அண்ணாகண்ணன்

தூக்கம் வந்தால் தூங்கிவிடு
தும்மல் வந்தால் தும்மிவிடு
அழுகை எழுந்தால் அழுதுவிடு
சிரிப்பு வந்தால் சிரித்துவிடு
ஆசைப் பட்டால் அடைந்துவிடு
அதற்காய் நீயும் உழைத்துவிடு
உணர்வை அடக்கிக் குறுகாதே
ஒளித்து வைத்து மருகாதே

தெரிந்தால் தெரியும் என்றுசொல்
தெரியாது என்றால் அதையும்சொல்
புரிந்தால் புரிந்தது என்றுசொல்
புரியாவிட்டால் அதையும்சொல்
பிடித்தால் பிடித்தது என்றுசொல்
பிடிக்காவிட்டால் அதையும்சொல்
வேண்டாம் என்றால் விட்டுவிடு
வேண்டும் என்றால் மொட்டுவிடு

அப்படி நடந்தால் அதுவும்சரி
இப்படி நடந்தால் இதுவும்சரி
எப்படி நடந்தாலும் சரியேதான்
எல்லாம் நமது நன்மைக்கே
அதிகம் யோசித்துக் குழம்பாதே
உள்ளம் சொல்வதைக் கேட்டுநட
திரும்பிப் பார்க்க நேரமில்லை
ஓடிக் கொண்டே விளையாடு

காதலில் கற்பனை அதிகமுண்டு
கனவைக் கலைத்து எழுந்துவா
நிஜத்தைப் பேசு நேருக்குநேர்
நிலைப்பது நிலைக்கும் நீயேபார்
வெற்றிகளாலே நீபேசு
வேண்டியதெல்லாம் பின்தொடரும்
ஆக வேண்டிய வேலையைப் பார் – இந்தா
பறக்கும் முத்தம் பற்றிக்கொள்

=======================================

Photo courtesy: Maxpixel.net

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பறக்கும் முத்தம்

  1. கவிதைக்குள் ஏதோ ஒன்று சுழன்று சுழன்று பாய்ச்சலாய் வாசகத் திறனாய் உள் நுழைகிறது.
    நல்ல நடை. பிரண்டு வார்த்தைகள் நடனமாடுகின்றன.அருமை அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *