மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண்,  ஆஸ்திரேலியா

கொரோனா வரமா சாபமா என்றால்… வரமென்றும் கருதலாம். சாபமென்றும் கருதலாம். சாபமென்னும் வேளை அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள். அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகள். அதனால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை. நாளாந்த வாழ்க்கையினையே புரட்டிப் போட்ட போக்கிரித்தனம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் குடும்பத்தைக் கூட்டி வைத்திருப்பதை நன்மையென்றே எடுத்துக் கொள்ளலாம். மனரீதியில் பாதிப்புகள் வருவதாக பல செய்திகள் வந்தாலும் வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டிலே இருக்கின்ற ஒரு நிலை உருவாகி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகாலை அவசரப்பட்டு எழத் தேவையில்லை. அடித்துப்பிடித்து வேலைக்கு ஓடிப்போக வேண்டியதில்லை. பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியதும் இல்லை. அவர்கள் சுவையற்ற உணவுகளை உண்ண வேண்டியதும் இல்லை. கணவனும் மனைவியும் பிள்ளைகளுடன் சேர்ந்திருந்து மகிழ்வுற நல்ல தருணம். வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டியும் தனிமை என்னும் இருளைக் கடந்து வெளிச்சம் என்னும் மகிழ்வுக்குள் வந்துவிட்ட நிலைமை.

தனித்திருத்தல் என்பது தடுப்புச் சுவராகும். விழித்திருப்பதென்பதும் நம்மையும் காத்து மற்றவர்களையும் காப்பாற்றுவது என்பதாகும். வீட்டில் இருப்பது என்பது வீட்டையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கு ஒப்பானதாகும்.

ஓய்வு நேரம் கிடைக்காத என்று ஏங்கிய பலருக்கு கொரோனாவின் வரவால் நல்ல ஓய்வு கிடைத்திருக்கிறது. கிடைத்த ஓய்வைச் சாபமென நினைத்துச் சஞ்சலப்படுவதாகப் பல செய்திகள் நாளும் பொழுதும் வந்த வண்ணம் இருக்கின்றன. வீடற்றவர்கள் பலர் தெருவை வீடாக்கி சீவிதத்தை ஓட்டி வருகிறார்கள். அன்றாடங் காய்ச்சிகள் அவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையே பெரிய சங்கடம்! உண்ண உணவு கிடைத்தால் அவர்களுக்கு அதுவே ஆனந்தம்! தனிமை என்பதை அவர்கள் நினைத்தே பார்ப்பதும் இல்லை. வயிறு பசித்தால் உணவு கிடைக்கவேண்டும் கிடைத்தால் அதுவே நிம்மதி என்பதுதான் அவர்கள் நிலை.

இருப்பதற்கு வீடு இருக்கிறது. அது சொந்த வீடாக இருக்கலாம். அல்லது வாடகை வீடாகக்கூட இருக்கலாம். எப்படியோ ஒரு வீடு  அமைந்துவிடும். வீட்டில் இருப்பதே பெரிய பாதுகாப்பு! வீதியை வீடாக்கி இருப்பார்க்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே! அவர்கள் வயிற்றை நிரப்பவே வழி தேடுகிறார்கள். ஆனால் வீடும் இருக்கிறது. வேலையும் இருக்கிறது. கொரோனாவால் வீட்டிலே இரு என்னும் நிலையை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது பொருத்தமற்ற ஒரு சிந்தனையே எனலாம். நல்ல ஒரு தருணம் நம்மைக் காத்திட நம்மைச் சார்ந்தவர்களைக் காத்திட வாய்த்திருக்கும் வேளை அதனைச் சாபமாக ஏன் நினைக்க வேண்டும். நல்ல வரமாக நினைத்தால் குறைந்தா போய்விடுவோம்?

பிள்ளைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லலாம். அவர்களுடன் இருந்து விரும்பிய விளையாட்டை விளையாடலாம். எல்லோரும் சேர்ந்து சமைத்து மகிழலாம். நல்ல நூல்களை வாசிக்கலாம். உறவுகளுடன் , நட்புகளுடன் தொலைபேசியில் சுகம் விசாரிக்கலாம். பிராத்தனைப் பாடல்களை ஒன்று கூடிப்பாடலாம். நல்ல இசைநிகழ்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கலாம். கணினியில் பட்டி மண்டபங்கள், நற்சிந்தனைகள், பார்க்கலாம். சிரிப்பு நாடகங்களைக் கண்டு நம்மை மறக்கலாம். இப்படி என்ன என்ன நல்லன எல்லாம் இருக்கின்றனவோ அவற்றைக் குடும்பத்துடன் பார்த்து மனதைச் சிதற விடாமல் மகிழலாம் அல்லவா? அதற்கான நல்ல தருணமே இந்தத் தனிமைப்படுத்தல் என்பதை ஏன் மனத்தில் கொள்ள  மறுக்கிறோம்!

பசுமையான நல்ல நினைவுகளை மீட்கலாம். அதனைக் குடும்பத்தாருடன் பகிர்ந்து பழைய வாழ்வினுக்கே செல்லலாம் அல்லவா? இளமையில் செய்த குறும்புத்தனங்களைக் குடும்பத்தாருடன் பகிர்ந்து மனம்விட்டுச் சிரித்து மகிழலாம் அல்லவா?

கொரோனாவின் கொடூரம் ஒருபுறம். வீட்டில் இருக்கிறோமே என்றும் வருந்தினால் அது அதைவிடக் கொடூரமாயும் ஆகிவிடும். அத்தியாவசியத் தேவைகளில் வேலை செய்கின்ற மருத்துவர்கள், காவல்துறை சார்ந்தவர்கள், ஆம்புலன்ஸ் சாரதிகள், துப்பரவுத் தொழிலாளர், இவர்கள் யாவரும் குடும்பத்தை விட்டு, கொடூரக் கொரோனாவுக்குள் வேலைசெய்யும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதேவேளை கொரோனா பற்றிய கொடூரத்தில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறும் அறிவுரையால் வீட்டிலே இருக்கின்ற நிலையை எப்படி வெறுக்க முடியும்? அப்படி இருப்பது மன உளைச்சலைத் தருகிறது என்று சொல்லுவது மனித தர்மமா? சற்று நிதானித்துச் சிந்திக்க வேண்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *