வாழ்ந்த விக்கிப்பீடியா!

0

சாமிநாதன் ராம்பிரகாஷ்  

எல்லோரும் வரலாறு, காதல், இலக்கியம் என்று எழுதிக்கொண்டிருந்த போது, இயந்திரம், இயற்பியல் என்று அறிவியல் சார்ந்த சிறுகதைகளைப் படைத்தார். அதுவும் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாய்.

அவர்தான் எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன்.

நம் முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா அப்துல் கலாம் படித்த அதே ஆண்டில்தான் இவரும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தார். துறைகள் வெவ்வேறு. அப்போது அதிகம் சந்தித்துக்கொண்டதும் கிடையாதாம்.

மத்திய அரசாங்க நிறுவனங்களான விமானத் துறையில் பதினான்கு ஆண்டுகள் டில்லியில், பிறகு பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் எனப் பணியாற்றியவர்.

வாக்களிக்கும் ஈ.வி.எம். எந்திரத்தை உருவாக்குவதில் தலைமை வகித்துச் சாதனை புரிந்தார்.

பொறியாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பலப் பரிமாணங்களில் தனது பன்முகத் தன்மையைக் காட்டி அசத்தியவர்.

இவரது கதைகள் மட்டுமல்ல, அவற்றுக்கு இவர் வைக்கும் தலைப்பும் மிக வித்தியாசமானவை.

உதாரணமாக “நில்லுங்கள் ராஜாவே”, “ஆ”,  “நைலான் கயிறு”, “திமிலா”, தேஜஸ்வினி எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று நாம் பயன்படுத்தும் ஹாலோகிராம் பிசிக்ஸ், புஷ் நோட்ஸ், தொடு திரை, சிலிகான் ஜாலங்கள் போன்றவற்றை 1978ஆம் ஆண்டே கூற ஆரம்பித்துவிட்டார், அவரின் எழுத்துகளின் மூலமாக.

அவரின் எழுத்துகள் மிக நேர்த்தியானவை, படிப்பவரை எளிதில் கவரக்கூடியவை.

அவருடைய ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றே அவரின் ஆற்றலுக்குப் பெரும் சாட்சி! காட்சிகளின் விவரிப்பு, கதாபாத்திரங்களின் ஆழம், கற்பனை என நம்மையும் அந்த ஸ்ரீரங்கத்து வீதிகளுக்கே கொண்டு சென்று விடும்.

ஒரு கட்டத்தில்  இவரது எழுத்துகள் இடம்பெறாத பத்திரிக்கை, தமிழகத்திலே இல்லை என்ற நிலை வந்தது.

கதை, கட்டுரை, கேள்வி பதில் பகுதி, இலக்கணம், இலக்கியம், வாழ்வியல் அனுபவங்கள் எனப் பல்வேறு வகையில் மக்களுடன் தொடர்பில் இருந்தார்.

இயக்குநர் இமயம் கே.பி. அவர்கள் இயக்கிய “நினைத்தாலே இனிக்கும்” என்ற படத்திற்குத் தான் முதலில் வசனம் எழுத ஆரம்பித்தார்.

பிறகு அவர் எழுதிய விக்ரம், கரையெல்லாம் செண்பகப்பூ, காயத்திரி, பிரியா போன்றவை திரைப்படமாக எடுக்கப்பட்டன.

ஒரு கட்டத்தில் ஷங்கர், மணிரத்னம் ஆகிய இருவருக்கும் ஆஸ்தான எழுத்தாளர் ஆனார்.

ஆயுத எழுத்து, அந்நியன், ரோஜா, இந்தியன், சிவாஜி, எந்திரன்  போன்ற படங்களில் இவரது வசனம் மிகப் பிரபலம் அடைந்தது.

பாய்ஸ் படத்தில் இவரது வசனங்கள் எதிர்ப்பிற்கு உள்ளாயின. அதையும் அவர் மிக லாகவமாகக் கையாண்டார்.

அவர் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைச் சுருக்கமாகத் திரைப்படமாக எடுக்கும் அளவுக்கு மணி சாருக்காகத் தயார் செய்து வந்தார். ஆனால் அது முடிவுறும் தறுவாயில் இறைவன் அடி சேர்ந்துவிட்டார்.

அவரது நினைவேந்தல் விழாவில்,  இயக்குநர் ஷங்கர் இப்படிப் பேசினார்.

“கொஞ்சம் கூட அலட்டல் அற்றவர், வேஷம் கிடையாது, மிக எளிமையானவர், முகஸ்துதி விரும்பாதவர். இந்தியன் படத்திற்காக அவரைச் சந்திக்கச் சென்றேன் அப்போது அவர் விகடனில் பொறுப்பு ஆசிரியர்.

வந்தார், கதையைக் கேட்டார்… ஓகே பண்ணலாம் என்றார் .

சம்பளம் பற்றிக் கேட்டேன் போன படத்துக்கு என்ன குடுத்தீங்களோ அதே போதும் என்றார்.

அவருக்குப் புதிய எண்ணங்களே பெரிது , காசு பணம் அல்ல. மேலும் கமலஹாசன் அவர்களுடன் பேசப் பெரிதும் உதவியாக இருந்தார்.

மேலும்  எனக்காக அவரிடம், ஷங்கர் நல்லா அருமையா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியிருக்கார், நீங்க வந்து நடிச்சு குடுத்தா மட்டும் போதும் என்று கூறினார்”

இவ்வாறு இயக்குநர் ஷங்கர் குறிப்பிட்டார்.

விக்கிப்பீடியாவாக வாழ்ந்த சுஜாதா, நம் நினைவுகளில் இன்றும் வாழ்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *