வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-23

0

தி. இரா. மீனா

பசவேசர் தொடர்ச்சி

35. “பாம்பு கடித்தவரைப் பேசவைக்கலாம்
பேய் பிடித்தவரைப் பேசவைக்கலாம்
செல்வமெனும் பூதம் பிடித்தவரைப்
பேசவைக்க முடியாது காணீர்
வறுமை என்னும் மந்திரவாதி வந்தால்
உடனே கூறுவார்கள், கூடலசங்கமதேவா என்றே“

36. “நீர் தப்பிய மீன் வாழ்வதில்லை
சிவகணங்களுடன் என்னைச் சேர், இலிங்கமே
சிவசிவா கூடலசங்கமதேவா
முந்தானை நீட்டிக் கெஞ்சுகிறேன்”

37. “பானை செய்ய மண்ணே அடிப்படையாம்
தோடு செய்யப் பொன்னே அடிப்படையாம்
சிவநெறியறிய குருநெறியே அடிப்படையாம்
நமது கூடலசங்மதேவனை அறிய
அடியவர் கூட்டமே அடிப்படையாம்“

38. “விழாவிற்கென வந்த பலியாட்டுக்குட்டி
தோரணத் தளிர்களைத் தின்றது
கொல்லப் போகிறார்கள் என்பதறியாமல்
வேகப் போகும் உடலை வளர்க்க முயன்றது.
மக்கள் பிறந்ததும் அவ்வாறே பெற்றதும் அவ்வாறே
கொன்றவர் மிஞ்சினார்களோ, கூடலசங்கமதேவா?”

39. “எலே எலே மனிதா பேராசை வேண்டாமடா!
வளர்பிறை தேய்பிறையாம் செல்வம் நிலையல்ல
அழியா அரசு பெறவே கூடலசங்கம தேவனே
மறவாமல் பூசை செய்வாய்“

40. “சாணத்தில் பிடித்த விநாயகனைச்
சம்பங்கி மலர் கொண்டு பூசித்தால்
அலங்காரம் ஆகுமன்றி நாற்றம் விடுவதில்லை.
மண் பொம்மையை விடாது நீரில் கழுவினால்
அடுத்தடுத்துச் சேறாவதல்லாது அதனியல்பு மாறாது.
உலகில் ஊறிய மனிதனுக்குச் சிவதீட்சை தந்தால்
கெட்டவன் ஏன் சிவபக்தன் ஆகான் கூடலசங்கமதேவா?”

 41.“தீட்டுண்டோ இலிங்கமிருக்கமிடத்திலே?
குலமுண்டோ ஜங்மனிருப்பிடத்தில்?
எச்சிலுண்டோ பிரசாதமிருக்குமிடத்தில்?
தூய்மையின்றிப் பேசுபவன் சூதகன் பாதகன்
களங்கமின்மை ,உண்மை ,ஐக்கியம் என்னும் மூவகை
மனவுறுதியால் கூடலசங்கமதேவனே
உனது சரணருக்கு இல்லாதது வேறு எதுவுமில்லை“

எளிமை, தியாகம், நல்லெண்ணம், மிருதுவான இயல்பு மற்றும் கடினத் தன்மை, கவித்திறன், அச்சமின்மை தூயமனம் என்று அனைதியல்பு களையும் பெற்ற ஒரு சிறந்த நாயகனாகவே பசவேசர் தன் காலத்து மனிதர்களால் போற்றப்பட்டவர். ”பசவண்ணர்  நடந்ததே வழி, எல்லா உயிர்களுக்கும் அவன் சொன்னதே வேதம்“ என்று மருளசங்கரன் என்னும் வசனக்காரரும்

“எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு பசவன் என்னும் கோடி
எட்டிப் பார்த்தால் இலிங்கத்தின் கூட்டம்
நெருங்கிப் பார்த்தால் பக்தியென்ய்ம் ரசமையா“

என்று மடிவாளமாச்சையன் என்னும் வசனக்காரரும்  கூறுகின்றனர். ”பசவண்ணரின் எண்ணம் இன்பப் பெருங்கடலையா“என்று சித்த ராமன் போற்றுகிறார். ”பசவனின் பெயர் சிவனின் முக்கிய கணங்கள் எல்லாவற்றின் பெயரிலும் தலையாயது“என்று பீமகவி போற்றுகிறார்.

தாசோஹத சங்கண்ணா

சரணர்களுக்கு அன்னம் படைப்பதே இவர் காயகம்.அதனாலேயே இவருக்கு “தாசோஹத சங்கண்ணா“என்பது பெயராகிவிட்டது. “மாதுளங்க மதுகேஸ்வரன்“ இவரது முத்திரையாகும்.

1.“காண்பவர் அனைவரும் ஆடமுடியுமா?
பேசுபவர் அனைவருமங்கலிங்கத்தின் யோகமறிவார்களா?
சாதனை செய்கின்றவர் அனைவரும் போர் புரிவார்களா?
போலியான யோகியர் அங்கலிங்கம் யோகமறிவாரோ?
சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“

2. “ பூனையை விழுங்கிய சேவல்
காலமறிந்து தன் குரலால் கூவமுடியுமா?
இலிங்கமறிந்த மனம் சம்சாரக் கூட்டத்தில் மூழ்குமோ?
இவ்வேற்றுமையறிந்து யோக உறவிலிருக்க வேண்டும்
சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“

3. “ கருவிக்குக் கட்டுப்பாடேயன்றி  நாதத்திற்குண்டோ?
அறிவிற்குக் கட்டுப்பாடேயன்றி அறிவாளிக்குண்டோ?
அறிந்தேனெனும் பிரமை அறிந்துகொண்டேன் என்ற
அடையாளம் இரண்டும் இருக்கும்போது
எண்ணம் தூய்மையன்று.
சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“

4. “கல்லுள் நெருப்பின் நிலைபோல
ஆதியந்தம் இடையென நினைக்காமல்
எங்கு தொட்டாலும் பொறி எழுவது போல
அங்கம் முழுவதும் இலிங்கமான சரணனுக்கு
எந்நிலையில் பார்த்தாலும் இலிங்கமிருக்கும்
எதிரில் தான் மற்றவரெனும் தீட்டு அவனுக்கில்லை
பழத்துள் விடம் கலந்தால்
தின்றவனுக்கன்றி பழத்திற்குக் கேடோ?
இக்குணம் உடல் முழுவதும் இலிங்கமானவனுக்குரித்து.
சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“

5. “புற்றுக்குப் பாம்பாகி நீருக்கு நீர்ப்பாம்பாகி
கிளைக்குக் குரங்காகி அவரவர் போக்கில்
இறைச்சிக்குக் காத்திருக்கும் நரிபோலத் திரிவதேன்?
ஆயுள் முடிந்தபின்னர் மரணம்
செல்வம் போனபின் தரித்திரம் தப்பாது என்றறிந்த பின்
இறந்தது போல அமைதியாயிருக்க வேண்டும்
பக்தியின் வழியிது
சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *