செல்வன்

1845ம் ஆண்டு….தத்துவஞானியும், எழுத்தாளருமான ஹென்றி டேவிட் தெரோ தன் சக எழுத்தாளர் ரால்ப் வால்டோ எமர்சனுக்கு சொந்தமான காட்டுப்பகுதி ஒன்றில் ஒரு பரிசோதனை மேற்கொண்டார்.

நல்ல வேலை, வருமானம் அனைத்தையும் விட்டுவிட்டு காட்டுபகுதிக்கு சென்று இரண்டு ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? அதையும் நகர்ப்புற வாழ்க்கையையும் ஒப்பிட்டால் என்ன தெரிந்து கொள்ளமுடியும்?

ஒரே ஒரு கோடரியை மட்டும் கடன்வாங்கிக்கொண்டு கையில் ஒரு பைசா இல்லாமல் காட்டுக்கு சென்ற தெரோ அங்கே சின்ன காட்டேஜ் ஒன்றை தானே கட்டினார். நாற்காலி, கட்டில் எல்லாம் அவரே மரத்தில் செதுக்கினார். கட்டிடம் கட்டிமுடிக்கும்வரை அவர் கொண்டுபோன புத்தகங்களை அவர் படிக்கவில்லை. அதன்பின் தான் கொண்டுபோன ஹோமரின் இலியாட் நூலை படித்தார். காட்டுபகுதியில் பீன்ஸ், உருளைக்கிழங்கை தானே பயிரிட்டார்.

அதன்பின் அன்றைய “நவீன (1845ம் ஆண்டு)” வாழ்க்கைமுறையை விமர்சித்து “புதிய பொருளாதார கொள்கை” ஒன்றை உருவாக்கினார்

உணவு, இருப்பிடம், எரிபொருள்…இதை தவிர மனிதனுக்கு வேறு எதுவும் அவசியமில்லை.

தேவைகளை மிக சுருக்கிகொண்டால் ஏராளமான நேரம் கிடைக்கும்.

மனிதனின் மிகப்பெரிய செல்வம் நேரம் தான் என தெரோ நம்பினார். பணத்தை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரன், அவன் இறக்கும் தருவாயில் “உன்னிடம் இருக்கும் எல்லா பணத்தையும் கொடு. இன்னும் ஒரே ஒரு ஆண்டு கூடுதலாக வாழ முடியும்” என்றால் அந்த டீலை மறுக்கவா போகிறான்?

“என் தேவைகளை உணவு, இருப்பிடம், எரிபொருள் என மட்டுமே சுருக்கியதால் ஒரு வாரத்துக்கு தேவையான பணத்தை ஒரே நாளில் சம்பாதிக்கமுடிகிறது. மற்றவர்களுக்கு வாரம் இரு நாள் விடுமுறை. எனக்கு ஆறு நாள் விடுமுறை” என்கிறார்.

தெரோ விடுமுறை நாட்களில் காடுகளில் நடப்பார். அருகே இருக்கும் கிராமங்களுக்கு செல்வார். அவரை காணவரும் நண்பர்களிடம் உரையாடுவார். தப்பி ஓடும் அடிமைகளை ரயில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பிவைப்பார். வால்டன் குளத்தில் மீன்பிடிப்பார். நூல்களை படிப்பார்.

“இந்த அளவு மகிழ்ச்சியாக நான் என்றுமே இருந்ததில்லை. அறுபது ஏக்கர் நிலம், ஏகபட்ட குதிரைகள், மாடுகள் என வைத்து வாழும் விவசாயிகள் வாரம் ஏழு நாளும் உழைக்கிறார்கள். வாழ்நாள் முழுக்க வேலை செய்தே உழைத்து இறந்துவிடுகிறார்கள். அதற்கு பரிசாக அவர்களுக்கு கிடைப்பது நல்ல வேலைப்பாடு உள்ள வீடு, கட்டில், ஜன்னலில் திரைகள்..இவைதான். தன் வாழ்நாளை முழுக்க இதற்காக இழக்கிறோம் என அவர்கள் உனர்வதில்லை..”

“குதிரை வண்டி இருந்தால் நேரம் மிச்சமாகும். நான் நடந்துபோகிறேன். நேரம் கூடுதலாக பிடிக்கதான் செய்கிறது. ஆனால் ஒரு குதிரைவண்டி, குதிரைகள், தீனி..இதை எல்லாம் வாங்க ஒரு ஆண்டு வருமானத்தை இழக்கவேண்டும். பெரியவீடு, ஆடம்பரங்கள் எல்லாம் சம்பாதிக்க நம் வாழ்நாளில் விலைமதிப்பில்லாத ஆண்டுகளை இழந்துதான் பெறுகிறோம். காலத்தை கணக்குபோட்டால் இவை எல்லாம் மிகப்பெரிய இழப்புகள் தான்..”

1845 வாழ்க்கைமுறையையே இப்படி விமர்சித்தவர் இப்போது இருந்தால் என்ன சொல்லி இருப்பார் என யோசித்தால் சிரிப்புதான் வருகிறது.

நாம் வாங்கும் ஆடம்பரபொருள் எல்லாமே நம் வாழ்க்கையின் விலைமதிக்கமுடியாத ஆண்டுகளை இழந்து பெறப்படுபவைதான். அந்த பொருள்களால் நமக்கு கிடைக்கும் பலன்கள் நிச்சயம் நாம் இழக்கும் காலத்தை விட மதிப்பு குறைவானவையே.

வாரத்தில் ஆறுவிடுமுறைநாட்கள்-> அம்பானிக்கும், ஜெப் பிசோசுக்கும் இன்னும் கிடைக்காத ஆடம்பரம்தானே?

இரு ஆண்டுகள் காடுகளில் வசித்துவிட்டு நகர்ப்புறம் திரும்பி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து பல நூல்களை எழுதி மறைந்தார் தெரோ. அவரது வனப்பகுதி அனுபவங்கள் வால்டன் எனும் நூலாக வெளிவந்தது. 19ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்று வால்டன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *