நாங்குநேரி வாசஸ்ரீ

125. நெஞ்சோடு கிளத்தல்

குறள் 1241

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து

மனசே! நேசத்தால வளந்த இந்த நோயப் போக்குத மருந்து எதையாச்சும் ரோசன பண்ணி சொல்ல மாட்டியோ?

குறள் 1242

காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு

அவுக நம்ம நேசத்த மதிச்சு வராதப்போ மனசே! நீ மட்டும் அவுகள நெனச்சு சங்கடப்படுதது உன் புத்திகெட்டதனம்.

குறள் 1243

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்

பிரிஞ்சிபோயி இரக்கமில்லாம இருக்க அவுகளப்பத்தி மனசே! நீ இங்ஙன இருந்துக்கிட்டு வெசனப்படுததால பிரயோசனம் ஒண்ணுமில்ல.

குறள் 1244

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று

மனசே! நீ அவுகளக் காணப் போவுதப்போ கண்ணையும் கூட்டிக்கிட்டுப்போ. ஏம்னா அவுகளக் காணிக்கச்சொல்லி என்னயப் புடுங்கித் தின்னுதுவ.

குறள் 1245

செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்

மனசே! நான் ஆசப்பட்டு இருந்தாலும் என்னய நேசிக்காத அவுகள என்னய வெறுக்காகனு நெனச்சி கைவுட ஏலுமா?

குறள் 1246

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு

கோவப்படுத சமயம் கூடிஇருந்து சமாதானம் செய்யுத காதலரக் கண்டா ஒருதடவைக்கூட பிணங்காம இருக்க நீ இப்பம் அவுக மேல காட்டுத கோவம் பொய்தானே?

குறள் 1247

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு

நல்ல மனசே! ஒண்ணு நேசிக்கத உட்டுப்போடு. இல்லன்னா சொல்லக் கூசுத வெக்கத்த உட்டுப்போடு. ரெண்டையும் ஒரேசமயத்துல சமாளிக்க என்னால ஏலல.

குறள் 1248

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு

இரக்கமில்லாம உட்டுப்போட்டு போயிட்டகளேனு நெனைக்க நேரம் அவுக பின்னாலயேயும் போவுத எம்மனசு கூறுகெட்டது.

குறள் 1249

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

மனசே! நேசிக்கவரு உனக்குள்ளார இருக்கையில வெளியில யார்கிட்டத் தேடிக்கிட்டு சுத்திக்கிட்டுக் கெடக்க.

குறள் 1250

துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்

சேராம பிரிஞ்சு போன நேசிக்கவர மனசுல வச்சிருக்கதால மேல மேல மேனி நொந்து மெலிஞ்சு அழகு கொறஞ்சுக்கிட்டே வருது. ..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *