(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு

0

(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு

மு. மோகனலட்சுமி

முனைவர் பட்ட ஆய்வாளர்

அரிய கையெழுத்துச் சுவடித்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

முன்னுரை

 பெருமையும் வளமும் பெற்ற தமிழ் மொழியைப் பன்னெடுங்காலமாக வளர்த்த இலக்கியங்களும் இலக்கணங்களும் நம் மொழியின் இரு கண்களாகக் கருதப்படுகின்றன. ஓர் இலக்கியத்தில் அல்லது இலக்கணத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் மொழியமைப்புகளையும் விளக்கிக் கூறுவதற்கென உரைகள் தேவைப்பட்டன.

2500 ஆண்டுகளுக்கு முன்னர்ப் படைக்கப்பட்ட தொல்காப்பியத்தைப் புரிந்து கொள்வதில் சிக்கல்கள் நேரும்போது உரையாசிரியர்கள் மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்தரும் வகையில் உரைகள் எழுதிச் சிறப்புச்செய்தனர். அவர்களின் அணுகுமுறை, கல்வி கேள்விகளில் கிடைத்த பட்டறிவு, குறிக்கோள் போன்றவற்றின் அடிப்படையில் மொழி நடை மாறியிருப்பதைக் காண முடிகிறது. நிறைய சான்றோர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள்.

இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகிய ஐவருமே தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய பெரும் சிறப்பு வாய்ந்த உரையாசிரியர்கள் ஆவர் (சுப்பிரமணியன், 2004).

‘’இலக்கியம் இலக்கணம் எனும் இரண்டில் முதன்முதலில் இலக்கண நூல்களுக்கே உரைகள் எழுதத் தலைப்பட்டனர் சான்றோர் பெருமக்கள்’’ என்று [இளங்குமரன், 1988-பக். 28] இலக்கண வரலாற்றில் கூறுகிறார்.

காலந்தோறும் விரிவடைந்து வருகின்ற ஆய்வுலகில் எழுகின்ற புதுச் சிந்தனைகள், ஆய்வுநெறி அனுகூலங்கள் போன்றவை உரையாசிரியர்களின் உள்ளத்தில் பதிந்து அவற்றின் தாக்கத்தால் புதிய கோணங்களில் இலக்கணத்தை ஆராய்ந்து தெளிவுரை, புத்துரை, விளக்கவுரை, பொழிப்புரை, சிற்றுரை, பேருரை, நயவுரை, போன்ற பல உரைகளும் எழுதி உரைமரபை உருவாக்கித் தந்துள்ளனர்.

பதிப்புகள்

‘’முதன்முதலில் அருஞ்சொற்களுக்குப் பொருள் தரும் வகையிலேயே உரைகள் தொடங்கின. சொற்களைக் கொண்டுகூட்டி முடிக்கும் வகைகளுமே முதற்படிகளாக அமைந்தன. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களுக்கு மிகச் சுருக்கமான குறிப்புரையே எழுதப்பட்டன.’’ [அரவிந்தன், 2018]. இதைத்தொடர்ந்து, குறிப்புரை களுடன் சொல்லிவந்த விளக்கம், மேற்கோள் ஆகியவற்றோடு உரைகள் விரிவடைந்தன. பதிப்புக்களும் அவ்வாறே மாறிவந்தன.

பல உரையாசிரியர்களும் எழுதிப் படைத்த உரைகளைத் தொகுத்துச் சரிபார்த்துப் பிழைகளை நீக்கி, விடுபட்டவைகளைத் தேடியெடுத்து, உரைகளுக்கான விளக்கங்களுடன் பதிப்பிப்பது என்பது எளிதான பணி அன்று.  பனையோலைகளில் இருந்த நூல்களை அச்சேற்றிப் பதிப்பித்தோரின் சமூகச் சிந்தனைகளும் மொழிச் சிந்தனைகளும் போற்றுதற்குரியன.

இவ்வாறான நிலையில் ‘குருசாமி ஐயர்’ என்னும் இயற்பெயர் கொண்டு பின்னாளில் தமிழியக்கத்தலைவர் மறைமலை அடிகளின் கருத்துப்படி ‘அடிகளாசிரியர்’ எனத் தம் பெயரை மாற்றிக்கொண்டவர்இவர். இச்சான்றோரின் தொல்காப்பியப் பதிப்புக்கள் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

அடிகளாசிரியரியரின் தமிழ்ப் பணி

            மூலநூல்களைக் கற்பிக்கும் போது எதிர்ப்பட்ட இன்னல்களை நீக்குவதற்கு உரைநூல்களே துணைநின்றன. அதே நேரத்தில் சுவடி வடிவில் இருந்தவற்றை அச்சு வடிவிற்குக் கொண்டுவந்து பொதுமக்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி செய்த முயற்சியின் வெற்றி பதிப்பாசிரியர்களையே சாரும்.  அவர்களுள் அடிகளாசிரியரின் பங்கு மிகச் சிறந்தது ஆகும்.

            ‘பேதைமையை மறுத்தல்’ அடிகளாசிரியரின் அடிப்படைப் பண்பாகும். தமிழ் மொழியும் வடமொழியும் இறையுணர்வின் இரு கண்கள் என்ற கூற்று பேதைமை யுடையதே என்பது அவர் கருத்து. தமிழ்ப் பண்பிலிருந்து வட மொழிக்குச் சென்ற கருத்துக்களை மீட்டெடுக்கத் தம்மை ஆற்றல்படுத்திக் கொள்ள வடமொழியையும் கற்றார்.

            ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.’

[திருமந்திரம் 1984. செய்யுள் 81]

என்னும் திருமந்திரத்தையே தனக்கிடப்பட்ட தெய்வ ஆணையாகக் கொண்டு தமிழ்ப் பணி செய்து வந்தார்.

            புதிய இலக்கியம் புனைவதை விட முன்னோர் மொழிந்தவற்றைப் பின்னோர் அறியப் பதிப்பிக்கும் பணியே சிறப்புடையதுஎன எண்ணித்தொல்காப்பியம் முதலான முப்பது  நூல்களுக்குப் பதிப்பாசிரியராக இருந்து செயலாற்றினார்.

            பலவகைகளிலும் ஆராய்ந்து முடிவை வெளிக்கொணர்தல், கற்போரைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் புரியும் படியும் கருத்துக்களைத் தருதல், சமூகத்தின் கல்வி அறிவு வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு பதிப்பித்தல், நூலாசிரியரின் அல்லது உரையாசிரியரின் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் கருத்துக்களை அறிந்து உரையெழுதுதல் போன்றவற்றைத் தம் குறிக்கோளாகக் கொண்டு தொல்காப்பியத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினார்.

            இலக்கணங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போதுஇலக்கியத்திற்கு உரை எழுதுவது ஓரளவு எளிமையாகும். ஆனால் மரபு வழுவாது கருத்துக்கள் கூறவேண்டிய கட்டாயம் இலக்கணத்திற்கு உண்டு [நன்னூல்,1984]. அது மட்டுமல்லாமல் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் குறிக்கோளை உள்ளத்தில்கொண்டு இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர்களுள் அடிகளாசிரியர் முக்கியமானவர்.

‘அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்புகள் எளிமைப்படுத்தப்பட்ட முறையில் பதிக்கப்பட்டுள்ளவை என்பதே அவற்றின் தனிச் சிறப்பாகும்.’ [சிவபெருமான், 2009]

அடிகளாசிரியர் சி.வை.தாமோதரம் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, கு.சுந்தரமூர்த்தி, தி.வே.கோபாலையர், போன்ற தொல்காப்பியப் பதிப்பாசிரியர் களுக்கும் இவருக்குமான பதிப்பு வேறுபாடுகள் பல உண்டு. முதலாவதாக, சிறப்புப் பாயிரத்திற்கு மட்டுமே இருபது பக்க அளவில் விளக்கவுரை எழுதியிருப்பது அவருடைய தனித் தன்மையாகும். இரண்டாவதாக, இளம்பூரணாரின் உரையை அடிப்படையாகக் கொண்டு பதிப்பின் போது வெகுவாக ஆராய்ந்து, சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார் ஆகியோரின் உரைகளையும் இலக்கண நூல் உரையாசிரியர்களின் உரைகளையும் நிகண்டுகளையும் பயன்படுத்தி உரை எழுதியது. மூன்றாவதாக, உரைக்கே உரைவிளக்கம் எழுதிப் பதிப்பிக்கும் முறையைக் கையாண்டார்.

உரையாசிரியர்களின் மொழி நடையைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் இன்னல்களை நீக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு உரைவிளக்கம் அளித்தார். அதை அவருடைய சிறந்த பங்களிப்பு எனக் கூறலாம்.எடுத்துக்காட்டாக,

தொல்காப்பிய சொல்லதிகார இளம்பூரணர் உரைப் பதிப்பில் ‘உயர்திணை’ பற்றிய உரை விளக்கம் மிக அருமையானதாகும்.

 

‘’உயர் திணை என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் கூறிய விளக்கத்தை ஒன்றன்பின் ஒன்றாகக் குறிப்பிட்டுக் கடைசியில் தம் கருத்தையும் நிலை நாட்டியுள்ளார்.

            சேனாவரையர்                      –        மக்கட்சாதி

நச்சினார்க்கினியர்               –       உயர்ந்த ஒழுக்கம்

தெய்வச்சிலையார்             –       உயர்தல் என்பது மிகுதி

           கல்லாடனார                             –       உயர்திணை என்பது இறந்த கால    வினைத்தொகை

         மயிலைநாதர்                              –      உயர் என்பது மிகுதி, திணை என்பது பொருள்

சங்கரநமச்சிவாயர்                –       திணை என்பது பல பொருள் குறித்த ஒரு சொல். ஈண்டு குலத்தினை                                                                                      உணர்த்துகிறது.

இவற்றை எல்லாம் தொகுத்துக் கூறிய அடிகளாசிரியர். இறுதியில் தம் கருத்தான அதற்குப் ‘பொருள் என்னும் பொருளே தக்கதாம்’ என்பதை எடுத்துக் கூறுவது அவர் கையாளும்  உரைவிளக்க உத்தியாகும்.

இவர் இளம்பூரணாரின் உரையைத் தெரிவுசெய்ததற்குக் காரணம், ‘தொல்காப்பியத்தை உணர்ந்துகொள்ள இளம்பூரணர் உரையே ஏற்றது என்பது அடிகளாசிரியரின் துணிபாகும். எனவே, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்-செய்யுளியல் மற்றும் ஏனைய எட்டு இயல்கள் ஆகியவற்றைப் பதிப்பிக்க இளம்பூரணர் உரையையே தேர்வு செய்தார். அவ்வாறே பதிப்பித்தும் வந்துள்ளார்.’  எனச் சிவபெருமான் தம் முன்னுரையில் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தொல்காப்பிய எழுத்ததிகார வளர்நிலைப் பதிப்பில் இவரின் பங்கு முக்கியமானது. அவ்வுரையைக் கரந்தைப் புலவர் கல்லூரியில்மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் போது அதிலுள்ள பிழைகளை நீக்கி வடிவமைத்தார். அதுவே மாணவர்களையும் ஈர்த்தது என்பதில் எந்த விதமான ஐயத்திற்கும் இடமில்லை.

சிறப்புப் பாயிரத்திற்கென 25 பக்க அளவில் விளக்க உரையும் நூல் மரபு பற்றி 35 பக்கங்களில் தெளிவுரையும் எழுதியது அவர்க்கு இலக்கணத்தில் இருந்த ஆர்வத்தை மேம்படுத்தி நம் இலக்கண அறிவையும் தூண்டியதில் வியப்பொன்றுமில்லை.

எழுத்ததிகாரப் பதிப்பும் அச்சிடுதலும்

முதன்முதலாக, 1969-இல் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தின் இளம்பூரணர் உரையைத் தம் சொந்தப் பொருட்செலவிலேயே வெளியிட்டார். இதற்காக அவர் நான்கு ஆண்டுக்காலம் கடும் உழைப்பை மேற்கொண்டு பின்னர் அச்சுப்பணிக்கென இரண்டு ஆண்டுக் காலம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.  புதிதாகப் பதிப்பிப்பவர்களில் பெரும்பாலோர் இவ்வின்னல்களைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

பதிப்புத் தொடர்பாக, அடிகளாசிரியர் அனுபவித்த இன்னல்கள் பல.தமிழ் வித்துவான்களிடமும் மடத்தலைவர்களிடமும் கேட்டுப் பயனில்லை. இவரிடமும் போதிய தொழில் நுட்பமில்லை.  இதனால் எல்லாம் கடவுள் செயலே என்று நம்பியிருக்கும் தறுவாயில் இராசபாளையம் மணிமேகலை மன்றத்தார் பூ.கு. குப்புசாமி ராஜா என்பவர் தொல்காப்பிய செய்யுளியல் இரு சூத்திர விளக்கக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தினார். பரிசுத் தொகை ரூ. 1000 எனவும் அறிவித்தார்.

‘ஐவகை யடியும் விரிக்கும் காலை

மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்தும்

எழுபது வகையின் வழுவிலவாகி

அறுநூற்றிருபத் தைந்தா கும்மே’

என்னும் நூற்பாவிற்கான விளக்கத்தை அடிகளாசிரியர் ‘ஐவகையடியும்’ விளக்கம்’ என்னும் கட்டுரையை மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவர்களை நடுவராகக் கொண்டு அவரது கட்டுரையே பரிசு பெறத் தகுதிவாய்ந்தது. எனினும் ஐயத்தை முழுமையாகத் தீர்க்கவில்லை. ஆதலால் பாதிப் பரிசு தரலாம் என முடிவு செய்தனர்.

அடிகளாசிரியர் எழுதிய கட்டுரை சிறந்ததெனத் தேர்வாகியும் ரூ. 500 மட்டுமே கிடைத்தது. அதை வைத்துக் கொண்டு பணியைத் தொடங்கினார்.கீரம்பூர் குப்புசாமி ஐயரிடம் ரூ 500– ஐயும் மாணவர்  நா . முத்துசாமி அவர்களிடம் ஒரு தொகையையும் கடனாகப் பெற்றுப் பதிப்பை வெளியிட்டார்.

அடிகளாசிரியரைப் போன்றே சேனாவரையரின் சொல்லதிகார உரையை முதன்முதலாகப் பதிப்பித்த பதிப்பு வேந்தரும் இன்னல்பட்டார்.‘’சி. வை. தாமோதரம் பிள்ளையும்அதை அச்சிடுவதற்கான பொருள் இல்லாத போது பர்மா செல்வந்தர்களின் பொருளுதவியுடன் உரையை அச்சிட்டார். இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையை 1868-ஆம் ஆண்டு வெளியிட்டார்.’’ [பாண்டுரங்கன், 2008]. இவரைப் போன்றே அடிகளாசிரியரும் பொருளாதாரச் சிக்கலிலிருந்து வெளிவர வள்ளல்களின் துணையை நாடியதில் வியப்பு ஏதும் இல்லை[அடிகளாசிரியர்,1969].

எழுத்ததிகாரத்தின் மேன்மையையும் எளிமையையும் கருத்தில் கொண்டு பல பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கற்பிப்பதற்கு இப்பதிப்பையே பயன்படுத்தினர் என்பது அடிகளாசிரியரின்  விளக்கத்திற்கும் செம்மையான பதிப்பிற்கும் கிடைத்த பெருமை எனலாம்.

எழுத்ததிகாரத்தின் இப்பதிப்பின் சிறப்பை உணர்ந்த அப்போதைய தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தரான மாண்பமை வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் அடிகளாசிரியரைத் தமிழ்ப் பல்கலைக் கழகச் சுவடித்துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராக நியமனம் செய்தார். அதோடு, தொல்காப்பியத்தை முழுவதுமாகப் பதிப்பித்துத் தரும் பணியையும் அவரிடம் ஒப்படைத்தார் என்பது அடிகளாசிரியரின் பதிப்பின் மேலும் அவரது உழைப்பின் மேலும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.

எழுத்ததிகாரப் பதிப்பின் சிறப்பு பல்வேறு பேராசிரியப் பெருமக்களால் புகழப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. குறிப்பாக, மு சண்முகம் பிள்ளை [1978] அவர்களைக் கூறலாம். அவரைத் தொடர்ந்துதெ. ஞானசுந்தரம், அபிரகாம் அருளப்பன்  போன்ற பேராசிரியர்களும் அடிகளாசிரியரை மிகுந்த பதிப்புத் திறன் வாய்ந்தவர் என்று தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

சொல்லதிகாரப் பதிப்பும் அச்சிடுதலும்

எழுத்ததிகாரப் பதிப்பின் திறமும் பொருளதிகாரப் பதிப்பின்எடுப்பும் தோன்றுமாறு சொல்லதிகாரப் பதிப்பைத் தனி மதிப்புடன் பதிப்பித்துள்ளார்.

            தொல்காப்பிய எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை பதிப்பித்த ஆண்டு 1969. சொல்லதிகாரம் பதிப்பித்த ஆண்டு 1988. சொல்லதிகாரப் பதிப்பு முடிவடைய 19 ஆண்டுகள் ஆயின. கரந்தைப் புலவர் கல்லூரியில் எடுத்த முயற்சி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நிறைவேறியது. இச்செய்தியைக் குறிப்பிடும் போது அவர்,             ‘’யான் தஞ்சாவூர் கரந்தைப் புலவர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த போது பல இலக்கண நூல்களைக் கற்றேன். அவற்றில் பிழைகள் இருப்பதைப் பார்த்து ‘இலக்கண நூல்களில் காணப்படும் பிழைகள்’ [பக் 42] என்னும் தலைப்பில் எழுதினேன். தமிழ்ப்பொழில் இதழில் வேண்டுகோள்கட்டுரையாக வெளியிட்டார்கள்.

‘’இப்படிப் பிழைகள் இருப்பது நம் தாய் மொழிக்கு இழுக்கு தரும்.அதனால் தமிழறிஞர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு ஓலைச் சுவடிகள், அச்சுப்படிகள்  போன்றவற்றை வைத்து ஒப்பாய்வு செய்து திருத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்ட போது யாரும் முன்வரவில்லை.’’

தமிழ் மக்கள் செய்த தவப் பயனால் தமிழ்ப் பல்கலைக் கழகம் தோன்றிற்று. பல்கலைக்கழகத்தார் இப்பணிக்கான முயற்சியை அடிகளாசிரியரிடம் ஒப்படைத்தபோது, ‘’முதன் முதல் தொல்காப்பிய செய்யுளியல் இளம்பூரணர் உரையை ஆராய்ந்து கொடுத்தேன். ஆனால் 1985-இல் தான் அச்சிட்டு வெளியிட்டனர். அதன் பிறகுதான் சொல்லதிகார உரையைத் தொடங்கினேன்’’ என்று குறிப்பிடுகிறார். [அடிகளாசிரியர், தொல். சொல். இளம்பூரணர் உரை பக்கம் 7,8]

தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் விருப்பத்தை முழுமை செய்ய, தம் உடல் நலமின்மையையும்பொருட்படுத்தாமல் அரும் முயற்சி செய்து இளம்பூரணரின் உரையுடன் சொல்லதிகாரத்தைப் பதிப்பித்துக் கொடுத்தார்.

பதிப்பிற்கு ஆதாரமாக அவர், திருப்பாதிரிபுலியூர் தவத்திரு ஞானியார் மடத்து ஓலைச் சுவடி, திருவாடுதுறை ஆதீனத்து ஓலைச் சுவடிகளோடு அதுவரை அச்சில் வெளியான இலக்கண இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டும் மிகவும் முயன்று சொல்லதிகாரத்தைப் பதிப்பித்தார்.

சொல்லதிகாரத்தைப் பதிப்பிப்பதற்கு அவர் 19 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் என்பது அவரது கடின உழைப்பையும் முயற்சியையும் அதன் சிறப்பையும் உறுதிப்படுத்துகிறது. பதிப்பு மிகச் சிறப்பாக வெளிவர வேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறைக்கு அது சான்றாக அமைகிறது.

அவருடைய உரைவிளக்கத்திற்கு இன்னுமொரு சான்று

‘’இடையெனப் படுப பெயரோடும் வினையோடும்

நடைபெற் றியலும் தமக்கியல்பிலவே.’’

[தொல். சொல். இடை.நூற்பா1]

இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் உரை இல்லை. ஆனால் பிற உரையாசிரியரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் தருகிறார். இதனால் ‘வந்தது கொண்டு வராதது முடித்தல்’ என்னும் உத்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது அவரது பதிப்புப் பணி.

அடிகளாசிரியர் பதிப்பித்த தொல்காப்பிய சொல்லதிகாரம் 510 பக்கங்கள் மற்றும் 456 நூற்பாக்களை உள்ளடக்கியது. இவற்றையெல்லாம் விளக்கிக் கூறும் திறத்தால் இப்பதிப்பை அரிய நயங்கள்  கொண்ட பதிப்பாகக் கொள்ளலாம்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்101-ஆவது வெளியீடாக, 1988-ஆம் ஆண்டு ‘தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை’ என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.

செய்யுளியல் பதிப்பும் அச்சும்

 

வயது முதிர்ந்த நிலையில்  கண்நோயால் போராடிய போது தம் குடும்பத்தை விட்டுத் தம் இளைய மகனுடன் மட்டும் தஞ்சாவூர் வந்து தங்கிப்பணியாற்றித் தம் பதிப்புப் பணியை மேற்கொண்டார்.

பதிப்புப் பணிக்கான முயற்சியை மேற்கொள்ளும் போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த மாண்புமிகு வ. அய். சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பான பல அரிய பணிகளை நிறைவேற்றி வந்தார். அப்போது இப்பதிப்புப் பணிப் பற்றிய கருத்துக்களை முன் வைத்தபோது அவர்,

‘’பதிப்புப் பணி மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் நீங்கள்‘ஏடு, கையெழுத்துப்பிரதிகளை முதலில் தொல்காப்பியம் முழுமைக்கும் திரட்டுக. பாடபேதம் பார்க்க, மூல பாடம் நிர்ணயிக்க’இத்தகைய தகவல்களைத் சேகரித்த பின் பதிப்புப் பணியை மேற்கொண்டால் பதிப்பின் தரம் சிறந்ததாக இருக்கும்.’’ என்று கூறிப் பதவிக்காகஆணையை அளித்தார்கள்.

‘இக்கட்டளையை ஏற்றுக்கொண்ட அடிகளாசிரியர் கடவுளின் அனுக்கிரகத்தால்தான் இப்பணி கிடைத்தது’ என உணர்ந்து தம் முயற்சியை மேற்கொண்டார்.

துணைவேந்தரின் கருத்துப்படியே, ஓலைப்பிரதிகள், அச்சுப்பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள், செந்தமிழ்ச் செல்வி முதலான ஆராய்ச்சி இதழ்களில் காணப்படும் கட்டுரைகள், கருத்தரங்க வெளியீடுகள், அறிஞர்கள் எழுதிய பொருளதிகாரப் பொருள் பற்றிய தனி வெளியீடுகள், தமிழ் ஆராய்ச்சி தொடர்பான நிறுவனங்களின் வெளியீடுகள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தம் ஆய்வை மேற்கொண்டார்.

இவரின் உழைப்பின் உந்துதலால் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்புத்துறையினர்1985-ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் அடிகளாசிரியரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இளம்பூரணாரின் தொல்காப்பியப் பொருளதிகாரம் செய்யுளியல் உரையைப் பதிப்பித்தனர்.

பின்னர் செய்யுளியல் தவிர்த்த ஏனைய எட்டு இயல்களுக்கும் உரைப்பதிப்பு வெளியிட ஆய்வுகள் மேற்கொண்டார். அவற்றைப் பற்றிய நீண்ட ஆய்வுரையின் கையெழுத்துப் பிரதியைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு உரித்தாக்கினார். அது வெளிவருமானால் தொல்காப்பியத்திற்கான அவருடைய உரை முழுமையாகும்.

செய்யுளியல் பதிப்பில் உரை விளக்கம்

 தொல்காப்பியர் செய்யுள் உறுப்புக்களைச் சொல்லும் இடத்தே யாப்பு என்றொரு உறுப்பை ஆறாவது உறுப்பாகச் சொல்லியுள்ளார். யாப்பின் விளக்கம் கூறுமிடத்து,

            ‘’எழுத்து முதலா ஈண்டிய அடியில்

குறித்த பொருளை முடிய நாட்டல்

யாப்பென மொழிப யாப்பறி புலவர்.’’

[பொருளாதிகாரம் செய்யுளியல் நூற்பா-74]

சில புலவர்கள் எழுத்து, அசை, சீர்,அடி இவற்றை இனிய ஓசைப்பட அமைத்தல் என்று யாப்பை அரைகுறையாகக் கூறும் போது அடிகளாசிரியர்,‘யாப்பு- பொருள் யாத்தல் என்க’ என்று குறித்த பொருள் முற்றுலும் தெளிவாக அமையுமாறு கூறினார்.அடியில் வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தொல்காப்பியர் யாப்பு என்பதைச் செய்யுளின் உறுப்பாகக் கூறியுள்ளார்.’ என்று சிறப்பான உரை விளக்கம் தருகிறார். அது அவரின் ஆய்வுத்திறனையும் எடுத்தியம்பும் திறனையும் வெளிக்காட்டுகிறது.

செய்யுளியலில் பாட வேறுபாடுகள்

பொதுவாக,ஓலைச்சுவடிகளைப்படிஎடுப்பவர்களால் பிழைகள் நேரிடுவதுண்டு. அல்லதுநூலாசிரியர்கள் கூறும் கருத்துக்களில் உரையாசிரியர்கள் மாறுபட்டு நிற்கும் போது பாடவேறுபாடுகள் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றுகின்ற பாடபேதங் களை எவ்வாறு ஆராய்ந்து தெளிவுபடுத்துகிறார் என்பது அடிகளாசிரியருடைய உரைவிளக்கத்திற்குச் சான்று அளிக்கிறது.

எடுத்துக்காட்டாக,

            ‘இறுவாய் ஒப்பினஃ தியை இயைபென மொழிப.’ என்பது இளம்பூரணர் பாடம்.      ‘இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே.’ என்பது பேராசிரியர் மற்றும்  நச்சினார்க்கினியர் பாடம். ‘இறுவாய் ஒப்பினஃ தியைபெனப்படுமே’ என்பது யாப்பருங்கலம் இயைபுத் தொடை இலக்கணம்.

அதே நேரத்தில் மர்ரே பதிப்பு, பேராசிரியர் மற்றும் நச்சினார்க்கினியர் பாடத்தை முதலாவதாகவும், இளம்பூரணர் பாடத்தை இரண்டாவதாகவும்வேறுபட்ட பாடத்தை மூன்றாவதாகவும் அமைத்துத் தந்துள்ளனர். இவ்வாறு பாடபேதங்கள் ஏற்படுவதைச் சுட்டித் தம் கருத்துக்களை வெளிப்படுத்துவது அடிகளாசிரியரின் உத்தியாகும்.

‘இயைபு’ என்ற சொல்லே கேள்விக்குரியதாக அமைய, அடிகளாசிரியர் எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்து உரைவிளக்கம் தருவதால் அதன் சிறப்பு புரிவதோடு ஆராய்ச்சி முறையையும் மறைமுகமாக அறிந்துகொள்ள முடிகிறது எனலாம்.

இளம்பூரணர் செய்யுளியல் 97-வது நூற்பாவுரையில் இயைபை இறுதிநிலை எழுத்தின் மேல் வைத்துக் காட்டுகிறார். ‘இறுவாய் ஒப்பினஃ தியைபெனப்படுமே’ என்பது யாப்பருங்கல உரை [40]. இதன் உரையாசிரியர் அடிதொறும் இறுதிக்கண் எழுத்தாலும் சொல்லாலும் ஒன்றிவரின் இயைபு என்கிறார்.யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் அடிதொறும் இறுதிக்கண்நின்ற எழுத்து, அசை, சீர் ஒன்றுதல் என்கிறார்.பல்யாகனாரும் நந்தத்தனாரும் இறுதி சீர் ஒன்றுதலையே இயைபு என்றனர்.

            ‘’இயைபே இறு சீர் ஒன்றும் என்ப

            இறு சீர் ஒன்றின் இயைபெனப்படுமே’’

இலக்கண விளக்க நூலார் ஈற்றெழுத்து ஒன்றிவருதல் இயைபு என்றனர்.

‘’இறுவாய் ஒப்பின் இயைபுத் தொடையாம்.’’

இவற்றிலிருந்து பாட வேறுபாடு மட்டுமல்லாமல் இயைபு என்பதையும் விளக்கிவிட்டபெருமை அடிகளாசிரியரையே சாரும்.

அடிகளாசிரியர்தாம் பதிப்பிப்பதற்கு முன்பு வெளியான நூல்களையும் உசாத்துணையாகக் கொண்டு அருமையான பதிப்பை  முழுமை செய்தார். சான்றாக,

வ.உ. சிதம்பரம் பிள்ளையின் செய்யுளியல் பதிப்பு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரின் செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் இளம்பூரணர் உரை.யாப்பருங்கலக்காரிகை உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரச்சோழிய உரை, நேமிநாத உரை போன்ற பல உரைகளையும்  பயன்படுத்தியதோடு, ‘’ஒரு நூலைப் பதிப்பிக்கத்   தொடங்குவதற்கு முன்பு அந்நூலோடு தொடர்புடைய அனைத்து நூல்களையும் திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.’’ என்ற கருத்தினையும் வலியுறுத்தினார்.[ அடிகளாசிரியர் தம் கைப்பட 1982-ஆம் ஆண்டு எழுதிய குறிப்புரை]. அதுவே அவரின் பதிப்புச் செம்மைக்குக் காரணமாயிற்று. பிழைகள் நேராவண்ணம் பார்த்துக்கொள்ளல் அவரது இயல்பு.

பதிப்புக்களின் வடிவமைப்பும் சிறப்பும்

அடிகளாசிரியரின் பதிப்புக்கள் செம்மையாக அமைவதன் காரணம் அவர் எடுத்துக்கொண்ட கவனமே. பதிப்பிக்கும் போது ஒவ்வொரு நூற்பாவுக்கும் கீழ்வருமாறு வடிவமைத்துக் கொண்டார்,

  1. நூற்பா, நுதலிய பொருள், நூற்பா பதவுரை, எடுத்துக்காட்டு, நூற்பாக் குறிப்பு, உரைக் குறிப்பு, பாட வேறுபாடு, சுவடி வேறுபாடு, பிற இலக்கண ஆசிரியர் கருத்து, பிற உரையாசிரியர் கருத்து, இவற்றில் இவர் சரியெனக் கொண்ட கருத்து என்னும் பதினொரு கூறுகளைக் கொண்டிருந்தது.
  2. உரைக்குறிப்புக்கள் தரும்போது ஒப்பீட்டு ஆய்வுமுறையைக் கையாண்டார். இளம்பூரணர் உரையோடு சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், மயிலைநாதர், யாப்பருங்கல விருத்திக்காரர், சங்கர நமச்சிவாயர் ஆகியோரின் உரைகளையும் தந்துள்ளார்.
  3. நூலாசிரியர் கருத்தை விளக்க உரையாசிரியரும் உரையாசிரியரின் கருத்தை விளக்கப் பதிப்பாசிரியரும் என்று காலத்தின் வழி நின்று உணர்த்தும் பணியே பதிப்பித்தல் எனத் தம் பதிப்பின் வாயிலாக மெய்பித்துள்ளார்.
  4. இவற்றோடு நூலின் இறுதியில் நூற்பாச் சொல்லகராதி, உரைப்பொருளடைவு, உதாரண மேற்கோள் அகராதி, நூற்பா முதற்குறிப்பு அகராதிஆகியவற்றைக் கொடுத்து பதிப்புக் கலைக்குப் புதிய வடிவம் கொடுத்துள்ளார்.

பதிப்பிப்பதில் அவ்வளவு அக்கறையும் ஆழ்ந்த எச்சரிக்கை உணர்வுடனும் செயல்படும் அடிகளாசிரியர் அந்த அளவு அச்சகத்தாரும் மற்றோரும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் குறிப்புக்களையும் கொடுத்திருப்பது அவரது சமுதாய-கல்விச் சிந்தனையும் பதிப்பு பிழையின்றி வரவேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வமும்  மிகத் தெளிவாக வெளிப்படுவதைக் காணலாம்.

சான்றாக,

  1. மூலமும் உரையும் பாட வேறுபாடுகளும் அடங்கிய பிரதி
  2. மூலத்திற்கும் உரைக்கும் விளக்கக் குறிப்பு அடங்கிய பிரதி

இரண்டையும் அச்சகத்தார் அச்சிடும் போது கருத்தில் வைக்க வேண்டும். தாம் கொடுக்கும் குறிப்புக்களைப் பின்பற்ற வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். பதிப்பு மிகச் செம்மையாக வரவேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறையைஇதில் காண முடிகிறது.

  1. மூலப் பாடத்தை அறிந்துகொள்ளச் சிவப்பு கோடுகள் போட்டுள்ளேன். அதைப் பெரிய எழுத்திலும்,
  2. மூலத்தின் பின் உரையை அச்சிட வேண்டும். அதாவது, மூலத்தை விடச் சிறிய எழுத்திலும் அச்சிட வேண்டும்.
  3. மேற்கோள், சிறப்புப் பெயர் இரண்டையும் உரைக்குப் பயன் படுத்திய எழுத்துக்களில் தடித்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும்,
  4. பாடபேதங்களைஅடிக்குறிப்பில் கொடுத்துவிடுக.
  5. மூலம், உரை, பாடபேதங்களை மேற்குறித்தவாறு அச்சிட்ட பின் பதிப்பாசிரியர் குறிப்புக்களை அச்சேற்றுங்கள்.போன்ற தெளிவான விளக்க முறை ஒன்றை வகுத்துக் கொடுத்த பெருமைக்குரியவர்.

[அடிகளாசிரியர் தம் கைப்பட 1985-ஆம் ஆண்டில் எழுதிய குறிப்புரை. பக்கம் 85]

முடிவுரை

அடிகளாசிரியர் மிகத் திறமை வாய்ந்த பதிப்பாசிரியர். அவரது தொல்காப்பிய பதிப்புக்களைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இன்றும் தங்கள் இலக்கண வகுப்புகளில் பயன்படுத்துவது அவரின் பதிப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும். அவரின் தனிக் கவனமும் பதிப்புக்கள் செம்மையாக வரவேண்டும் என்பதில் காட்டிய அக்கறையும் அவருடைய பதிப்புக்கள் சிறந்து விளங்கக் காரணமாயின. அவருடைய ‘உரைக்கு உரைவிளக்கம்’ அளித்த உத்தி காலந்தோறும்  பின்பற்றப்படும் முன்மாதிரியாகத் திகழ்வதில் வியப்பொன்றுமில்லை.

நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என்னும் மூவரில் பதிப்பாசிரியரின் பணிசிறப்பு மிக்கது என்பதை அடிகளாசிரியர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

துணைநூற் பட்டியல்

  1. அடிகளாசிரியரின் சிவபெருமான், அ., தொல்காப்பியப் பதிப்புகள் ,  தமிழ்ப் பல்கலைக் கழகம்

தஞ்சாவூர்,  2009.

  1. இலக்கண வரலாறு,  இளங்குமரன், இரா., மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1988.
  1. உரையாசிரியர்கள்,   அரவிந்தன், மு.வை, மணிவாசகர்பதிப்பகம், சென்னை, [எட்டாம் பதிப்பு],  தொல்காப்பியப் பதிப்புகள். சுப்பிரமணியன், ச.வே..உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை     2004
  1. சி.வை. தாமோதரம் பிள்ளை பாண்டுரங்கன், அ., செம்மொழி செய்தி மடல் 2. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,  சென்னை, 2008.
  1. திருமந்திரம் திருமூலர், கழகப் பதிப்பு,  சென்னை, 1984.
  1. தொல்காப்பியம்- சொல்லியல்  அடிகளாசிரியர். திரு, இளம்பூரணர் உரை [பதிப்பாசிரியர்],  தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 988.
  1. தொல்காப்பியப் பதிப்புகள் சண்முகம் பிள்ளை, மு., தமிழாய்வு -தொகுதி-8,  நன்னூல் தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர்,  1984.

======================================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

இலக்கண நூல்களின் கருத்தைப் புரிந்துகொள்வதற்கு உரைகள் பெரிதும் துணை புரிகின்றன. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலுக்கு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் எனப் பலரும் உரை இயற்றியிருக்கின்றனர். இவ்வுரைகளைத் தொகுத்து, சரிபார்த்து, பிழைகளை நீக்கி வெளியிடுவது என்பது எளிதான பணி அன்று. அத்தகைய பணிகளை மு ன்னெடுத்த அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்புப் பணியினை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுக்குப் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்த பெருமை அடிகளாசிரியருக்கு உண்டு. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் இளம்பூரணருரையினைப் பதிப்பிப்பதற்கு இவர் எடுத்து கொண்ட முயற்சிகள், நூலை அச்சிட இவர் பட்ட இன்னல்கள் ஆகியவற்றைக் கட்டுரையாளர் நிரல்படத் தொகுத்தளித்துள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்பிரமணியம் அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்பு முயற்சிகளை ஊக்குவித்தமை, தொல்காப்பியச் செம்பதிப்புகளுக்கான ஆலோசனைகளை வழங்கியமை ஆகியன குறித்த செய்திகளைக் கட்டுரையாளர் சுட்டிச் செல்கின்றமை பாராட்டுதலுக்குரியன.

======================================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *