செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்… (299)

ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

       – திருக்குறள் -156 (பொறையுடைமை)

புதுக் கவிதையில்…

தமக்குத்
தீங்கு செய்தோரைத்
தண்டித்தவனுக்குக் கிடைப்பது
அன்று
ஒருநாளைய இன்பமே..

ஒறுக்காமல் அதனைப்
பொறுத்து விட்டவனுக்குப்
பூமி அழியும் நாள்வரைப்
புகழ் நிலைத்திடுமே…!

குறும்பாவில்…

தீங்கு செய்தவரைத் தண்டிப்பவனுக்குக்
கிடைப்பது ஒருநாள் இன்பமே, அதைப்பொறுத்து
விட்டவனுக்கு உலகுள்ளவரைப் புகழே…!

மரபுக் கவிதையில்…

துன்பம் தமக்குத் தந்தவர்கள்
     துடிக்கும் படியே ஒறுத்திட்டால்,
அன்றைய ஒருநாள் மட்டும்தான்
     அவனுக் குரிய இன்பமதே,
நின்றதைப் பொறுத்தே ஒறுத்திடாமல்
     நிறைந்த மனத்துடன் மன்னித்தால்,
இன்று மட்டும் இன்பமல்ல
     இப்புவி உளவரைப் புகழாமே…!

லிமரைக்கூ..

தீங்கு செய்தோரை இகழ்ந்து
தண்டிப்பவனுக்கு ஒருநாளே இன்பம், பொறுத்தவனைப்
புவியுள்ளவரைப் பேசுவர் புகழ்ந்து…!

கிராமிய பாணியில்…

வேணும் வேணும் பொறும வேணும்,
ஒலக வாழ்க்கயில பேர்சொல்ல
ஒசந்த கொணமாம் பொறும வேணும்..

தனக்கொருவன் தீங்குசெஞ்சா
அவனப் புடிச்சித்
தண்டன குடுப்பவனுக்கு
அந்த ஒருநாள் மட்டுமே இன்பம்,
ஆனா
அவன மன்னிச்சித் தண்டனகுடுக்காம
உட்டவனுக்கு
ஒலகம் அழியும்வரப்
பேரும்புகழும் நெலைக்குமே..

அதால
வேணும் வேணும் பொறும வேணும்,
ஒலக வாழ்க்கயில பேர்சொல்ல
ஒசந்த கொணமாம் பொறும வேணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *