35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ்
கலைமாமணி வீ.கே.டி. பாலன்
எமது நிறுவனம் “மதுரா” 35ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது …❗
ஒரு பரவசத்துடனும், சிறிது பெருமிதத்துடனும், நிறைய நன்றிக் கடனோடும் திரும்பிப் பார்க்கிறேன்.
1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி திருச்செந்தூரை விட்டு without ticketஇல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியவன் நான்.
வேலை கிடைக்காது 6, 7 மாதத்தில், ஒரு மனநோயாளியாக ஒட்டிய வயிறோடும் கிழிந்த ஆடையுடனும் எழும்பூர் ரயில்வே நிலைய பிளாட்பாரத்தில் வாழ்ந்து திரிந்தவன்.
அமெரிக்க தூதராலய வாசலில் விசா பெற வாசலில் இடம் பிடித்துக் கொடுத்து ரூ. 2/= பெற்றுக்கொண்டதே எனது முதல் வருமானம்.
அதிலிருந்து கிடைத்த வளர்ச்சியில் 1986 ஜனவரி 17இல் 58, மண்ணடி தெரு, சென்னையில் ரூ. 10, 000/= முன்பணத்தில் ரூ. 1, 000/= வாடகையில் மதுரா டிராவல்ஸ் சர்வீஸ் உதயமானது.
ஆயிரம் ஆயிரம் அவமானங்கள், ஆயிரம் ஆயிரம் தோல்விகள் எங்குத் திரும்பினாலும் இதுவே எனது வாழ்க்கை. இதுவே எனது அனுபவம். அவமானமும் தோல்விகளும் சிலரை அடியோடு அழித்துவிடும். எனக்கோ அவையே உரமாக அமைந்தன.
இன்று மதுரா டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட், தமிழகத்தின் முன்னணி நிறுவனம் என்பதனையும் தாண்டி, உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது.
சுற்றுலாப் பயணத் துறையின் அத்தனை உயரிய அங்கீகாரங்கள் பெற்றிருந்தும், அவற்றையும் தாண்டி, தமிழக அரசின் “கலைமாமணி” விருதும் கிடைத்தது நான் பெற்ற பேறு.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற 10ஆவது உலகத் தமிழாராச்சி மாநாடு உட்பட பல உலக மாநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயண முகவராகச் சிறப்பாக பணியாற்றியுள்ளோம்.
25க்கும் மேற்பட்ட நாடுகளில் 1500க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு 250க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளையும் இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தியுள்ளோம் என்பதில் பேருவகை அடைகிறோம்.
என்னை ‘உழைப்பால் உயர்ந்தவர்’ என்று பொதுவெளியில் பாராட்டும் போது கொஞ்சம் கூசித்தான் போகிறேன். என் மனசாட்சி “யார் உழைப்பால் நீ உயர்ந்தாய் ” என என்னைக் கேட்கிறது. திறந்த மனத்தோடு இப்போது பதில் சொல்கிறேன் “என் ஊழியர்களின் உழைப்பால்தான் நான் உயர்ந்திருக்கிறேன்”.
சில நேரத்தில் ‘படிப்படியாக உயர்ந்தவர்” என்று கூட என்னைப் பாராட்டுவதுண்டு. அப்போதும் என் மனசாட்சி என்னை நோக்கிக் கேட்கும். “யார் படிகளாக இருந்தார்கள்?” என்று. இப்போது பதில் சொல்கிறேன். அமரர் திருமதி சந்திரா ராமகிருஷ்ணன், அமரர் முருகேசு அண்ணன், அமரர் அண்ணன் பாலகிருஷ்ணன், திரு. M. K. M.புஹாரி, இம்பீரியல் அமரர் மாப்பிள்ளை முதலாளி, அமரர் S சீர்காழி கோவிந்தராஜன் ஐயா, அமரர் TM.சௌந்தரராஜன் ஐயா, திருமதி. P. சுசீலா அம்மா, திரு. B. H. அப்துல் ஹமீது, திரு. அப்துல் ஜபார், திரு. ராமசாமி, திரு. கோவை நந்தன், ஸ்விஸ் மூர்த்தி, லண்டன் சிவா, அமரர் புஸ்பராஜா, திரு. S. செல்வநாயகம், திரு. K. செல்வராஜ், திரு. K V நாராயணன், திருமதி. கற்பகம் கணேசன், திரு. ராஜசேகரன், அமரர் விக்ரமன், அமரர் சேஷாத்ரி நாதன் (UBI) ,திரு. அழகுராஜன், திரு. S. அனந்த நாராயணன், திரு. S. குமார், திருமதி. ராதா, திருமதி. ஆரிபா, திருமதி. சியாமளா, திருமதி. பாண்டீஸ்வரி, திருமதி. தீபா மற்றும் என் வாழ்வின் அத்திவாரம் என் அன்பு மனைவி சுசீலா, மற்றும் என் உயிரினும் மேலான வாடிக்கையாளர்கள்.
உங்கள் ஆசியோடும் அன்போடும் தொடர்கிறோம் எங்கள் பணியை. நன்றி. வணக்கம்.
இவ்வண்ணம்,