ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை

0

மீ.விசுவநாதன்

“முன்னுரை”

இன்று  திங்கள் கிழமை (30.03.2020) தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்த ஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் எழுபதாவது பிறந்த தினம் (வர்த்தந்தி தினம்).

பதினொரு வருடங்களுக்கு முன்பு “அம்மன் தரிசனம்” ஆன்மீக மாத இதழில் தொடராக வெளிவந்த “ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை” என்ற கவிதைத் தொடரை மகாஸ்வாமிகளின் பிறந்த தினமான இன்று முதல் (30.03.2020) ஒவ்வொரு திங்கள்கிழமையும் “வல்லமை” மின்னிதழில் தொடர்ந்து வெளியிட உள்ளோம்.

அன்பர்கள் அனைவரும் ஆரோக்கியமும், மன அமைதியும், வளமையும் பெற்று வாழ குருவின் அருளை வேண்டுகின்றேன்.

அன்பன்,

மீ.விசுவநாதன்

ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை

       (காப்பு)

வாரண மூர்த்தி நல்ல
   வரப்பிர சாதி யான
தோரண வாயி லோனைத்
   துதிசெய நன்மை ஓங்கும்;
பூரண ஞானப் பிள்ளை
   பொலிகிற பிள்ளை யாரே
ஆரண மென்பர் மேலோர்
   அவரடி போற்று கின்றேன். (1)

     “குரு வணக்கம்”

மூடரைச் சான்றோ(ன்) ஆக்கி
    முதலவன் காணச் செய்து  
சீடரைப் ஞானி ஆக்கும் 
   சிருங்ககி ரிக்கோன், முத்தித்
தேடரை, மோக மற்ற
   திருவினை, நல்லோர் நித்தம்
பாடவே வாணி வந்தாள்
   பாரதீ தீர்த்த ரென்றே.              (2)

 பிறந்த ஊரும், நதிக்கரையும்

குண்டூ ரென்னும் ஊரில்
   குளிர்ந்து பாயும் ஆறு
பண்சேர் “நாகு லேரு”;
  பவானி சங்கர் என்னும்
மண்விண் காக்கும் ஈசன்
  மகிழ்வாய்க் கோவில் கொண்டு
கண்கள் திறந்து பார்த்துக்
  கனிவாய் அருள்வர் உண்மை.    (3)

 “சீதா ராம ஆஞ்சநேயலு”

வேத வாழ்க்கை வாழும்
   “வேங்க டேச வதானி”
பாதம் வணங்கிச் சேர்ந்த
   பண்பாள் “அனந்த லெக்ஷ்மி”
ஐந்தாம் பிள்ளை யாக
   அவனி வந்த முத்து;
அந்தச் செல்வன் “சீதா
   ராம ஆஞ்ச நேயர்”.   (4)

       அதிசயம்

மூன்றாம் வயதில் ஓர்நாள்
   ஓவென் றழுத போது
ஏன்தா னென்று ஏங்கி
   இறைவன் முன்னே அன்னை
வேண்ட, அழுகை நின்று
   சிவனைப் பார்த்த பிள்ளை
வேண்டி “சம்போ” வென்று
  வீழ்ந்து பணிந்த தென்பர்.  (5)

   

பண்பும் படிப்பும்

வருடம் செல்லச் செல்ல
   வளர்ந்த தறிவு, பண்பு;
பெருகும் அறிவுத் தாக
   வெள்ளம் அறிந்து கொண்டு
அக்கா பிரிய மாக
  அன்பாய்க் கற்றுத் தந்தார்;
அக்கா லம்பொற் காலம்
   அவருக் கமைந்த தாகும்.  (6)

ஆஞ்ச நேய லுவின்
   அபார ஞானம் கண்டு
வாஞ்சை யாகப் பாடம்
   வழங்கப் “பிரதா பகிரி”
வந்தார்; பாடம் சொன்னார்;
  மனது மகிழ்ந்து சீடன்
சிந்தை ஒன்றிக் கற்ற
  சிறப்பில் மகிழ்ந்தா ரம்மா.   (7)

       உபநயனம்

ஏழு வயதில் பூணூல்
   இனிது நடந்த பின்பு
ஆழ மாக வேத
   அறத்தைப் பற்றிக் கொண்டு
கூழோ கஞ்சி ஏதோ
   கொஞ்சம் குடித்து நன்கு
வாழும் பண்பு தன்னை
   வரமாய்க் கொண்டு விட்டார்.  (8)

நித்ய கர்மா செய்வார்
   நெஞ்சில் காமம் நீக்கும்
“சத்கா யத்ரி” சொல்வார்
   சத்யம் தவற மாட்டார்
உத்த மத்தன் தந்தை
   உயிராம் வேத பாடம்
நித்தம் சொல்லக் கேட்டு
   நிறைவாய் அடங்கி நின்றார்.  (9)

கருவில் கேட்ட நல்ல
   கருத்துக் கதைக ளெல்லாம்
திருவாய் அமைந்த தாலே
   “கிருஷ்ண யஜுரும்” கற்றார்;
பெருமை பெற்றார் பெற்றோர்;
  பிறரும் மெச்ச நாளும்
அருளை அள்ளி அள்ளி
   ஆண்ட வனவர்க் கீந்தார்.    (10)

                                                                      (யாத்திரை தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *