நாங்குநேரி வாசஸ்ரீ

133. ஊடலுவகை

குறள் 1321

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு

அவுககிட்ட எந்த தப்பும் இல்லையின்னாலும் பிணங்கிநிக்கது எம்மேல நேசம் வைக்கச்செய்யும்.

குறள் 1322

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்

பிணக்குனால எனக்கு ஏற்படுத சின்ன சங்கடத்துக்காவ அவுக காட்டுத அளவத்த நேசம் வாடினாலும் பெருமையத் தரும்.

குறள் 1323

புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து

நிலத்தோட தண்ணி கலந்தாமாரி ஒத்துமையா நேசம் வச்சிருக்க காதலர்கிட்ட ஏற்படுத பிணக்குல கெடைக்க சந்தோசம் சொர்க்கத்துலயும் கெடைக்குமா?

குறள் 1324

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை

இறுக்க கட்டிப்பிடிச்சி விடாம இருக்காமாரி அமையுத பிணக்குலதான் என் நெஞ்சுறுதியக் குலையச்செய்யுத ஆயுதமும் இருக்கு.

குறள் 1325

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து

தப்பே பண்ணாத நேரமும் பிணங்கி நேசம் வச்சவளோட மெல்லிசான தோளப் பிரிஞ்சி இருக்கதுல ஒரு சந்தோசம் இருக்கு.

குறள் 1326

உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

சாப்பாடு சாப்பிடுததவிட முன்ன சாப்பிட்டது செரிச்சிச்சின்னா அது ஒரு சுகம். அதுகணக்கா காதல்ல சேருதத விட பிணங்கி நிக்கது அவுகளுக்கு ஒரு சுகம்.

குறள் 1327

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்

பிணக்குல தோத்தவுக செயிச்சதுக்குச் சமானம். இத பொறவு கூடிச்சேந்து சந்தோசப்படையில தெரிஞ்சுக்கிடலாம்.

குறள் 1328

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு

நெத்திவேர்க்க கூடிச்சேருத சந்தோசத்த திரும்ப ஒருக்க பிணக்கு உண்டாகையில பெத்துக்கிடலாமில்லையா.

குறள் 1329

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா

பளபளக்குத மொகமுள்ள காதலி இன்னும் பிணங்கட்டும். அதுக்காவ நான் அவகிட்ட கையேந்தி நிக்குத சந்தோசத்தப் பெறுததுக்காக ராப்பொழுது நீண்டுபோவட்டும்.

குறள் 1330

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

காதலுக்கு சந்தோசம் தருதது ஒருத்தருக்கொருத்தர் கோவப்பட்டு சிணுங்கிப் பிரியுத ஊடல். அதுக்குப்பொறவு கூடிச்சேந்து சந்தோசப்பட்டாகன்னா அது அந்த ஊடலுக்கு இன்பம்.

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *