நாங்குநேரி வாசஸ்ரீ

124. உறுப்புநலன் அழிதல்

குறள் 1231

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்

இங்ஙன நம்மள உட்டுப்போட்டு தூரதொலைவு போயிட்டாகளேன்னு நேசம் வச்சவர நெனச்சி அழுதவளோட கண்ணு அழகுகெட்டு பூக்களுக்கு முன்ன வெக்கப்பட்டு கெடக்கதுங்க.

குறள் 1232

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்

பசல படந்து கண்ணீரு உட்டு இருக்க கண்ணுங்க நேசம்வச்சவரு எங்கிட்ட பாசமா இல்லங்கத சொல்லிக்காட்டிப் போடும்.

குறள் 1233

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்

கூடி இருந்த நேரம் சந்தோசத்துல பெருத்த என் தோளுங்க இப்பம் எளச்சி அவரு பிரிஞ்சதக் காட்டிக்குடுக்குதுங்க.

குறள் 1234

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்

அவுக என்னயவுட்டு பிரிஞ்சதால பழைய அழகு கெட்டு வாடி இருக்க என் தோளுங்க இப்பம் வளவி கழண்டு விழுத அளவு மெலிஞ்சு போச்சுது.

குறள் 1235

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்

வளவி கழண்டு பழைய அழகு கெட்டுநிக்க என் தோளுங்க அவரு என்னயப் பிரிஞ்ச கொடுமய ஊருக்கு சொல்லுதுங்க.

குறள் 1236

தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
கொடியார் எனக்கூறல் நொந்து

என் தோள் மெலிஞ்சு வளவி கழண்டு விழுததக் கண்ட பொறத்தியார் அவரக் கொடியவருனு சொல்லுததக் கேக்க சங்கடமா இருக்கு.

குறள் 1237

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து

மனசே! வாடி வதங்கி இருக்க என் தோள் மெலிஞ்சு நான் படுத சங்கடத்த அவுகளுக்கு சொல்லி பெரும பட்டுக்கிடுவயோ?

குறள் 1238

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்

இறுக அணைச்சிக்கிட்டிருக்க என் கைய பைய வெலக்குததுக்குள்ளார தங்க வளவி போட்டிருக்க அவ நெத்தியில பசலை வண்ணம் படர்ந்துபோச்சு.

குறள் 1239

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்

இறுக அணைச்சு இருக்கையில இடையில குளுந்த காத்து(காற்று) உள்ளார நுழைஞ்சுச்சு. அதக்கூட பொறுக்க ஏலாம அவ கண்ணு பசல பூத்துப் போச்சு.

குறள் 1240

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு

பிரிஞ்ச சங்கடத்துல நெத்தியில பசலை பூத்ததப் பாத்து அவ கண்ணோட பசலையும் சங்கடப்பட்டுப் போச்சு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *