மீனாட்சி பாலகணேஷ்

(பூணணிதல்)

அரிதாகப் பாடப்பட்ட பருவங்களின் வரிசையில் நாம் காணப்போகும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் அடுத்த பருவம் ‘பூணணிதல்’ என்னும் பருவமாகும். இப்பருவத்தைப் பற்றிப் பாடியுள்ள ஒரேயொரு நூலான கதிர்காம பிள்ளைத்தமிழில் இப்பருவமானது சிறுதேர்ப்பருவத்தின் பின்பு அமைத்து வைக்கப்பட்டுள்ளது.

‘பத்திற் பூணணி’1 என பிங்கல நிகண்டு கூறுகின்றது. இதனைப் பத்தாண்டு எனக்கொள்ளல் வேண்டும். ஏனெனில் அடுத்த பருவத்தைப் ‘பன்னீராண்டினில்’ என விவரிக்கின்றது இந்நிகண்டு. ஆகவே இது பத்துமாதத்தில் பூணணிதல் ஆகாது. பத்தாண்டில் அணிவதே. மேலும் இவ்வயதில்தான் குழந்தைகள் அழகான உடைகள், அணிமணிகள் அணிந்துகொள்ள ஆர்வம் காட்டுவர். ஆகவே நாம் காணப்போகும் பாடல்கள் கூறுவனவையும் பத்தாண்டுகள் நிரம்பிய மகவிற்கே பொருந்தும்.

இவ்வயது மக்கள், அவர் ஆண்மக்களாயினும் அல்லது பெண்மக்களாயினும், அழகழகான அணிமணிகளை அணிந்துகொள்ள விரும்புவர். அதற்கேற்பத் தாய்மாரும் அணிமணிகளை அவர்களுக்கு அணிவித்து அழகுபார்க்கவும் விரும்புவர். குழந்தைப்பருவத்தின் ஒரு இனிய நிகழ்வு இதுவானமையால் இதனை ஒரு பருவமாகவே பாடினர் போலும்! ஆயினும் கதிர்காமப் பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே இப்பருவப் பாடல்களைக் காண்கிறோம்.

பிள்ளைத்தமிழ் எனும் அருமையான பிரபந்தத் தொகுப்பில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட நூற்களில் மூன்றே மூன்று பாடல்கள் மட்டுமே இவ்வினிய பருவத்தைப் பாடிப்போற்றியுள்ளன.

மற்ற பல தோத்திர நூல்களில் இத்தகைய பாடல்கள் பலவற்றைக் காணலாம். எடுத்துக்காட்டாக,

‘பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
                   பாடகம் தண்டை கொலுசும்
         பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட

பாதச் சிலம்பினொளியும்2…..‘ என காமாட்சியன்னை துதிப்பாடல் ஒன்று அன்னை அணிந்துள்ள அணிமணிகளை வரிசைப்படுத்துகின்றது. இது குழந்தை மீதான பாடலன்று.

‘மணியே மணியினொளியே ஒளிரும் மணிபுனைந்த
                 அணியே அணியும் அணிக்கழகே3 ….’ என்று அபிராமி அந்தாதி ஏத்துகின்றது.

‘இருபதமு மென்குரற் கிண்கிணியு முறையிட்
                   டிரைந்திடு மரிச்சிலம்பும்
          இறுமிறு மருங்கென் றிரங்குமே கலையும்பொ
                   னெழுதும்செம் பட்டு வீக்குந்
         திருவிடையு முடைதார மும்மொட் டியாணமுஞ்
                   செங்கைப் பசுங்கிள்ளையுந்
          திருமுலைத் தரளவுத் தரியமும் மங்கலத்
                   திருநாணு மழகொழுக4….

எனும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சிறுமியான அன்னை அணிந்துள்ள கிண்கிணி, சிலம்பு, மேகலை, உடைதாரம் எனப்படும் அரையில் அணியும் அணிகலன், ஒட்டியாணம், தரள உத்தரியம் எனும் முத்துக்கள் இழைத்த மேலாடை, மங்கலத்திருநாண் ஆகிய அணிகலன்களை கேசாதிபாதமாக அழகுற வருணிக்கின்றது; இது பொன்னூசற் பருவப்பாடல்! பூணணிதல் எனவோர் பருவமன்று.

‘பொன்னே வருக, பொன்னரைஞாண் பூட்டவருக, சிறுசதங்கை புனைய வருக,5 என்று பழனிப் பிள்ளைத்தமிழும் வருகைப்பருவத்திலேயே குழந்தையை விதம்விதமான அணிகலன்களைப் பூட்டி அழகுபார்க்க அழைப்பதாக அமைந்துள்ளது.

இதனின்று பெறும் கருத்து, கடவுளர்க்கும், கடவுளர்களாக நாம் பார்க்கும் குழந்தைகளுக்கும், மேலும் குழந்தையாக்கி நாம் கொண்டாடிப் போற்றும் கடவுள்களுக்கும் விதம்விதமான பலவகை அணிகளைப் பூட்டிப்பார்த்து மகிழ்வது மானிடரின் உளவியல் வகையிலான இயல்பும் அவருள்ளத்துத் தோன்றும் அன்பும் என்பதாகும்.

இனி கதிர்காமப் பிள்ளைத்தமிழின் முதற்பாடலைக் காண்போம்: முதலிரு அடிகளில் கதிர்காமம் எனும் தலத்தின் பெருமையைக்கூறிவிட்டுப் பின் அங்கு உறையும் முருகப்பெருமானுக்கு என்னவென்ன அணிகளைப் பூட்டி அழகு பார்ப்போம் எனக் கூறும்விதம் நயக்கத்தக்கதாம்.

‘வலிமைமிக்க இளைய குறவன் ஒருவன் நிலத்தை உழுகின்றான்; அவனுக்குப் பசிதீர வேண்டுமளவுமட்டும்  உண்பதற்காக நெய்யும் பாலும் சேர்த்து வட்டித்த வெப்பமுடைய தினைப்பொங்கற் சோற்றினை அவன் மனையாளான குறமகள் கொண்டு செல்கின்றனள். செல்லும்வழியில் முனிவரொருவர் கண்களைமூடி, தம் மனத்தை ஒடுக்கி இறைசிந்தனை வயப்பட்டு உணவும் கொள்ளாது பழமையானதொரு வேங்கைமரத்தடியே அமர்ந்துள்ளார். தாமே எடுத்து உண்ணவும் இயலாது உடல் தளர்ந்துபோன அம்முனிவருக்கு குறத்தியானவள் தான் எடுத்துச்செல்லும் உணவை வாயில் அருத்துவிக்கிறாள். இதனையறிந்த கணவனும் சினம்கொள்ளாமல் உள்ளம் மகிழ்கின்ற இயல்புடையவன். அத்தகையோர் வாழும் கதிர்காமத்தில் உறைபவனே!

(இதன் உள்ளுறைபொருள் கருத்தில் கொள்ளத்தக்கது. இயலாமை நிறைந்தவர்களுக்கு- இங்கு தவத்தினால் மெலிந்து உடல் குறுகிப்போன முனிவருக்கு- பணிவிடை செய்து, உணவளித்தல் ஒரு நன்மை பயக்கும் ஒழுக்கம் மிகுந்த செயல் என்பதாகும்).

‘தேவர்களுக்குமில்லாத கட்டழகு வாய்ந்தவன் நீ! உன்னழகிற்கு ஒப்பார் ஒருவருமில்லை. இருப்பினும் உனக்கு மேலும் அழகுசெய்து பார்க்க எண்ணும் ஆசையும், பேதைமைக்குணமும் இல்லாத மானிடருமுளரோ?

‘ஆதலால், இவ்வுலகத்தார் பெரிதெனக்கருதும் சிறு கைக்கடிகாரம் (பொழுதறிபொறி)- அதனைப் பொன்னாலாகிய தொடர் சங்கிலி பொருத்திய காப்பில் உன் கையினில் பூட்டிக்கொள்வாயாக! கமுகுபோன்ற கழுத்திற்கு இசைந்த முத்தாரத்தையும் விட்டுவிட்டு ஒளிசெய்யும் பொன்னாரத்துடன் பூட்டிக் கொள்வாயாக!’ என்று தனக்கே உரிய அன்புடன் தாய் வேண்டுகிறாள்.

            செம்புலமு ழாநிற்கு மைந்துமலி புனவன்றெ
                            விட்டக்கொ டிச்சிகொடுபோந்
            தினையினது வெய்துநெய்ப் பாற்பொங்க னெறியிடைத்
                            திறவாது கண்முகைத்துத்
         ……………………………………………..

         உம்பரொரு வர்க்குமில் கட்டழகு னக்குண்டு
                            கப்பிதற் கழகுமுண்டோ?
                   …………………………………………….

         இம்பரது பொழுதறிபொ றிப்பூட்டு கைப்பூட்டி
                            ணைப்பொலந் தொடிபூண்கவே
         யிறைவ!கமு கங்கமுத் தியையுமுத் தாரமொடி
                            மைப்பொலங் கொடிபூண்கவே6!

கைக்கடிகாரம் தற்காலத்திய கண்டுபிடிப்பு. இதனையும் இப்பாடலில் அழகுறச் சேர்த்துக் கூறியுள்ளார் புலவனார். அழகுக்காக மனிதர்கள் பொன்னாரம் அமைத்த கடிகாரத்தை அணிவது உண்டு.

வயிரங்களால் இழைக்கப்பட்ட ஒலிசெய்யும் வளைவுபொருந்திய காற்சிலம்பு, அதனையணிந்த முருகனின் திருவடிகளில் சிந்தையைப் பதித்து நிற்கும் அடியார்களின் உள்ளத்தைத் தம்பால் வளைத்து இழுத்துக் கொள்கின்றதாம். முருகப்பிரானின் திருமார்பிற் சேரும் வள்ளியம்மை, அவ்வமயம், அத்திருமார்பில் விளங்குவதனால் மிகுந்த அழகுபெற்று விளங்கும் பதக்கத்தில் பதித்த தனது நோக்கினை மீட்க இயலாதவளாகி நின்றனள். மேலும் இந்திரன் (முகிலூர்தி) அளித்த மூன்றுவித மணிகளாலான மாலை, பிரமன் அளித்த நான்மணிமாலை, முருகனது இளவல்களான வீரவாகு தேவர் முதலான ஒன்பதுவீரர்கள் விளங்கும் ஒன்பது இரத்தினங்களின் மணிமாலை, தயிரைத் திருடித்தின்ற மாமனான திருமால் கொடுத்த அசையும் பன்மணிமாலை, ஆண்வடிவான சிவபிரானும், பெண்வடிவான உமையன்னையும் சார்த்துகின்ற புன்னகைமாலை, ஆகியனவற்றை உயிர்கள் அனைத்தும் இன்புற்று இருக்குமாறு நீ, அவையவற்றின் உணர்வினைக் களவாடிக்கொண்டு மகிழ்விக்குமாறு புனைந்துகொண்டு அருளுவாயாக! உலகினையே நீ தாங்கி நிற்கும் தன்மையை உணர்ந்த ஆன்றோர் உன் வடிவினைத்தம் உள்ளதிற்கிருத்தி உருகுமாறு இவ்வணிகளைப் புனைந்து அருளுவாயாக!

            வயிரம் பதித்துத் தெருளுள்ளம்
                            வளையவ ளைக்கு நரன்ஞெகிழம்
                   வள்ளிக் கொடிகண் மணிபதிக்கு
                            மார்பிற்ப தக்க முகிலூர்தி
         ………………………………………………

         தயிருண் டோடிய நல்லம்மான்
                            தந்த துயல்பன் மணிமாலை
                   ……………………………………….

