மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
மெல்பேண், ஸ்திரேலியா

இயற்கை யெனும் பெருமரணை
நொறுக்கி நிற்கும் வகையினிலே
எடுத்து வரும் பொருத்தமிலா
முயற்சி யெலாம் பெருகுவதால்
இயற்கை அது சீற்றமுற்று
எல்லை இலா வகையினிலே
கொடுத்து வரும் தண்டனையே
கொரோ நோவாய் வந்திருக்கு!

இயற்கை யெனும் பெருவரத்தைப்
புறக்கணிக்கப் பல வகையில்
செயற்கை எனும் வழியினிலே
இறக்கை கட்டிப் பறந்ததனால்
பயன் உடைய அத்தனையும்
பயன் அற்ற தெனும்மாயை
உலகினிலே வந்தமைந்து
உலகை இப்போ உலுக்கிறதே  !

விஞ்ஞானம் எனும் பெயரால்
விந்தை பல விளைந்ததுவே
அளவுக்கு மிஞ்சி விடில்
அவை அனைத்தும் ஆபத்தே
எஞ்ஞான்றும் விஞ்ஞானம்
உதவிவிடும் எனும் எண்ணம்
மண்ணுள்ளார் மன மேறி
மரண வாசல் பார்க்கின்றார்!

செயற்கை தனைச் சேர்க்கின்ற
செயல் களைய முன்வருவோம்
இயற்கை தனை இறுகணைக்க
இதயம் அதைத் திறந்திடுவோம்
அவசரமாய் நாம் அனைத்தும்
ஆக்கி விடும் மனநிலையை
அகற்றி நிற்க எண்ணிவிடின்
அகிலம் அதைக் காத்திடலாம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *