படுத்துகிறாள்.

இது ஆண், பெண் ஆகிய இருபருவத்துக் குழந்தைகளுக்கும் பொருந்துமாயினும் ஆண்பால் பிள்ளைப்பருவமாக ஒரேயொரு பிள்ளைத்தமிழில் மட்டுமே பாடப்பட்டுள்ளது. ‘ஆறாம் திங்களில் கூறுதற்கற்றல்’ என பிங்கல நிகண்டு இதனைக் குறிப்பிடுகிறது. இப்பருவத்திற்கான பாடல்கள் மூன்றே மூன்று ஆனவையாதலால் அனைத்தின்  சிறப்பையுமே நோக்கலாம்.

முதற்பாடலின் மூலம் தமிழின் சிறப்பையும் அதைப் பயிலும் குழந்தை முருகனையும் புலவர் ஏத்துகின்றார். அங்கயற்கண்ணியம்மையின் மகனாகித் தமிழைப் பயிலும் மகனே! எமது குலத்தோரின் குடியினை ஆளவந்து மகவாய் உதித்து விளையாடல்களைப் புரிந்த இன்பவெள்ளமே!

துரியாவத்தைக்கு மேலான துரியாதீதாவத்தை, கேவலாவத்தை, சகலாவத்தை, சுத்தாவத்தை ஆகியவை தொடராது பேசாமல் வாளவிருந்தவன் நீ ஆவாய்! நீ வெண்குன்றமெனப்படும் கயிலாயத்தில் பகல்பொழுது இரவுப்பொழுதென விளங்கும் பச்சை நிறங்கொண்ட பார்வதியம்மை இடப்புறமிருக்க, வெண்மைநிறங்கொண்ட சிவபெருமானும் வலப்புறமிருக்க, இவர்களுக்கிடையே சிவந்த செக்கர்வானம்போல விளங்கும் முருகப்பிரானாகிய குழவியே! (இவ்வரிகள் சோமாஸ்கந்த வடிவினை நமக்கு நினைவுபடுத்தி மகிழ்விக்கின்றன).

முருகப்பெருமானே! அன்று நீ அன்னை, அத்தன் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு பேசும் ‘அம்மா, அப்பா, எனும் இனிய சொற்களை அடியேம் யாம் கேட்க ஆவலாக உள்ளோம்,’ எனும் கருத்திலமைந்த பாடலிதுவாகும். அம்மையே அப்பா எனும் சொற்களே அருமறையாகும் என உலகிற்கு உணர்த்தியவன் முருகப்பெருமான் என உட்பொருளாகக் கொள்ளலாம்.

  இகலுமிணை அங்கயற் கண்ணிமக வாய்த்தமிழி
         யன்றுபயி லஞ்ஞைசெம்மால்!
    எம்மனோர் குடியாள வந்துமக வாய்க்கூத்தி
         யற்றின்ப வெள்ளமே!
    …………………………………………………………………..
  பகலிரவு மாறப்ப சுந்தபச் சைக்குமறு
         பாலின்வெள் ளைக்குநடுவட்
    படர்செக்கர் வானன்ன செம்மையே யன்றவர்ப்
         பகர்மொழிப கர்ந்தவாற்றை
    ……………………………………………………………………………….
     வம்ம! வப்பாவென்னு மருமறைப் பாயிரம
         கத்தலர வாய்மலர்கவே2!

மொழிபயிலல் பருவத்தின் இரண்டாவது பாடல்:

‘குறுகிய மதக்கொள்கையுடையோர் அறம் என எமக்கு உரைத்த பொருந்தாச் சொற்களைக் கேட்டதனாலும், ஈயாதார் இரப்போரைக் கடிந்துரைத்த கொடுஞ்சொற்களைக் கேட்டும், சிறுமை மிகுந்த குடியில் பிறந்த செல்வர் வறிய புலவர்களைச் செருக்கினால் இழித்துப் பேசக்கேட்டதனாலும் நல்ல அமிழ்தம் போலும் தமிழில் கேடுவிளைவிக்கும் வேறுசொற்களைச் சேர்த்துக் கூறுவதனைப் பலகாறும் கேட்டதனாலும் சீழ்வடியுமாறு உண்டான செவிப்புண் அழிந்து மறையுமாறு, கதிரமலையழகனே! அமிழ்தம் பொழிவாயாக! ‘அம்மா! அப்பா! எனும் சொல்லமிழ்தம் பொழிகவே!’ எனத் தாய்தந்தையர் வேண்டும் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.

            ‘குறிய மதத்த ரறமெம்பாற்
                   கூறக் கேட்ட செவிப்புண்ணும்
              ………………. கதிரமலை
                   யழகே! யமிழ்தம் பொழிகவே!
             யம்மா! வப்பா! வென்னுஞ்சொல்
                   லமிழ்தம் பொழிக பொழிகவே3!’

என்பன பாடல்வரிகள்.

அம்மா அப்பா எனத் தாய்தந்தையரை அழைக்க அன்னை பயிற்றுவிக்கும் பருவம் இது எனவும் காண்கிறோம். கருத்திலும் கற்பனையிலும் வேறுபட்டு விளங்கும் இப்பாடல் தமிழின் பெருமையையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லியல்புகளையும் இணைத்தும் கூறுகிறது.

மூன்றாவதாகக் காணும் இப்பருவத்தின் கடைசிப்பாடலானது தமிழின் உயர்வைப் போற்றுகிறது. அதனை முருகன் பேசும் மழலையினோடு இணைத்தும் பாடுகின்றதனைக் கண்டு மகிழலாம். தாமரைமலரிலமர்ந்த பிரமன் மறைகளை ஓதவும், கல்லால மரத்தின் நிழலிலமர்ந்த தட்சிணாமூர்த்தியாகிய சிவபிரான் (தெற்குநோக்கியமர்ந்ததனால் இவனைத் தென்னன் என்கிறார்) உண்மைப்பொருளை சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கும் ஓதுகின்றான். இவர்கள் இவ்வாறு ஓதிட இவர்களுக்கு முன்பு அதனை உரைத்த பேராசிரியனே! (பிரமனுக்கும், தந்தை சிவபிரானுக்கும் மறைப்பொருளை உணர்த்தியவன் முருகன் எனும் தொன்மத்தை இதில் காணலாம்)

புலர்காலைப்பொழுதினில் தேவர்கள் (தேவர்கள் கண்ணிமைக்காதவர்களாதலால் இமையோர் என்று குறிப்பிட்டார்) தொழுதிடும் கதிர்காமனே! நீ சொல்லிப்பழக வேண்டிய சொற்களை நாங்கள் உனக்குச் சொல்லிக்கொடுக்கவில்லை; (காலையில் துயிலெழுந்து படித்தால், கற்றால், அது உள்ளத்தில் பசுமரத்தாணி போற்பதியுமென்பது ஆன்றோர் வாக்காகும் அதனையே இங்கு கூறியுள்ளார் புலவனார்) நீ கூறி நாங்கள் கேட்டு இன்புற வேண்டியவற்றைக் கேட்கக் காத்துள்ளோம், ஊமைப்பிள்ளையே, என முருகனை விளிக்கிறார். இதுவும் ஒரு தொன்மத்தின்பாற்பட்டதே! (உப்பூரிகுடிகிழான் மகன் உருத்திரசன்மனெனும் ஊமைப்பிள்ளையாகி முருகன் வந்ததனைக் குறிப்பிடுகிறார்).

உலகினில் மற்ற உயிர்கள் மெய்ப்புளகம் அடையுமாறு உரலினிடைக் கட்டப்பட்டவனாகிய கண்ணன் ஊதும் குழலிசையும் யாழிசையும் கசந்துபோகவும், உலர்ந்த மரங்களும் உயிருள்ளவை போன்று குழைந்திடவும் நீ மொழி பேசிட வேண்டும். நாவரசரான அப்பர் பெருமானை நீ ‘அப்பா’ என (ஆளுடைப் பிள்ளையாராகி) அழைத்ததெவ்வாறு? தம்மை அணுகிய பேயம்மையாகிய காரைக்காலம்மையாரை உன் தந்தை சிவபிரான் ‘அம்மையே’ என அழைத்தது எங்ஙனம் என விளக்கியருளுவாயாக என வேண்டுகிறார்.

        மலரவ னான்மறை யோதக் கல்லான்
                   மரநிழ லமர்தென்னன்
             வாய்மையை நால்வர்க் கோத……
         ……………………………………………………………….
         உலகினி லேனைய வுயிர்மெய் யுயிர்ப்ப
                   உரலிடை யாப்புண்டோ
             னூதுங் குழலிசை யாழிசை கைப்ப
                   உலர்மர முங்குழைய
         வலரன செந்நா வரசைய ழைத்தா
                   யஃதெங் கனமருளே4
………………………………………………………………..

மொழிபயிலக் கற்ற சிறுமுருகன் ‘அம்மா, அப்பா’ எனப் பெற்றோரை அழைப்பதனைப் பலவிதமான உவமைகளால் மூன்று பாடல்களிலும் விளக்கியுள்ள நயம் போற்றத்தக்கது. மொழியில் அமையும் உரையாடல்களுக்குத் தொடர்புடைய கருத்துக்களையும் தொன்மங்களையும் கூறியுள்ளமையும் அழகாக அமைந்து சிந்தையைக் கொள்ளை கொள்கின்றது.
                                                                                                                                                                                                                  (வளரும்)

 பார்வை நூல்கள்:

1. பிங்கல நிகண்டு
2, 3, 4. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குழவி மருங்கினும் கிழவதாகும்-14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *