யாருடைய வரையறை?
சு. திரிவேணி,
கோயம்புத்தூர்
ஒரு மாதமாகக்
களைகட்டிவிட்டது துறை.
கல்லூரியின் வேலைநாள் முதல்
விருந்தினர் வரை
வேலைகள் வரையறுத்து
வரம்புகள் தீர்மானித்துப்
போகிறது விழாவின் பயணம்.
பயணம் நிறைவடைகையில்
ஆரவாரம் ஆரம்பமாகிறது.
விழாக்கோலமே மகிழ்வைத் தருகிறது.
பரபரப்பும் பரவசமும்
பார்ப்பவர் முகத்திலும்
புன்னகையை வரவழைக்கிறது.
எல்லாம் சரிதான்…
அணிகலன்களும் மலர்மாலைகளுமாய்
அலங்கரித்துக் கொண்டு மாணவிகளும்
ஆளுமை உணர்வு ததும்பும் ஆடைகளில்
புனைவுகளின்றி மாணவர்களும்
வரவேண்டுமெனக் கண்டறிந்து
வரையறுத்தவர் யார்
என்பதுதான் அறியப்படவில்லை!