வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-17

0

தி. இரா. மீனா                                                                                                        

சென்னபசவண்ணர்

அல்லமாபிரபுவால் “ஞானி” என்று போற்றப்பட்ட சென்ன பசவண்ணர் சரணர்கள் மத்தியில் வயதில் சிறியவர். எனினும் நிறைந்த பக்குவமுடையவர். கூடலசங்கமம் இவரது ஊராகும்.பசவேசரின் புரட்சிகரமான போராட்டங்களில் பங்கேற்றவர். சித்தராமனுக்கு இஷ்டலிங்க தீட்சை தந்தவர். ”கூடல சென்ன சங்கமதேவா” இவரது முத்திரையாகும். ”சுவரவசனா“,  ”மந்திரகோப்யா”,  “மிச்ரார்ப்பணா“ போன்ற நூல்களின் ஆசிரியர்.

1. “உடலில் இலிங்கம் இணைந்தபிறகு உடலே இலிங்கம்
மனதில் இலிங்கம் இணைந்தபிறகு ஐம்பொறிகள் இலிங்கம்
உயிரில் இலிங்கம் இணைந்தபிறகு ஞானபோகம் இலிங்கம்
உடல் முழுவதிலுமான இலிங்கம் சர்வபோக இலிங்கம்
கூடல சென்னசங்கம தேவனே.”

2. “புறத்தில் செயல்படாமல்
அகத்தில் அறிந்தென்ன?
உடலில்லாவிட்டால் உயிருக்கும் புகலிடமேது?
கண்ணாடியில்லா விட்டால் முகம் காணமுடியுமா?
நம் கூடல் சென்ன சங்கமதேவன்
உருவம் அருவம் இரண்டும் ஒன்றானவன்”

3. “உணவிடுவது புண்ணியம் உடை தருவது அறம்
பொருள் தருவது மேன்மை.
மனம் உடல் வாக்கு தூய்மையுடன்
கூடல சென்ன சங்கமதேவனை நினைப்பது முக்தி ”

4. “அறிவையறிய கையில் அடையாளம் தந்தான் குரு
அறிவை மறந்து அடையாளத்தை முதன்மையாக்கும்
மனிதரைப் பார்ப்பாய்
கூடல சென்ன சங்கம தேவனே “

5. “பொருள் பெருமை நானெனும் பெருமை ,குலப்பெருமை நீக்காமல்
ஜங்கம ஒழுக்கம் ,ஜங்கமபக்தி கிடைப்பதில்லை
சொல்லின் ஜாலத்தில் மயங்கும் மக்களுக்கு
ஜங்கம பக்தி எப்படியிருக்கும்?
கூடல் சென்ன சங்கமதேவனே “

6. “பறக்கும் பட்டமானாலும் நூல் துணை வேண்டும்
வீரனானாலும் பயிற்சி வேண்டும்
வண்டியோட தரை வேண்டும்
இலிங்கத்துடன் உடலிணைந்திருக்க வேண்டும்
கூடல சென்ன சங்மகதேவருள் இணையாமல்
இலிங்கத்தை விட்டவனெனச் சொல்லலாமா?”

7. “முன்னோர் வசனமென்ன ,பாதையில் கிடைக்கும் பணமா?
ஒவ்வொரு வீடு சென்று போதிப்பதும் மகிழ்விப்பதும்
பக்தியின் இடமா ? ஜங்கமத்தின் இடமா?
பக்தன் என்பவன் சேவகன்.
இயல்பற்றவர்களை எனக்குக் காட்டாதே
கூடல சென்ன சங்கமதேவனே “

8. “இருந்தும் கட்டுப்பட்டவன் இல்லை
சுற்றி வந்தும் மாசுடையவன் இல்லை
எதனோடும் யாரோடும் சேராமல்
உண்மையாய் இணைந்தவன்
வேண்டும் வேண்டாம் என்றில்லாமல்
அழிந்தும் அழியாமல் கற்பூர மலையை
அனல் பற்றியது போல இருப்பான்
கூடல சென்ன சங்கம இலிங்கத்தில் இணைந்தவன் “

9. “இல்லாத மாயயைத் தன்னுள் வைத்து
ஆளுமைக்கு மயங்குவதேன்?
இல்லாத மாயையை இல்லையென அறியாமல்
குழம்பி நின்று தவிப்பதேன் ?
எல்லாவற்றிலும் தன்னையே தானறிந்து பார்த்தால்
தானே கூடல சென்ன சங்கய்யனன்றி வேறில்லை “

 10. “குரு ஒருவனே ,இலிங்கம் ஒன்றே
மனைவிக்கொன்று ,மகனுக்கொன்று அண்ணனுக்கொன்று
பணிப்பெண்ணுக்கொன்று என இலிங்கமிராது.
ஒரு வீட்டிற்கு குரு இலிங்கமென இரண்டிருப்பின்
மகிழமாட்டார் ,நம் கூடல சென்ன சங்கமனின் அடியார் “

 11. “அந்தரங்கம் பகிரங்கம் இரண்டுமழியாமல்
அறிவொழுக்கம் தன்வயமாவதில்லை.
அறிவொழுக்கம் தன்வயமாகாமல்
இலிங்கவொளி காணமுடியாது இலிங்கவொளி காணாமல்
கூடல சென்ன சங்கமய்யனுள் அமைதியில்லை  “

12. “பக்தனுக்கும் இறைவனுக்கும் ஒரே உணவென்பர்
இதை நாம் அறிகிலேம்
உடலில் இலிங்கம் கொண்ட பின்னர்
இலிங்கத்திற்கும் தனக்கும் ஒரே உணவேயன்றி
வேறு உணவுண்டோ?
வேறுவுணவிருப்பின் உடலில் இலிங்கம் தரிக்க இயலுமா?
இந்த இரகசியம் அறிவான் கூடல சென்ன சங்கமதேவனே “

13. “விரும்பாத வரையில் காமதேனு தருவதில்லை
கற்பனை இல்லையெனில் கற்பகத்தரு தருவதில்லை
சிந்தனை இல்லாத போது சிந்தாமணி தருவதில்லை
நினைக்காத வரையில் சிவனருள் கிடைப்பதில்லை
விருப்பமின்றி,கற்பனையின்றி சிந்தனையின்றி,நினைவின்றி
இருப்பினும்உன்னடியார் தருவர் கூடலசென்ன சங்கம தேவனே”

14. “உறுதியோடு தாஸோகம் செய்யும் சரணர்
ஏழையாயின் அவருக்கு உதவி செய்து வழிபட்டு
மீண்டுமவரை தாஸோகம் செய்ய வைத்தால்
அவரே ஜங்கமன்,அவருக்கு வணக்கம்
அதுவன்றி முன்னாள் செய்தீர் இந்நாள் செய்வீரென்று
கண்டனம் செய்பவர் ஜங்கமராவாரோ?
வெறும் பிறப்பைச் சுமப்பவர் கூடல் சென்ன சங்கமதேவனே”

15. “உடல் பிரம்மசாரியாகி என்ன பயன்
ஆசை பிரம்மச்சாரி ஆகவில்லையெனில்?
வார்த்தைகள் மௌனமாகியென்ன
நினைவுகள் மௌனமாகவில்லையெனில்?
உடல் நிர்வாணமாகியென்ன
உள்ளம் நிர்வாணமாகவில்லையெனில் ?
கூடல சென்ன சங்கமதேவனே
உன் சரணரின் இடத்தை
யாரும் தன்வயப்படுத்த முடியாது”

16. “ஏரியில் பார்க்கும் போது நீரென்பேன்
வீட்டிற்குக் கொண்டு வந்தால் தீர்த்தமென்பேன்
கடையில் இருக்கும்போது நெல் என்பேன்
அது வீட்டிற்கு வந்தால் புனித தானியமென்பேன்
சமைக்கும் போது உணவென்பேன்
பிறருக்குத் தரும் போது பிரசாதமென்பேன்
அஞ்சி அதை எச்சிலென்றால்
விரதம் தவறியவனென்பேன்
கூடல சென்ன சங்கம தேவனே “

17. “பிறர் வீட்டைத் தன் வீடென்றெண்ணும் குருவி போல
மண் பொருள்,பெண் ஆகியவை தனதென்று எண்ணி
உயிர் துடித்துச் சாகிறது,
படைத்தவன் கூடல சென்ன சங்கமதேவன் என்றறியாமல் ”

18. “உடல் காமம் உள்ளக் காமம்
பொருள் காமம் உணவு உடை காமமன்றி
இலிங்கத்தை விரும்புபவரை
கூடல சென்ன சங்கமதேவனென்பேன் “

19. “நெய் ,உறை நெய் இரண்டிற்கும் வேறுபாடுண்டோ?
தீபத்திற்கும் ஒளிக்கும் வேறுபாடுண்டோ?
உடலுக்கும் உயிருக்கும் வேறுபாடுண்டோ?
பாலுக்கும் சுவைக்கும் வேறுபாடுண்டோ?
உருவமே அருவமென்றறிந்து
அங்கலிங்க நட்பில்லாதவரின் உறவு கெடுதலென
கூடல் சென்ன சங்கமதேவனின் சரணர் சொல்வதில்லை “

20.  “வேண்டுமென்பது மனித குணம்
வேண்டாமென்பது ஆசையற்ற குணம்
இரண்டும் நல்லதன்று
இரண்டைப் புறக்கணித்து வாழ்பவன்
கூடல சென்ன சங்கம தேவனின் சரணராவர் “

                                                               [தொடரும்]   

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *