வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-25

0

தி. இரா. மீனா

நிவ்வுருத்தி சங்கய்யா

சிவசரணான பின்பு சாதியை விட்டு விடவேண்டும்.ஆசையை விட்டொழிப்பவனே உண்மையான இலிங்காங்கி [இலிங்காயத்து] என்கிறார். ’நிவ்ருதிசங்கையா’ இவரது முத்திரையாகும். வடமொழிச் சொற்களை அதிகம் பயன்படுத்தியிருப்பதால் கல்வியில் சிறந்திருப்பார் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

“அசையும் அசையாப் பொருட்கள் எல்லாவற்றிற்கும்
ஆசையே முதன்மையாம்.
எண்பத்து நான்கு இலட்ச அசையும் அசையாப் பொருட்களில்
ஆசையின்றி வாழும் இலிங்கமுடையவனைக் காட்டுவாய்
ஆசையைக் குற்றம் சாட்டி
நிராசையில் வாழ்பவரைச் சரியென்பேன் காணாய்
நிவ்வுருத்தி சங்கையனே”

நீலம்மா

பசவேசரின் இரண்டாவது மனைவி இவர். பிஜ்ஜள மன்னனின் வளர்ப்புத் தங்கை. ’விவேக பத்தினி’ என்று தன்னை அழைத்துக் கொண்ட இவர் பசவேசரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர். கல்யாண் புரட்சி சமயத்தில் கூடல சங்கமத்திற்கு அருகிலுள்ள தங்கடியில் ஐக்கியமானார் என்பது செய்தி. ‘சங்கய்யா’ என்பது இவரது முத்திரையாகும்.

1. “வரவிற்குப் பெருமை தேவையில்லை
இழப்பிற்குக் கலக்கம் வேண்டியதில்லை
மனமே, உன்னை நீயே சமாதானம் செய்து கொள்.
வரவு உன் வசமல்ல; இழப்பு உன் விருப்பமல்ல
பற்பல போகங்கள் அனைத்தும் சங்கய்யன் வசம்“

2. “இலையுதிர்ந்த மரத்தில் நிழலைத் தேடவில்லை
ஒளியிழந்த விளக்கில் வெளிச்சம் தேடவில்லை
அடையாளமற்றதில் உருவம் தேடவில்லை
ஒலியடங்கிய பசவனுள் ஒலியைத் தேடவில்லை
சங்கையனில் நான் உடலற்ற கருணையோன் ஆனேன்”

3. “பார்வதியின் அழகை எனக்குள் கண்டு
நான் சிவனோடு சேர்ந்தவளென
என்னோடு அவன் இணையவில்லை
தாய்மகன் உறவில் உடலழித்து
சுமையில்லாத தேகம் பெற்று
பசவனின் அனுபவத்தால் நான்
அறிவுடைய மனைவியானேன் சங்கய்யனே“

நூலிய சந்தய்யா

புல்லைக் கொண்டு வந்து கயிறு திரித்து அதை விற்ற பணத்தில் தாசோகம் செய்து வந்தவர். கல்யாண்  புரட்சிக்குப் பிறகு சென்ன பசவரோடு உடுவிக்கு வருகிறார். அங்கு சென்ன பசவர் இறைவனோடு ஐக்கியமான பின்பு நாகம்மாவோடு எண்ணேஹொளே வருகிறார். அங்கு நாகம்மா மறைந்த பிறகு நூலேனூரு வருகிறார். அங்கு சமாதியாகிறார். அங்கு இவரது சமாதி இன்றுமிருப்ப தாகச் சொல்லப்படுகிறது. ’சந்தேஸ்வரா’ இவரது முத்திரையாகும். குரு, இலிங்க, ஜங்கம எல்லோருக்கும் காயகம் கட்டாயம். “காட்டுக் கீரையாக இருந்தாலும் காயகம் செய்து கிடைத்தால் மட்டுமே படையலாக்க வேண்டும்“ என்று காயக மேன்மையைக் குறிப்பிடுகிறார்.

1. “காயகம் எதைச் செய்தாலும் மனத் தூய்மையுடன்
குரு, இலிங்க, ஜங்கமனுக்குச் செய்வது சிவபூஜை
செய்யும் செயலன்றி வெறும் பேச்சு பூஜையாகுமோ?
சென்ன பசவண்ணப் பிரிய சங்கேஸ்வர இலிங்கத்துக்கு
அது இசைவல்ல மடிவாளய்யனே .”

2. “ஆயுதம் ஏந்தியவர்கள் அனைவரும் வீரமானவரோ?
சாதனை செய்யும் சிறியோர் போரில் வல்லவரோ?
துரோகிகள் உயர் பக்தராவரோ?
சென்ன பசவண்ணப் பிரிய சங்கேஸ்வர இலிங்கத்துக்கு
அது பொருந்தாத செயல்.”

3. “குருவுக்கு உடல் இலிங்கத்துக்கு உள்ளம்
ஜங்கமனுக்குச் செல்வம் என்வான பின்னர்
பிறிதொன்றின் விருப்பத்தைக் கொண்டாடுவதேன்?
அந்த குணம் சந்தேஸ்வர இலிங்கத்துக்குத் தூரம்“

பரஞ்சோதி

’வரநாகன குரு வீரன பரஞ்சோதி மகாவிரக்தி’ என்பது இவரது முத்திரையாகும்.

“உடலெடுத்து மாயையை விடவேண்டுமெனில் அது எப்படி?
தேகமெடுத்து அனுபவ அமுது பருகினோமென்பர்.
அமுதுண்ட பின்பு பசியுண்டோ சொல்வாய்?
வாதம் பித்தம் சிலேட்டுமம் கொண்டு
அமுதுண்டோமெனச் சொல்பவருக்கு  என்றும்
அமுது கிடைக்காது பிரமைக்கு ஆட்பட்டோர்
கெடும் கேட்டிற்கு முதல் முடிவெதுவுமில்லை.
மனமே தானானவனுக்கு அழிவில்லை அச்சமில்லை
வரநாகன குரு வீரன பரஞ்சோதி மகாவிரக்தியே”

புரத நாகண்ணா

அமரகுண்டமெனும் ஊரைச் சேர்ந்தவர். ’அமரகுண்டத்து மல்லி கார்ஜூனா’ என்பது இவரது முத்திரையாகும்.

“நினைக்கும் மனத்துக்கு மண்ணைக் காட்டினாய்
பார்க்கின்ற பெண்களுக்குப் பெண்ணைக் காட்டினாய்
வணங்குகின்ற கைகளுக்குப் பொன்னைக் காட்டினாய்
இம்மூன்றையும் காட்டியும் கொடுத்தும்
மறதியுள் வைத்தாய்
அமரகுண்டத்தின் மல்லிகார்ஜூனையா
நீ காட்டிய அதிசயம் கண்டு வியந்தேன்.”

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *