நாங்குநேரி வாசஸ்ரீ

 130. நெஞ்சோடு புலத்தல்

குறள் 1291

அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது

ஏ நெஞ்சே! அவுகளோட நெஞ்சம் அவுகளுக்கு தொணையா நிக்குதப்போ நீ மட்டும் எனக்குத் தொணையாகாம அவுகள நெனச்சு உருகுதது ஏன்?

குறள் 1292

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

நெஞ்சே நம்ம மேல நேசம் வைக்காதவர்னு தெரிஞ்ச பொறவும் வெறுக்க மாட்டாகனு நம்பி அவுக பொறத்தால போவுதுயே.

குறள் 1293

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்

நெஞ்சே! நீ என்னய உட்டுப்போட்டு அவுக பொறத்தால போவுதது சங்கடத்தால வெசனப்படுதவங்களுக்கு சேக்காளி இருக்க மாட்டாக ங்குத நெனப்புலயோ.

குறள் 1294

இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று

நெஞ்சே! நீ சண்டபோட்டு பொறவு கூடிச் சேந்து அனுவிக்கலாம்னு நெனக்க மாட்ட. அதனால அதப்பத்தி உங்கிட்ட யார் பேசப்போவுதாங்க. நான் பேச மண்டேன்.

குறள் 1295

பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு

என் நெஞ்சம் காதலரக் காங்கலன்னு சங்கடப்படும் வந்த பொறவு உட்டுப்போட்டுப் போயிடுவாகளோன்னு சங்கடப்படும்.

குறள் 1296

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு

காதலரப் பிரிஞ்சு ஒத்தேல கெடந்து ரோசன பண்ணுதப்போ எம்மனசே என்னயத் தின்னுபோடுதது கணக்கா சங்கடமா இருந்திச்சு.

குறள் 1297

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு

அவுகள அயத்துப்போவ முடியாம திணருத என் கூறுகெட்ட மனசோட சேந்து நான் என் வெக்கத்தையும் அயத்துக் கெடக்கேன்.

குறள் 1298

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

பிரிஞ்சுபோன அவுகள எளக்காரமா நெனச்சா தனக்கும் தாழ்ச்சினு நெனச்சு எம் மனசு அவுகளோட ஒசந்தகொணத்தையோ நெனப்புல வச்சிக்கிட்டிருக்கும்.

குறள் 1299

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி

சங்கடம் வருத நேரம் உரிம உள்ள நெஞ்சமே தொணையா நிக்கலன்னா வேற யாரு வருவாக?

குறள் 1300

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி

நம்மளோட நெஞ்சமே நம்மகிட்ட ஒட்டுஒறவா இல்லாதநேரம் அல்லசல் ஒட்டாம இருக்கது சுளுவு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *