-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. அமுதா ஹரிஹரனின் இந்த ஒளிப்படத்தைப் படக்கவிதைப்போட்டி 251க்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்படக்கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

கண்ணாமூச்சி விளையாடும் இந்தப் பிள்ளைகள் போல் சில நேரங்களில் விதியும் மனிதர்களோடு கண்ணாமூச்சி விளையாட்டில் இறங்கிவிடுகின்றது. அதனை வெற்றிகொள்ள மனிதர்படும் பாடு சொல்லும் தரமன்று. எனினும் அறிவின் துணைகொண்டு மானுடம் ஊழையும் உப்பக்கம் காணும் எனும் நம்பிக்கையோடு வாழ்க்கைப் பயணத்தை வையத்தில் தொடர்வோம்!

இந்தப் படத்துக்குக் கவிதையெழுத வாருங்கள்! உங்கள் கவின் கருத்துகளைத் தாருங்கள்! என்று கவிஞர்களைக் கனிவோடு அழைக்கின்றேன்!

*****

”காரிருள் தனிலும் கலக்கம் வேண்டாம்; மறுபடியும் வெளிச்சக்கீற்று வந்தே தீரும்; முயற்சி முடிவில்(லா) வெற்றியே தரும்” என்று நம்பிக்கை தீபத்தைக் கவிதையில் ஏற்றுகிறார் திருமிகு. நித்யா சுந்தரம்.

கண்டுபிடி….கண்டு பிடி…

இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும்
இடையில் ஓரிழை தூரமே!
நம்பிக்கையின் விளிம்பு
தட்டுத்தடுமாறும் கைகளில்
வசப்படும் எனும் வானளாவிய புரிதலில்…
வாழ்வெனும் மாயக் கண்கட்டு விளையாட்டில்
கண்களில் தெரிவதும் தவறாய்ப் போகலாம்….
இதோவெனக் கைக்கெட்டும்
இடைவெளி முடிவில் கானல்நீர் ஏமாற்றலாம்…
காரிருள் தனிலும் கலக்கம் வேண்டாம்
மறுபடியும் வெளிச்சக்கீற்று வந்தேதான் தீரும்…
முயற்சியென்றும் முடிவில்லா வெற்றியே!
கைதவறிப் போனதெல்லாம்
கரம்சேரும் தருணம் நீயும்
இருளுக்குள் விழித்து இறுகப்
பற்றிவிட்டால் எல்லா நாளும்
இன்ப ஒளியே!..
இயல்பாய் வானமும் வசப்படும் அந்நாளிலே!….

*****

”அண்மையில் சென்றால் ஒட்டுமென்ற தொற்றுநோய் வந்ததும் கண்கட்டு விளையாட்டும் கானலாகிப் போனதே!” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

காலம் மாறியது…

கண்ணைக் கட்டிக் களிப்புடனே
காடு மேடெலாம் விளையாடிய
எண்ண மெல்லாம் வருகிறதே
எல்லாம் மாறிப் போனதுவே,
அண்மையில் சென்றால் ஒட்டுமென
அகன்றே விலகிச் செல்வதுடன்
மண்ணில் மாந்தர் முகம்மறைக்கும்
மாய நோயதும் வந்ததுவே…!

*****

”கொல்லும் கொரனா மனித வாழ்வைக் கொள்ளை கொண்டதனால் கூடிவாழ்ந்த நமதுவாழ்வு குலைந்து போனதடா! இந்தக் கொடுமைதீர இறைவா நீ வழிகாட்டு!” என்று இறையிடம் முறையிடுகின்றார் திரு. கருணானந்தராஜா.

கண்ணைக்கட்டிக் காட்டில்விட்ட
கதையாய் ஆனதடா – யாவும்
கனவாய்ப் போனதடா.
எண்ணிக்கூடப் பார்க்க முடியா(து)
எல்லாம் மாறுதடா இனிமேல்
எதுவும் இல்லையடா
நாலுபேர்கள் தூக்கிப்போக நமக்கு ஆளில்லை –
நம்மைச் சூழவிருந்த சுற்றம் நமக்குத் துணையில்லை
கொல்லும் கொரனா நமதுவாழ்வைக்
கொள்ளை கொண்டதடா!
கூடிவாழ்ந்த எமதுவாழ்வு குலைந்து போனதடா!
கொரனா வென்னும் மரணப் பொறியில்
கூட்டாய் வீழ்ந்தோமே – நாம்
கொத்துக்கொத்தாய் வீழப்போகும் குழியைப் பறித்தோமே!
அரனே அல்லா உடனே வந்தெம் நிலையைப் பாராயோ
ஆற்றலிழந்தோம் எம்கண்கட்டை அவிழ்த்து விடுவாயோ
சொந்தம் சுற்றம் தூர விலகும்
துயரைப் பொறுப்போமோ- நாம்
தூய்மை தேடி வாழ்வின் இனிய
சுகங்கள் மறப்போமோ
இந்தக் கொடுமை என்றுதீரும் இறைவா வழிகாட்டு
எமது வாழ்வை மீட்டு இந்த இன்னல்தனை நீக்கு!

*****

”ஒற்றச் சோரனாய் வந்திட்டப் பார்ப்பிணி நம்மை அண்டாதகல, சித்தமருந்தைச் சித்தத்தில் வைத்துப் போற்றுமின்! அதன்மூலம் தொற்று நோயைத் தொற்றா நோயாக்க முயல்மின்!” என்று தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தைச் செப்புகின்றார் திருமிகு. அவ்வைமகள்.  

தொற்றும் கால்கள்? வெற்றுக் கால்கள்? தோற்றம்
தோற்றினும் அவையே வைரக் கால்கள்!
சுற்றிக் கட்டியக் கண்களை எத்திடும் கால்கள்
எற்றிடங் காட்டியே வைரசை லகுவாய் ஓட்டிடும்
ஏற்றினார் கட்டில் அவர் கட்புலன் சோருமேல்
முற்றுமோ தேடல் தொடர்வறியாமல்?
அற்றைப் பதங்கள் நகர்த்திய வளியும்
சொற்றைத் துறந்த மூச்சும் இறக்குமோ?
மாற்றிய பாதையில் மற்றவர் போவதால்
பற்றிய பாதையை மாற்றவு மெண்ணுமோ?
நேற்றிய தாவரமருங்கிலாடும் ஞானப் பிள்ளைகாள்!
ஏற்ற முகனில், மறைகீறிட்ட நோக்கில், தாவரந்தர
ஊற்றிடும் ஒளி, அருள் புரிதலைக் கண்டமின்!
ஒற்றச் சோரனாய் வந்திட்டப் பார்ப்பிணி இன்று
செற்றம் காட்டாது ஓடிடச் செய்யுமின்! “சித்தமருந்தில்
ஒற்றம் வாரா! பிணியண்டாதகலும்!” எனவே பகர்மின்!
“முற்றும் கண்டிலராதலால் முழுதாயறியுமின்!” என்றே
“உற்றிடம் இருந்து மற்றவர் எழுக! ஆய்க!” என்னுமின்!
“தொற்றுக் கொரோனா எம்மவர் முறையால் ஒழிந்துறும்
தொற்றா நிலையினை அறியுமின்!!” என்றே அறிவியுமின்!!
“கற்றிடும் வித்தை கண்க(கா)ட்டி வித்தைதான்!” உங்கள்
சுற்றமும் நட்பும் கூடிப் பகர்மின்!! ஆழப்பகர்மின்!
ஒற்றை வாழ்க்கைத் தாளாது மனிதம்! இனியென்றும் அது
ஒற்றிப் பற்றியே வாழந்திட வாழ்வியல் செய்யுமின்!!

*****

நாசியைக் கட்டச்சொன்னால் கண்ணைக் கட்டிவிளையாடும் பிள்ளாய்! கொரோனாவை ஒழிப்பதற்கு விழித்திரு! விலகியிரு! வீட்டிலிரு! என்று விழிப்புணர்வூட்டும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய மற்றொரு கவிதையில், ”நெருக்கத்தில் இருப்பவனை நெருங்கிவந்து பிடித்து விடு!
அவன் சட்டெனவே ஓடுகின்றான்; விரைந்தோடிப் பிடித்து விடு!” என்று கண்கட்டிய பிள்ளைக்குக் கருத்தாய் வழிகாட்டவும் செய்கின்றார். 

கொரோனா!

நாசியைத் தான் கட்டச் சொன்னோம்
நீ கண்களைக் கட்டியதேன்?
ஒருவருக்கொருவர் இடைவெளி என்றோம்
அவனை எம்பியெம்பி பிடிப்பதேன்
கைகளைக் கழுவு என்றோம்
நீயோ களியாட்டம் போடக் கண்டோம்
ஊரடங்கு உத்தரவென்றோம்
நீங்கள் வீதிகளில் ஆடக் கண்டோம்
சமுதாயக் கூட்டம் கூடாதென்றோம்
உங்கள் சடுதியாட்டம் காணக் கண்டோம்
உன் புன்னகை அருமைதான்
இல்லையென்று சொல்லவில்லை
சிறிது காலம் உன்பங்கும் அவசியம்தான்
கொரோனாவை ஒழிப்பதற்கு
விழித்திரு
விலகியிரு
வீட்டிலிரு கண்ணே
குடும்பத்தோடிரு
குதூகலமாயிரு
ஒத்திவைப்பாய் விளையாட்டை
ஒரு சில நாட்கள்தானே?
உலகமே ஒளிமயமாக
ஒன்றுபடுவோம் அதை ஒழிப்பதற்கே!

*****

அண்ணனோ நண்பனோ
அருகிலிருப்பதாய் உன் உணர்வு
கரம் பிடிக்கத் துடிதுடிப்பு
வெண்பற்கள் புன்சிரிப்பு
கறுப்பு வைரமாய் உன் கைகள்
மண் தரையில் பதிந்திட்ட கோல் கால்கள்
பின்னொருவன் பார்த்திருக்க
முன் நின்ற(வ)னைப் பாய்வதேன்!!
புல் தரையை விட்டுவிட்டு
மண்தரையை ஏன் கண்டாய்
மிருதுவான கால்களில்
தூசிகள் படுவதற்கா?
நெருக்கத்தில் இருக்கின்றான்
நெருங்கி வந்து பிடித்து விடு!
அவன் சட்டெனவே ஓடுகின்றான்
உன் சந்தோசம் குறைந்து விடும்
விரைந்தோடிப் பிடித்து விடு
துள்ளித் துள்ளி நகைத்து விடு!
கண் கட்டை அவிழ்த்திட்டோம்
நீ காணும் பொருட்கள் சுழன்றனவோ?!

*****

”மழைதரும் நீர்த்துளியை புழைசெய்து தேக்காமல், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் குற்றங்களை நிறுத்தாமல், அறியாமைக் காரிருளில் புரியாமல் நின்றுவிட்டு விதியாடும் கண்ணாமூச்சியென வீணாக உழலுகின்றேன்” என மானுடனின் பொறுப்பற்ற வாழ்வைப் பாட்டில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

கண்ணாமூச்சி

மழைதரும் நீர்த்துளியை
புழைசெய்துத் தேக்கிவைக்க
வழியேதும் செய்யாமல்
காலமதைக் கழித்திருந்தேன்!

சுற்றுப்புறம் மாசு செய்யும்
குற்றங்களை நிறுத்திடாமல்
வெற்றுச் செயல்களையே
கொற்றம் செய்ய விட்டுவிட்டேன்!

புயல் வருமோர் காலந்தன்னில்
சுயமுயற்சி ஏதுமின்றி
இயலாமைக் காப்புப்பூட்டி
முயலாமல் நின்றிருந்தேன்!

பட்டுபோன பழமைகளை
மனதினிலே தேக்கிவைத்துப்
புதுமைகளைத் துரத்திவிட்டு
புரட்சிக்காகக் காத்திருந்தேன்!

அறியாமைக் காரிருளில்
புரியாமல் நின்றிருந்தது
விதியாடும் கண்ணாம்பூச்சியென
வீணனாக உழலுகின்றேன்!

*****

”நாமும் நம் உடன்பிறவாச் சொந்தங்களும் சுகவாழ்வு பெற்றிடவே இல்லுக்குள் அடைந்திருக்கும் நாம் கைதிகள் அல்லர்! தியாகிகள்!” என்று நல்விளக்கம் தருகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

ஆட்டம்
பாட்டம்
கொண்டாட்டம்
தொடரட்டும்
ஆனந்தம்
பொங்கட்டும்
அன்பு பெருகட்டும்
கண்ணுக்குத் தெரியாத
கிருமியுடன்
கண்ணாம்பூச்சி ஆடுகிறோம்
உறவுகளுடன்
கை கோத்துப்
பலம் சேர்த்து
உயிருக்கு பயந்து
வீட்டில் இருந்தே
போராடுகிறோம்
உடன் பிறவா
சகோதர சகோதரிகள்
உயிர் வாழ்க எண்ணியே
வீட்டுக்குள்ளே
சிறைப் பிடிக்கப்பட்ட
கைதிகள் இல்லை நாம்
தியாகிகள்

நற்கருத்துகளைத் தம் கவிதைகளில் அற்புதமாய்த் தந்திருக்கும் படைப்பாளிகளைப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

கண்ணாமூச்சி!

கைக்கெட்டாக் கனிகளின்
சுவைக்கு அலைந்து,
கருத்தைக் கடந்தவற்றையும்
கைப்பற்ற முயன்று,
மூடியிருந்த கண்களுடன்
மூளையும் சேர்ந்தே முடங்கி,
கீறப்பட்ட ரணங்களால் சுருண்டு,
அஞ்ஞானமெனும் இருளில்
அடைபட்டிருந்தேன்!

கட்டுகளை அவிழ்க்கும் அறிவற்றுத்
தளைகளைத் தகர்க்கும் திறமிழந்து
தெருவெலாம் திரிந்தழிந்தேன்!

இகவாழ்வே கண்கட்டு வித்தையெனச்
சுகவாழ்வின் நிலையேக நினைந்து
இமைமூடிய இடுக்குகளில் வழிந்த
உள்ளொளிக் கீற்றின் நுனிபற்றி
ஞானமெனும் வானத்தையும்
எட்டிப் பிடிக்கும் தருணம்
கண்ணாமூச்சி முற்றுப்பெறும்!

”இகவாழ்வே ஒரு கண்கட்டு வித்தைதான்! இமைமூடிய இடுக்குகளில் வழிந்த உள்ளொளிக் கீற்றின் நுனிபற்றி ஞான வானை எட்டிப்பிடிக்கும் தருணம் கண்ணாமூச்சி முற்றுப்பெறும்!” எனும் வாழ்வியல் தத்துவத்தைத் தேர்ந்த சொற்களில் வெளிப்படுத்தியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு சக்திப்ரபா இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வுபெறுகின்றார்; அவருக்கு என் பாராட்டுகள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்

  1. வல்லமை குழுவிற்கு மிக்க நன்றி 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *