நிர்மலா ராகவன்

 (குடும்பச் சுற்றுலா)

“அடுத்தமுறை, உலகத்தைச் சுற்றிப் பார்க்கப் போகும்போது, என்னையும் அழைத்துப் போகிறாயா?” கேட்டது என் எட்டு வயதாகியிருந்த பேரன். நான் எங்காவது அயல்நாடு போய்விட்டு, கதைகதையாகச் சொல்வதைக் கேட்டு, அவனுக்கும் ஆர்வம் பிறந்திருந்தது.

அப்படி என்ன கதை?

தற்போது கிழக்கு மலேசியா என்று அழைக்கப்படும் போர்னியோ காட்டுக்கு என் மகளுடன் சென்றிருந்தேன்.

காட்டில் ஆங்காங்கு சிறு குடில்கள். ஜன்னலோரமாக வைத்திருக்கும் வாழைப்பழத்தை வெளியிலிருந்து உரிமையுடன் எடுத்துச் சாப்பிடும் குரங்குகள். குடிலுக்கு வெளியே இருந்த மரத்தில் பின்னிப் பிணைந்த நாகம். இவையெல்லாம் நகர்ப்புறத்தில் காணக் கிடைக்காத அனுபவங்கள்.

‘இங்கு குழாய்த்தண்ணீர் சிவப்பாக இருக்கும். மரங்களின் வேரால் அப்படி ஆகிறது. ஆனால், சுத்தமான நீர்தான்,’ என்று முதலிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்.

குளியலறைக்குப் போனவள், அங்கு ஒரு தவளை இருப்பதைக் கண்டு, வெளியே ஓடி வந்தேன்.

‘வேண்டுமென்றுதான் ஒவ்வொரு குளியலறையிலும் ஒன்றை விட்டிருக்கிறோம். அப்போதுதான் கொசுத்தொல்லை இருக்காது!’ என்ற விளக்கம் கிடைத்தது.

‘தவளையை மிதித்துத் தொலைக்கப் போகிறோமே!’ என்று பயந்தபடி குளிக்க வேண்டியிருந்தது.

JUNGLE TREKKING என்று காட்டு வழியில் நடப்பதற்குப் புறப்பட்டேன். அதுதான் முதன்முறை. என்ன எதிர்பார்ப்பது என்று புரியாததால் உற்சாகமாக இருந்தது.

என்னைப்போன்ற அனுபவமற்றவர்களுக்கு என்று ஒன்று, இரண்டு என்று பாதைகளின் எண்களைக் குறித்திருந்தார்கள். முதல் பாதையில் ஆரம்பித்தேன். பாதி வழிக்குள் எப்படியோ, நான்காவது பாதைக்கு மாற்றி அழைத்துப் போய்விட்டாள் மகள். மொத்தமே ஐந்துதான்.

இந்தக் கடினமான பாதையில் ஒரு மரக்கிளையிலிருந்து அடுத்த நிலைக்குக் குதிக்க வேண்டும். இடையே ஒரு மீட்டர்!

எனக்கோ, அறுபது வயது. அப்படியே மலைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.

“’யோசிச்சுப் பாரும்மா. இந்த நிமிடம் போர்னியோ காட்டில் மரங்களின் மீதும், மலைப்பாதைகளின்மேலும் ஏறி, இறங்கும் இந்தியப்பாட்டி நீ ஒருத்தியாகத்தான் இருப்பாய்!”

“பயமாக இருந்தாலும், அக்காரியத்தைச் செய்துவிட்டால், பயம் போய்விடும்,” என்றெல்லாம் பலவாறாக மகள் சமாதானப்படுத்த, நீண்ட மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு குதித்தேன்.

என்னைத் தனியாகத் திரும்பிப்போகச் சொல்லிவிட்டு, என் மகள் மீண்டும் ஏறினாள்.

நான் போகும் வழியில் ஒரு PROBOSCIS குரங்கு உட்கார்ந்திருந்தது. பெரிய உருவம். தும்பிக்கைபோல் ஒன்று. நட்டநடுவிலா இப்படி உட்கார்ந்திருக்கும்!

இம்மாதிரி தருணங்களில்தான் பக்தி அதிகரித்துவிடுகிறது.

நான் அதற்கு மிக அருகில் நடந்துபோனேன். அது கவனிக்கவேயில்லை. சில சமயங்களில் நாம் அடையும் அச்சம் அனாவசியம் என்று புரிந்தது.

அடுத்த சில மணி நேரம், நாற்காலியில் உட்கார்ந்திருந்த நிலையிலும் என் கால்கள் தாமாக ஆடியபடி இருந்தன.

‘நமக்கு ரொம்பத்தான் வயதாகிவிட்டது போலிருக்கிறதே!’ என்று எழுந்த கவலை அதேபோல் பக்கவாட்டில் கால்கள் ஆட நடந்த இரு இளம்பெண்களைப் பார்த்ததும் சிரிப்பாக மாறியது.

முன்பின் பழக்கமில்லாமல் ஒரு காரியத்தில் இறங்கினால் எதை எதையோ சந்திக்க வேண்டியிருக்கும்.

நேபாளத்தில்

காட்மாண்டுவின் தென்மேற்குப் பகுதியில் இருந்த சிட்வான் (CHITWAN) என்ற இடத்திற்குப் போனோம். அக்காட்டில் யானைகளை வளர்க்கிறார்கள்.

ஒரு யானைமேல் கால்களை இரு பக்கங்களிலும் தொங்கவிட்டு அமர்ந்தபடி காட்டினூடே பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம்.

அவ்வப்போது, ‘எல்லாரும் முன்னால் நகருங்கள்,’ என்று அதன்மேல் அமர்ந்திருந்த நால்வரிடம் உத்தரவு பிறப்பிப்பார் யானைப்பாகன். அடுத்து, யானை ஒரு மேட்டிலிருந்து குதித்து, ஆற்றுக்குள் நடக்கும். பயமும் மகிழ்ச்சியும் போட்டி போட்டுக்கொண்டு எழுந்தன.

அங்கு விதவிதமான பறவைகள், அசையாது, இறந்ததுபோல் கிடந்த முதலைகள்.

வழியில் ஒரு குட்டி யானை அம்மாவின் அடியிலிருந்த நிழலில் படுத்து சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. சற்று வளர்ந்தபின்னர், அதையும் பழக்குவார்கள் என்று கேட்டபோது வருத்தமாக இருந்தது.

இன்னொரு குட்டி அதன் ஆகாரமான தழைகளை மணலில் புரட்டி, அதைத் தன் தலைமேல் தட்டிக்கொண்டது. தன் தாய் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கும்.

அடுத்து, வாயில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது புரியாது, மீண்டும் மணலில் புரட்டி எடுத்து, தலையில் தட்டி, என்று திரும்பத் திரும்ப அதே காரியத்தைச் செய்தது எங்களை பரிதாபப்படவும், சிரிக்கவும் வைத்தது.

நீண்ட யானைச் சவாரிக்குப்பின் இறங்கவே சிரமப்பட்டேன். காலில் தசைநார் கிழிந்துபோக, ஆறுமாத காலம் நொண்டியபடிதான் நடக்க முடிந்தது.

‘செலவு, நோய்நொடி எல்லாவற்றையும் தவிர்க்க இருக்கும் இடத்திலேயே சௌக்கியமாக இருக்கலாமே!’ என்று பார்த்தால் முடியுமா? வீட்டில் செய்த காரியத்தையே செய்துகொண்டிருப்பது சலிப்பைத்தான் தரும்.

முன்னேற்பாடாக, தேவைப்படும் ஆடைகளையோ, மருந்துகளையோ எடுத்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

(நீண்ட பயணத்திற்கு உலர்ந்த திராட்சையை அவ்வப்போது மென்றால், சோர்வு ஏற்படுவதில்லை. சிசுக்களை விமானத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் காதில் பஞ்சை அடைத்தால், ஓயாமல் கதறி அழமாட்டார்கள்).

உணவு, உறக்கம்

என் ‘சாதனை’களைக் கேட்ட பின்னர், தானும் இம்மாதிரியான சாகசங்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என் பேரனுக்கு.

எனக்குத் தயக்கமாக இருந்தது.

“நீ சாப்பிடப் படுத்துவாயே! வெளியில் என்ன கிடைக்கிறதோ, அதைத்தான் சாப்பிட வேண்டியிருக்கும்”.

மறுநாளிலிருந்து வீட்டில் என்ன சமைக்கிறோமோ, அவைகளையெல்லாம் ‘பிடிக்காது, பழக்கமில்லை,’ என்றெல்லாம் வழக்கம்போல் ஒதுக்காது, மிளகாய் வற்றல், கறிவேப்பிலையைக்கூடச் சாப்பிட ஆரம்பித்தான்!

நீண்ட பயணத்தின்போது தூங்கினால்தான் இறங்கியபின்னர் உற்சாகத்துடன் சுற்றிப்பார்க்க முடியும். ஓயாமல் பேசிக்கொண்டோ, விளையாடிக்கொண்டோ சென்றால், ஊரைச் சுற்றிப் பார்க்கும்போது உடல் களைத்து, எதையும் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது.

குழந்தைகளுக்கு லஞ்சம்

பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய நேரிட்டால், சிறுவர்களுக்குப் பொறுமை மீற, நமக்கு அவர்களை சகிக்க முடியாது போய்விடும்.

“பேசாம இருந்தா, அடுத்த தடவை கார் நிக்கறபோது, ஒனக்கு ரெண்டு ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன்,” என்று ஆசை காட்டுவேன்.

சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். உண்மை பேசும் குணமும் தானே வரும்.

“ஒனக்கு மட்டும்தான் ரெண்டு!” என்று, அவன் என்னவோ மிக நல்ல குழந்தை என்பதுபோல் சொல்லிக்காட்ட, அவனுக்குப் பெருமையாகிவிடும். பயணம் தொடரும்போது, முடிந்தவரை தொந்தரவு கொடுக்காது இருப்பான்.

குழந்தைகளுடன் சுற்றுலா போவதால் நன்மை அவர்களுக்கு மட்டுமல்ல.

‘வெளியூருக்குப் போனா, மத்தியானம் தூங்க வேண்டாம்னு அம்மா சொல்லிட்டா!’ என்று நான்கு வயதில் என் மகள் குதூகலித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

அறிவு முதிர்ச்சி

புதிய இடங்களில் பழக்கமில்லாத மொழி, கலாசாரத்தைப்பற்றி அறிவது அறிவு முதிர்ச்சியை அளிக்கிறது. அதிகாரம் செய்வதைவிட மரியாதையாகப் பிறரை நடத்துவது நல்ல பலனை அளிக்கும் என்று புரிந்துபோகிறது. நம்மிடமிருந்து மாறுபட்ட எவரையும் ஏற்கும் குணம் வருகிறது.

வீடு திரும்பியபின், எந்த வயதினரும் எப்போதும் செய்துவந்த காரியங்களைச் செய்ய உற்சாகம் காட்டுவார்கள்.

காலப்போக்கில், பெற்றோரைவிட்டு வெகுதொலைவு சென்றாலும், சிறுவயதில் குடும்பத்துடன் கழித்த சில தருணங்கள் நினைவில் நிலைத்து, மகிழ்ச்சியைத் தரும்.

அவை வாழ்க்கையில் ஏற்படும் இடர்களால் ஒரேயடியாக இடிந்து போய்விடாது நம்மைக் காக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *