“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்
அண்ணாகண்ணன்
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நூலகத் துறையும் தமிழ் அநிதமும் (அமெரிக்கா) இணைந்து, 25.01.2020 அன்று, “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்னும் பொருண்மையிலான பன்னாட்டுப் பயிலரங்கை மிகச் சிறப்பாக நடத்தின.
இதில், பேராசிரியர் அ.காமாட்சி, ஏற்றம் தரும் எழுதுகருவிகள் என்ற தலைப்பில் குரல்வழித் தட்டச்சு, எந்திர மொழிபெயர்ப்பு, பிழை திருத்தும் மென்பொருள் உள்ளிட்டவற்றை அரங்கில் நிகழ்த்திக் காட்டி விளக்கினார்.
பெய்கான் நிறுவனத்தின் நிறுவனர் செந்தில் முருகன், ஒலி ஒளி உள்ளடக்கம் என்ற தலைப்பில், ஒலி நூல், அதை உருவாக்கும் விதம், அதற்குள்ள சந்தை, யூடியூப் அலைவரிசையைத் தொடங்கும் விதம் உள்ளிட்டவற்றை அழகுற எடுத்துரைத்தார்.
நான், மையக் கருத்துரை வழங்கியதோடு, வலை ஊடக வாய்ப்புகள் என்ற தலைப்பில், மின்னிதழ்கள், செய்திச் செயலிகள், மீம்ஸ் எனப்படும் பகடிப் படங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் தற்போதைய நிலையைச் சுட்டிக் காட்டி, இவற்றில் உள்ள வானளாவிய வாய்ப்புகளை விரித்துரைத்தேன்.
செங்கோட்டை ஸ்ரீராம், மின்னூல்கள் என்ற தலைப்பில், மின்னூல்களின் வகைகள், உருவாக்கும் விதம், அதற்கு உதவும் கருவிகள், கிண்டில், ஃபிரீதமிழ்ஈபுக்ஸ் உள்ளிட்டவற்றைக் காட்சியுரையாக வழங்கினார்.
மாணவர்கள், பங்கேற்பாளர்கள் அத்தனை பேரும் கடைசி வரை இருந்து உற்சாகமாகப் பங்கெடுத்தார்கள். இந்த நல்வாய்ப்பினை நல்கியமைக்காக, கல்லூரி நிர்வாகத்திற்கும் தமிழ் அநிதம் அமைப்பிற்கும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலச்சந்திரன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.