வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-15

0

தி. இரா. மீனா      

காவுதி மாச்சய்யா

கல்யாண் நகரத்தில் சரணர்களோடு சேர்ந்து சிவ வழிபாட்டில் காலம் கழித்து வந்தவர். ”கல்யாணத திரிபுராந்தக லிங்கதல்லி காவுதி மாச்சய்யா ஹேளிது தடவண்ணிரண்ணா” என்பது இவரது முத்திரையாகும்.

“தன்னுடல் தனக்குச் சுமையானானபின்
தான் சுமக்கப் போவதென்ன?
கிடைத்த அறிவு மறைந்த பின்னர்
தான் நினைப்பதெதனை?
இதனால் திரிபுராந்தக இலிங்கத்தில்
காவுதி மாச்சய்யன் சொன்னது உண்மையென்பீர் “

“சரணர் பொருள் சேர்த்து உடலிருக்கும் போதே
குருலிங்கம் ஜங்கமத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும்
இதுவே நல்ல பக்திக்கு அடையாளம்
தனக்குப் பின்பான செல்வம் வாரிசுகளுக்கெனில்
அது ஒழுக்கத்திற்குக் கேடு.
இதையறிந்து கல்யாணத திரிபுராந்தக இலிங்கத்தில்
காவுதி மாச்சய்யன் சொன்னதைக் கேட்டு உண்மையென்பீர்”

குப்த மஞ்சண்ணா 

வைணவ சமயத்தைச் சேர்ந்த இவர் பசவேசரின் கருத்துக்களால் கவரப்பட்டு சிவ சாரணராக மாறியவர்.முதலில் இரகசியமாக சிவனை வழிபட்டு பின்பு அனுபவ மண்டபத்தில் எல்லோருடனும் இணைந்தவர். கல்யாணில் வாழ்ந்து சிவபக்தியை முழுவதுமாக வெளிப்படுத்தியவர். ”நாராயணப் பிரிய ராமநாதா” என்பது இவரது முத்திரையாகும். வைணவத்திலிருந்து மாறியவரென்பதால் இவர் வசனங்களில் சில கருத்துக்கள் அது தொடர்புடையதாக வெளிப் படுகின்றன.உலக அனுபவம் சார்ந்ததாக வசனங்கள் அமைகின்றன.

“ஆன்மபலத்தால் போராடினேன் என்பவனுக்கு
உண்மைத் தத்துவத்தின் பொருள் புரியுமா?
வேதம் சாத்திரம் ஆகமமறிந்தவனுக்கு
விவாதம் செய்யும் நிலயெதற்கு?
மலரும் மணமும் போல
தீயும் காற்றும் போல
பாலும் நீரும் போல
நாராயணப் பிரியன் இராமநாதனுள் இரண்டறக் கலந்தவன்
தன்னுளுள்ள மெய்ஞ்ஞானத்தை வெளிப்படுத்த வேண்டும் “

 “புகழுக்கு உலகைப் பயன்படுத்துவது பக்தியா?
நிந்தனைகளுக்கு முனிவர்கள் அஞ்சுவாரோ?
புகழுக்காகச் செய்பவர்கள் பக்தர்களா?
இச்சைக்குப்  பேசுவது பற்றற்றவனாக்குமா?
இவற்றின் நெருக்கம்  உங்களுக்கேன்?
நாராயணப்பிரியன் இராமநாதன் உங்களைச் சிறிதும் விரும்பான்”

“பூவில் மணம் ,கனியில் சுவை
பெண்ணின் ஆசையென்பன
பருவம் சார்ந்தன்றி விருப்பம் சார்ந்ததல்ல.
தன்னையறிவதற்கு முன்பு இலிங்க வசப்பட வேண்டும்
பொன் பொம்மையை உருக்கிய பின்பு
வடிவத்தை மீண்டும் பெறமுடியுமா?
நாராயணப் பிரியனே இராமநாதனே “

குருபுரத மல்லையா

சிவபக்தியின் மேன்மை வசனங்களில் வெளி்ப்படுகின்றன. ”குருபுரத மல்லையா “என்பது இவரது முத்திரையாகும்.

 “நேரத்திற்கொரு மாதிரி சிந்திக்கும் மனதைக் கண்டு,
தினமும் ஒரு வகையாகும்  உடல் கண்டு பயமெழுகிறது.
நொடியில் விதவிதமாக மனம் நினைக்கிறது.
உன்னை நினைக்க விடாமல் மனம் பகையாகிறது
குருவே குருபுரத மல்லையனே”

குருசித்ததேவா

“சங்கண பசவேஸ்வரா“ என்பது இவரது முத்திரையாகும். தத்துவ விளக்கமாகவே இவர் வசனங்கள் அமைகின்றன.

“உடலில் இலிங்கமணிந்து சரணரெனச் சொல்லி
சிவவணக்கத்தின் பாதை தவறி
உலகோர் வணங்கும் தெய்வங்கள் முன் இலிங்கத்தோடு
விழுந்து சரண் வேண்டுகிறவனின் பிறவி நீக்கி
நரகம் தப்பாமல் தந்து இழிபிறவி தந்து பிரளயமும்
தருவான் காண் சங்கண பசவேஸ்வரன்”

குகேஸ்வரய்யா 

“குகேஸ்வர பிரிய நிராளலிங்க“ இவரது முத்திரையாகும்.

“சிவசிவ என்று வெறுமனே உச்சரித்தால் பிறவியொழியும்
என்னும் அறிவற்றவரின் பேச்சைக் கேட்கக் கூடாது
இருளான வீட்டில் வெளிச்சத்தை நினைத்தால் அது வருமா?
காமக்காய்ச்சலின் போது அரம்பையை நினைப்பின் நீங்குமா?
இத்தகைய மனித ஆடுகளின் பேச்சு
நகைப்பையே தரும் நம் குகையீசப்பிரிய நிராளலிங்கனுக்கு”

கொக்கவ்வா

சாம்பிராணி போடுவது இவரது தொழிலாகும். அதனால் ”சாம்பிராணி போடும் கொக்கவ்வா” என்ற பெயரும் இவருக்குண்டு. சிவன் மீது கொண்ட பக்தியால் திருமண வாழ்வையொதுக்கி நோன்பை ஏற்றுகல்யாண் நகருக்கு வந்தவர். “நாஸ்தி நாதா” என்பது இவரது முத்திரையாகும். இலிங்கம்—அங்கம் சமநிலை, ஆண் பெண் சமத்துவம் ஆகியவை வசனங்களில் இடம் பெறுகின்றன. காயகம் சார்ந்த சொற்கள் வெளிப்படுகின்றன.

“மோகம் கொண்ட ஆண் பெண் கை பற்றினால்
அது அவனுடைமையென நினைக்க வேண்டும்
பெண் மோகம் கொண்டு ஆணின் கைபற்றினால்
அது என்னவென்றறிய வேண்டும்
இந்த இரண்டின் வேற்றுமையும் நீக்கி
மகிழ்ந்தால் நாஸ்திநாதன் நிறைவுடையவானாவான்”

“முலை தோன்றினால் பெண்ணென்பர்
மீசை முளைத்தால் ஆணென்பர்
இவ்விரண்டின் அறிவு
ஆணோ பெண்ணோ நாஸ்திநாதனே”

கோணி மாரய்யா

கோணியை அணிந்து பசு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டவர். ”கேட்டேஸ்வரலிங்கா “இவரது முத்திரையாகும். காயகம் சார்ந்த சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

“வாள் குத்திய பின்பு
வாள்முனை குத்தியது எனச் சொல்வது மூடரின் இயல்பு
அறிவை உள்வாங்கும் மனதுக்கு மறதி என்றேனுமுண்டா?
உறுதி ஏற்பட்ட பின்னர்
அதன் செயல்பாடு மறைவதில்லை
சரணமெனச் சொல்லி பிச்சையெடுத்து பிறருக்குக்  கொடுக்கும்
சரணருக்கு குழப்பமில்லை ; துன்பமில்லை
கேட்டேஸ்வர இலிங்கத்தின் அடியவரானதால்”

                                    [தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *