குறளின் கதிர்களாய்…(293)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(293)
பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.
– திருக்குறள் – 322 (கொல்லாமை)
புதுக் கவிதையில்…
பிற உயிர்களை வதைக்காமல்
பசித்த உயிர்களுக்குப்
பகுத்துக் கொடுத்து உண்டு
பல உயிர்களைக் காத்தல்,
அறநூலார் தொகுத்தளித்த
அறங்களிலெல்லாம்
தலையாய அறமாகும்…!
குறும்பாவில்…
பசித்த உயிர்களுக்குப் பகிர்ந்தளித்துண்டு
பல்லுயிர் காத்தல், அறநூலோர் தொகுத்த
அறங்களிலெல்லாம் முதன்மையானதே…!
மரபுக் கவிதையில்…
பசியில் உயிர்களை வதைக்காமல்
பசித்த உயிர்களைப் பார்த்தவைகள்
புசித்திடப் பகிர்ந்து கொடுத்துண்டு
பல்லுயிர் காத்தலே பேரறமாம்,
பசியதை யாற்றுமிந் நல்லறமே
பலவாய் அறநூல் வல்லுநர்கள்
நிசமாய்த் தொகுத்த அறங்களிலே
நிச்சய மாகத் தலையாயதே…!
லிமரைக்கூ..
பார்த்திடு பலவுயிர் நிலையே,
பசிக்குணவு பகிர்ந்தளித்துப் பலவுயிர் காத்திடல்
பேரறங்களில் எல்லாம் தலையே…!
கிராமிய பாணியில்…
கொல்லாத கொல்லாத
வாயில்லா உயிர்கள
வதச்சிக் கொல்லாத..
பசியாயிருக்கிற உயிர்களுக்குப்
பங்குவச்சி ஒணவுகுடுத்துப்
பசிபோக்கிப்
பல உயிரக் காப்பாத்துறது
பெரிய புண்ணியந்தான்..
இது
பெரியவுங்க சொல்லிவச்ச
அறங்கள் எல்லாத்திலயும்
ரெம்ப ஒசந்ததுதான்..
அதால
கொல்லாத கொல்லாத
வாயில்லா உயிர்கள
வதச்சிக் கொல்லாத…