         உயிரின் புறுகதிர் மலைக்குமரா!
                            உணர்வு திருடப் புனைந்தருளே!
         உலகினை யணியும் நின்வடிவ
                            முரவோர் வருடப் புனைந்தருளே7!

மேலான கருத்துக்களையும் வேதாந்தச் சித்தாந்தத் தொன்மங்களையும் தன்னுள் அடக்கிய பாடலிதுவாகும். ஏனெனில் ஒவ்வொரு அணியும், அணியின் உயர்வுக்கும் அழகுக்கும் மட்டுமேயின்றி, அது பொருந்தியுள்ள இடத்தின் பெருமையைக் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, காற்சிலம்பு அழகானதே. அதனை நோக்குபவர் கருத்தும் சிந்தையும் வளைந்து அதனையணிந்துள்ள அண்ணலின் திருவடிகளில் தங்குகின்றன எனும் கருத்தினைப் பெறலாம்.

தொடரும் மூன்றாம் பாடல் புலவர் வாக்காகின்றது. உலகியலில் எதற்கெல்லாம் எவை அணி எனக்கூறுகிறார்:

            ‘கண்ணிற்கு அணியானது கருணைநோக்கு உடைத்தல்;

            (குறள்: கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
                                புண்ணென்று உணரப் படும்8)

கல்விக்கு அணி கற்றதனைக் குற்றமற மொழிதல்; எண்ணுவதற்குள் அணியானது அருட்தன்மையே! இந்த மண்ணிற்கு அணி கதிர்காமக் கோட்டமாம்; நூல்களுக்கு அணிசெய்வன உவமங்களாகும்; பெருமைசேர்ந்த அணி பொறுமை; மனையறத்தின் மாட்சிக்கு அணியாவது மகவே!

            (குறள்: மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
                                 நன்கலம் நன்மக்கட் பேறு9).

நாணுடைமை என்பது நிறைமொழி மாந்தர்க்கட்கு அணி; இளைஞர்கட்கு அணி பணிவு; எமது கண்களுக்கு நின் திருவடியே மெய்யான அணியாகும்! உனக்கு அடியார்களாகிய யாம் பொற்பணி அணிவித்தோம்,’ என்கிறார்.

            ‘கண்ணிற் கணிகண் ணோடுதன் மாந்தர்
                   காண்டக விரைவினவுங்
             கல்விக் கணிபொருள் கசடற, மொழிதல்
                   கருதற் கணியருளே
         ……………………………………………..

         ………………………………..மனையற
                   மாட்சிக் கணிமகவே
         விண்ணிற் கணிநீ நின்திரு மெய்க்கணி
                   வினையேம் பொற்பணியே
             வேசறு மடியார் விழிவாய் பருகவி
                   துத்தனர் பொற்பணியே.’10

என்பன இப்பாடல் வரிகளாகும். மிக்க பொருள்செறிந்த கருத்துக்களை முன்வைக்கும் பாடலிதுவாம். திருக்குறள் கருத்துக்கள் பலவற்றை  இவை தெரிவிப்பதனைக் காணலாம்.

இப்பருவத்துப் பாடல்கள் மூன்றேயாகினும் கருத்துச் செறிவில் மிக உயர்ந்து பல உள்ளார்ந்த சிறப்பான கருத்துக்களைக் கூறுகின்றன. இவற்றை ஆன்றோர் வாயிலாகக் கேட்டுப் பொருளுணர்வது சாலச் சிறந்ததாகும்.

                                                                                                                                                                                                       (தொடரும்)

பார்வை நூல்கள்:

1. பிங்கல நிகண்டு- பிங்கல முனிவர்
2. காமாட்சியன்னை துதி
3. அபிராமி அந்தாதி- அபிராமி பட்டர்
4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
5. பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்
6,7,10. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்
8, 9. திருக்குறள்- திருவள்ளுவர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *