அவலநிலை போக்குதற்கு ஆண்டவனே வழிகாட்டு!

0

மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா,
மெல்பேண்ஸ்திரேலியா

கட்டி அணைத்தோம்
கைகுலுக்கி மகிழ்வடைந்தோம்
இட்டமுடன் உணவுகளை
எடுத்துண்டு இன்புற்றோம்
கட்டி அணைத்தவரை
கைகுலுக்கி நின்றவரை
எட்டவே நில்லென்று
எச்சரிக்கை செய்கின்றோம்!

கைதந்தால் ஓடுகிறோம்
கால்பட்டால் பதறுகிறோம்
முன்னின்று மூச்சுவிட்டால்
பின்னோக்கி ஓடுகிறோம்
தும்மல்வந்து விட்டாலே
துடிதுடித்து நிற்கின்றோம்
கொரனோவின் வில்லத்தனம்
அளவின்றிப் போகிறதே!

கொரனோவின் பரவலினால்
கொள்கலங்கள் தடையாச்சு
கடையெல்லாம் சனக்கூட்டம்
பொருள்தேடி அலைகிறது
கல்விகற்கும் மாணவர்கள்
கதிகலங்கி நிற்கின்றார்
மெள்ளமெள்ள கொரனோவும்
பள்ளிநோக்கிப் பார்க்கிறது!

வெளிநாட்டுப் பிரயாணம்
அத்தனைக்கும் வேட்டுவைத்து
உள்நாட்டு விழாவனைத்தும்
ஓரங்கட்டும் நிலையாச்சு
யாருக்கு வருமென்று
தெரியாத மாயமதாய்
பாருக்குள் கொரனோவும்
பாய்ந்துவிடத் துடிக்கிறது!

மக்கள்கூடும் இடத்தினிலே
தன்மதிப்பைக் காட்டுதற்கு
கொரனோவும் ஆவலுடன்
கொடியெடுத்து நிற்கிறது
வீட்டுக்குள் இருந்துவிட்டால்
வில்லனிடம் தப்பிடலாம்
என்கின்ற அறிவுரையால்
எல்லோரும் முடங்கிவிட்டார்!

ஆலையெலாம் மூடிவிட
ஆலயங்கள் அடங்கிவிட
அரக்கனென கொரனோவும்
ஆர்ப்பரித்து எழுந்துவிட
ஆர்வருவார் இடர்களைய
என்றேங்கும் அகிலமக்கள்
அவலநிலை போக்குதற்கு
ஆண்டவனே வழிகாட்டு ! 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *