-மேகலா இராமமூர்த்தி

பூக்களுக்கு இடையே காதல் பாக்கள் இசைத்தபடி அமர்ந்திருக்கும் காதல் புறாக்களைத் தம் ஒளிப்படப் பெட்டியில் களிப்போடு கொண்டுவந்திருப்பவர் திரு. பார்கவ் கேசவன். காதலர் தினத்தை ஒட்டிய வாரத்துக்குப் பொருத்தமான படமிது என்று இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இல்லறத்தில் புதிதாய் இணைந்திருக்கும் இணையரின் திருமணம் குன்றாத நறுமணத்தோடும் குறையாத இன்பத்தோடும் என்றும் இருந்திட, ஒருவர் உணர்வை மற்றொருவர் புரிந்துகொள்வதும், எடுத்ததற்கெல்லாம் முட்டிக்கொண்டிராமல் சிறிது விட்டுக் கொடுத்துச் செல்வதும், அடுத்தவரின் தனிப்பட்ட ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் இருவருமே மதிப்பளிப்பதும் அவசியம். அத்தகு இல்லறம் அன்பும் அறனும் உடைய நல்லறமாய் என்றும் திகழ்ந்திடும் என்பதில் ஐயமில்லை.

இனி, மோதலில்லாக் காதல் வாழ்வுக்கு நம் கவிஞர்கள் கூறும் ஆலோசனைகள் என்னென்ன என்பதையும் அறிந்துவருவோம் வாருங்கள்!

*****

”புதிதாய் வாழ்வில் இருவர் இணைந்திடத் தொடங்கிய இந்த இல்லறம் இறுதி வரை இன்பத்தோடு நிலைக்கட்டும்” என்று மணமக்களை அகமகிழ்ந்து வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

இன்பம் நிலைக்கட்டும்…

புதிதாய் வாழ்வில் இணைந்தவர்கள்
புவியைச் சுற்றும் கணமிதுவே,
எதிலும் குறைகள் வைக்காமல்
எல்லாம் துய்த்திடும் வேளையிது,
இதயமும் ஒன்றாய்க் கலந்ததாலே
இறக்கை கட்டிப் பறக்கின்றார்,
முதுமை வரைக்கும் நிலைக்கட்டும்
முறையாய் இல்லற வாழ்விதுவே…!

திருமண வைபவத்தில் போடப்படும் மூன்று முடிச்சுக்குப் பொருள்பொதிந்த விளக்கங்களை அழகுறக் கவிதையில் அடுக்குகின்றார் திரு. ராவணா சுந்தர்.

திருமணம்

என் வாழ்வியலை
அழகாக உயிராக்கும்
என் மறைமதியே
உன்னைப் பிறைமதியாகப்
பிரதிபலிக்கும் வைபவத்தை
நோக்கிப் பிரார்த்திக்கிறேன்!

மணமாலை நாம்
மாற்றிடவே நீ
மறுமுறை மலர்ந்திட வேண்டும்!

மங்கள இசை மனமுருக
அட்சதையில் மாங்கல்யம் பவனிவர,
புரோகிதர் பொன்மொழியில்
இறையோர்களை அழைத்திட,
கெட்டிமேளம் ஓங்கிட,
சொந்தமும் நட்பும்
வாழ்த்துகளை வார்த்தைகளற்று
அரிசி மழையாகப் பொழிந்திட,
வேண்டிய கனவுகளை
கைகளில் ஏந்தி,
உன் பொன்முறுவலை எனதாக்கி,
நான் இடும் முதல் முடிச்சினில்
உன் தனிமையைத் தகர்த்திட வேண்டும்.
இரண்டாம் முடிச்சினில்
நம்பிக்கையை விதைத்திட வேண்டும்.
மூன்றாம் முடிச்சினில்
அழியும் மெய்யிலும்
அழிவில்லாக் காதலை
வரமாக்கிட வேண்டும்.

உன் நெற்றியில் கறைபடியவே
என் கைவிரல்கள் ஏங்கிட வேண்டும்!

உன் பாதம்
ஏந்திய தருணம்
என் கைகள் மோட்சம்
அடைந்திடுமே -அதை
மெட்டி ஒலியால் நான்
உணர்த்திட வேண்டும்!

நமது ஆடைகளின்
முடிவினில் இடும் முடிச்சினில்
வாழ்க்கை தொடங்கிட வேண்டும்!

சுற்றத்தார் கண்களும்
நாம் சுற்றிவரும் அக்னியில்
கரைந்திட வேண்டும்!

நல்வரவின் நோக்கம்
பலித்திடவே நாம்
சுற்றத்தை வணங்கிட வேண்டும்!

*****

உறவென்ற கயிறு உணர்வென்ற அச்சில் சுழல, பருவம் கடந்தபின்னும் பரிவோடு தொடரவிருக்கும் இனிய இல்லறத்திற்கான தொடக்க ஆட்டமிது என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

பொன்னூஞ்சல்

உறவென்ற கயிறு கட்டி
உணர்வென்ற அச்சில் சுழல
மனமென்னும் காற்று ஆட
மணமக்கள் ஆடும் ஆட்டம்!

சொந்தங்கள் வாழ்த்துரைக்க
சீதையுடன் இராமனென
சந்ததிகள் தொடர்ந்துவாழ – இன்பச்
சன்னிதியில் ஆடும் ஆட்டம்!

சோர்வுற்ற நேரமெல்லம் சொந்தமெனத் தாகம்தீர்த்து
பருவம் கடந்த பின்னும் பரிவுடன் நீர்த்திருந்து
மேடுபள்ளம் தாண்டி ஜீவநதியாய் ஓட
இல்லறத்தின் இன்பம் காணும் துவக்க ஆட்டம்!

*****

இல்வாழ்வில் புதிதாய் இணைந்திருக்கும் இணையருக்கு மண்ணில் நல்லவண்ணம் வாழ வழிசொல்லியிருக்கும் கவிஞர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்!

அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

காதல் திருமணம்!

கல் தோன்றி மண் தோன்றிய
காலம் முன்னே தோன்றிய காதல்
கண் முன்னே நீ தோன்ற
என் நெஞ்சில் தோன்றியதே
இதயத் துடிப்பில் தோன்றி
ஊமை விழிகள் பேசும் மௌனமொழி
உணர்வாய் மாறி
நெஞ்சில் தோன்றிடும் காதலாய்த்
தரையில் கால் படாமலே
விண்ணில் பறந்திடும்
உன்னை நினைக்கையிலே
றெக்கை கட்டி மனசு!

விழியில் தோன்றி இதயம் நுழைந்து
உணர்வாய்த் தோன்றி உள்ளம் கவர்ந்து
சொல்லத் துடித்த மனதை அறிந்து
என்னை ஏற்க
நெஞ்சம் துணிந்து கரங்கள் பற்றிட
இருமனம் இணைந்த திருமணம்!

தேக்கி வைத்த அணை நீராய்ச்
சேர்த்து வைத்த ஆசைகள்
மடை திறந்த வெள்ளமாய்த்
தடை ஏதும் இன்றியே
பொங்கி வழியும் காதல்
என் அருகில் நீ இருக்க
உலகை மறந்து
உயரப் பறந்திடும் மனம்
இடைவெளி இல்லாமல்
ஒருவரை ஒருவர்
புரிந்துகொள்ள அறிந்துகொள்ள
இடையூறு ஏதும் இன்றியே
காதல் பாடம் கற்றுப் பயிலத்
திருமணமெனும் பள்ளிக்கூட
அறிவிப்புப் பலகை ஊருக்கு அறிவித்ததே
புது மண தம்பதியர் இவர்கள் என்று!

”அணைபோட்ட ஆசைகள் மடைதிறந்த வெள்ளமாய்ப் பாய்ந்திட, இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத் திருமணப் பள்ளியில் இணைந்துவிட்ட புதுமணத் தம்பதியர் இவர்கள் என்பதை அறிவிக்கும் பலகை இது!” என்று அந்தரத்தில் ஊஞ்சலாடும் இணையருக்குச் சுந்தரத் தமிழில் அறிமுகம் தந்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்

  1. எனது படைப்பை சிறந்த கவிதையாய்
    தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி
    சக கவிஞர்கள் அனைவருக்கும்
    எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *