ஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’

0

மக்கள் தொடர்பாளர் ஜான் 

 
 

இயக்குநர் தரணி ராசேந்திரன்   இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஞானச் செருக்கு’.

ஓவியர் வீர சந்தானம், வ.ஐ.ச. ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தரணி ராசேந்திரன் பூர்வீகம் திருவாரூர் என்றாலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர். பொறியியல் படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. இதோ அவரே இயக்குநரான அனுபவங்களையும், ஞானச்செருக்கு உருவான விதம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்..

“பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது. அதன்பிறகு ஒளிப்பதிவு குறித்த டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன்.

சினிமாவில் உதவி இயக்குநராக சேர்வதில் ஏற்படும் காலதாமதம் தேவையில்லை என நினைத்ததால், நானே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

ஒரு கட்டத்தில் பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீர சந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார்.

 

இந்தக் கதையை படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்றுகூடப் பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரம் படமாக எடுத்துப் பார்ப்போம் என்று நினைத்தேன். அதன்பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைக் கூறியபோது, அதை ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள் என்று கூறினார்.

எல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்தப் படத்தைத் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்தப் படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்தச் சமயத்தில் விலகிவிட்டனர். அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் போட்டு இந்தப் படத்தை எடுத்து முடித்தோம். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் க்ரவ்டு பண்டிங் முறையில் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்குத் தெரியாது. ஆனால் படப்பிடிப்பு நடத்தத் தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்துத் திட்டினார். பின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம், எனது மாமாவின் பெர்சனல் லோன் ஆகியவற்றைக் கொண்டு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

ஓவியர் வீரசந்தானம் கூட, தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்தப் படத்திற்கு பயன்படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார்.

இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்தப் படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது பிளஸ் பாயிண்ட். இந்த படத்தின் டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானம் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது.

அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்தப் படத்தின் வேலைகளை முடித்தேன். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு இந்தப் படத்தின் மதிப்பு பற்றி வெளியே தெரிய வேண்டும், அதன்பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

நான் எடுத்துள்ளது கமர்சியல் படம்தான். ஆனாலும் இந்தப் படத்தைத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினேன். கிட்டத்தட்ட நாற்பது நாடுகள்  சிறந்த படமாக இதை அங்கீகரித்துள்ளன. இந்தப் படத்திற்கு இதுவரை 7 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து கைகொடுத்துப் பாராட்டினார். பாரதிராஜாவைப் பொறுத்தவரை இதுவரை பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜாவிடம் மட்டுமே கை கொடுத்து வாழ்த்தியுள்ளாராம்.

அதன் பிறகு என்னிடம் கைகொடுத்து வாழ்த்தியுள்ளதாக மற்றவர்கள் சொன்னபோது எனக்கு இதுவே மிகப்பெரிய விருது பெற்றது போல இருந்தது. அவர் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டி உள்ளார்கள்.

இது வெகுஜனப் படம்தான். இந்தப் படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன. 80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்தப் படம்.

இந்தச்  சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படிப் பார்க்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மிகப்பொருத்தமா இருந்திருக்கும். அந்த அளவிற்கு  முழுக்க முழுக்க கமர்சியல் படம்தான் இது. குடித்துவிட்டு கூத்தடிப்பவர்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது. காரணம் நான் குப்பைப் படத்தை எடுக்கவில்லை. படம் பார்க்க வரும் ரசிகர்களை முட்டாளாக்கி அனுப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

நல்ல படத்தைத் திரையிடக்கூடாது என்று எந்த தியேட்டர்காரர்களும் நினைப்பதில்லை. நல்ல படம் என்பதை அவர்களிடம் நாம் தான் சரியாகக் கொண்டு செல்லவேண்டும். அவர்களுக்கும் வியாபாரம், குடும்பம் என்றெல்லாம் இருக்கிறது அல்லவா? அதனால் அவர்களை நாம் குறை சொல்ல வேண்டியதில்லை. இதற்கடுத்த எனது படங்கள் கமர்ஷியலாகவும், அதேசமயம் எனக்கான அடையாளமாகவும் இருக்கும் என்பதையும்  சொல்லிக்கொள்கிறேன். விரைவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று கூறினார் தரணி ராசேந்திரன்.

ஃஃபார்ட்சூன் ஃப்ரேம்ஸ் சார்பில்  செல்வராம், வெங்கடேஷ் ஆகியோர், இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *