செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(292)

செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்.

       – திருக்குறள் –437 (குற்றங்கடிதல்)

புதுக் கவிதையில்...

செல்வத்தால் செய்யத்தகுந்த
நற்செயல்களைச் செய்யாமல்,
பற்றதன் மீது கொண்டு
சேமித்து வைப்பவன் செல்வம்
உய்வகையின்றிக்
கெட்டழியும்…!

குறும்பாவில்...

செல்வத்தால் செய்துகொள்ளவேண்டிய நற்செயல்களைச்
செய்யாமல் அதன்மீது பற்றுள்ளம்கொண்டோன் செல்வம்,
நிலைக்கும் தன்மையின்றி அழிந்திடும்…!

மரபுக் கவிதையில்...

சேர்த்து வைத்த செல்வத்தால்
     செய்திட வேண்டிய நற்செயல்கள்
பார்த்துச் செலவு செய்யாமல்
   பற்றதன் மேலே கொண்டவன்தான்
சேர்த்த செல்வ மெல்லாமே
  சென்றிடு மவனைக் கைவிட்டே,
பார்த்தி டதுதான் நிலைக்காதே
  பயனே யிலாது கெட்டழியுமே…!

லிமரைக்கூ..

செல்வத்தால் செய்திடு நல்லதே,   
அதுவன்றி அதன்மீது பற்றுளோன் செல்வம்
நிலைக்காதே கெட்டழிய வல்லதே…!

கிராமிய பாணியில்...

நல்லதுசெய் நல்லதுசெய்
செல்வத்தால நல்லதுசெய்..

செய்யவேண்டிய நல்லதெல்லாம்
சேத்துவச்ச செல்வத்தால
செய்யாம அதுமேல
ஆசவச்சவன் செல்வமெல்லாம்
அவங்கிட்ட நெலைக்காம
கெட்டழிஞ்சி போவுமே..

அதால
நல்லதுசெய் நல்லதுசெய்
செல்வத்தால நல்லதுசெய்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *