திருச்சி புலவர் இராமமூர்த்தி

இயற்பகை   முனிவா   ஓலம்;  ஈண்டுநீ   வருவாய்  ஓலம்!
அயர்ப்பிலா   தானே   ஓலம்!    அன்பனே   ஓலம்,  ஓலம்!
செயற்கரும்  செய்கை  செய்த  தீரனே  ஓலம்!   என்றான்
மயக்கறும்    மறைஓ   லிட்டு   மாலயன்  தேட  நின்றான்!

தம்மிடம்  மனைவியாரை   ஊரறிய  ஒப்படைத்து  விட்டுத்  திரும்பிப் பார்க்காமல் தம்மூர் நோக்கிச் சென்ற இயற்பகையாரை, சிவவேதியராக வந்த இறைவன் ஓங்கிய குரலெடுத்து அழைக்கலுற்றார்; ஊர் அறிய ஒப்படைத்த  அடியாரை ஊர் அறிய  அழைத்தார்.

என்றும் தெளிவுடைய நான்மறைகள் பன்முறையும் தம்மை நோக்கி அழைத்த போதும் வெளிப்படாதவர் சிவபெருமான்; அதுமட்டுமல்ல பிரமனும் திருமாலும் தேடிய போதும் அவர்களுக்கு அகப்படாமல் ஓங்கியுயர்ந்து நின்றவர்  சிவபிரான்; அவரே  இப்போது,  “இயற்பகை முனிவனே ஓலம்!; இங்கே நீ வருவாய் ஓலம்!; எப்போதும் எமது சிந்தனை மறவாதவனே ஓலம்!; அன்புடையவனே ஓலம்! ஓலம்!; பிறர் எவரும் செய்தற்கரிய செய்கை செய்த தீரமுடையானே ஓலம்!” என்று தான் பன்முறையும் ஓலமிட்டு அழைத்தான்.

இப்பாடலில் ‘இயற்பகை முனிவா!’ என்ற தொடர் இயற்பகையார்,  முனிவர் நிலையை அடைந்த சிறப்பை  விளக்குகிறது. தம் மனைவி பால் காமம் காட்டாமல், காமனை முனிந்தவர் முனிவர் ஆனார்  உலகப் பற்றுக்களை யெலாம் அறவே முனிந்து ஒதுக்கியவராதலின் முனிவர் என்றார். அவரது முனிவராகும்  தன்மையை மூவுலகும் அறியக்  காட்டிய செயல் நிறைவெய்திய இடம் இது!  அதனை நிறுவியமையால்  இவர் முனிவரா யினார் என்று முடித்துக் காட்டியபடியாம்.

இவ்வாறு அவர் முனிவரான செயலை  இறைவனோடு ஓ[பிட்டு  சேக்கிழார் விளக்குகிறார். பின்னர் இதே நூலில்  “முனிவர்“ – (408); “மாதவன்“ – (412); மறைமுனி – (419); நற்றவர் – (422); முனிவர் (429); தவமுனி – (430) என முன்னர் முனித் தன்மை யாலே குறிக்கப்பெற்ற இறைவன்,

“துரியங் கடந்தசுடர்த் தோகையுட னென்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் – றுரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும்
ஆக்குவிப்ப னன்பர்க் கவன்”.

என்று திருக்களிற்றுப்படியார் காட்டிய படி,  தமது தன்மையே தமது அன்பர்க்கும் ஆயினமையை  இங்குக் குறித்துக் காட்டினார்!  முனிவரால் முனிவர் எனப் போற்றப் பெற்றமையால் இவர்  பெரு முனிவர் ஆனார்!

அடுத்து இப்பாடலின்  ‘’ஈண்டு நீ வருவாய் ‘’ என்ற தொடர்,’’ நீ புகுமிடம் நீ இப்போது திரும்பிச் செல்லும் நகரமன்று. நாம் இருக்கும் இந்த இடமே’ என்பதைக்க குறித்தது. இத்தொடரை, ‘’மீண்டு நீ வருவாய்’’, என்றும்  கூறலாம் .  பிறரால் எளிதின்  மீளக்கூடாத இவ்வுலகத்திலிருந்து மீண்டு எமது நலமிகும்  உலகத்திற்கு மீண்டு வா’ என்ற குறிப்பும் விளங்குகிறது.

இப்பாடலின்  ‘’அயர்ப்பிலாதானே’’  என்ற தொடர்,  ‘’எந்தக் காலத்தும் எவ்விடத்திலும் சிவனையும் அவனடியாரையும் மறவாமல் நின்று, அடியாருக்கு  இல்லை என்னாத விரதங் காத்தவனே!’’,  என்று பொருள் படும். அயர்ப்பு என்பது மறதியைக்  குறிக்கும்.

“அங்கொருநாள்  அருளாலே யயர்த்து உண்ணப் புகுகின்றார்
எங்கள்பிரான் தனையறியாது  அயர்த்தேன் யானென“

சாக்கியநாயனார் புராணத்திலும் இதனைச் சேக்கிழார் கூறுவார். மேலும், ‘’அன்பனே ஓலம் ஓலம்’’ என்ற பகுதியில் இருமுறை ஓலம் என்று கூறி அழைத்தமையால், இறைவனிடத்தும் அடியாரிடத்தும் அன்பு நிறைந்தவனே. என்ற இருவகை அழைப்பைக்  காட்டுகிறது! அன்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் காரணமான சிறப்புடையதாதலின் ஏனைய இடத்து ஓலம் என்று ஒரு முறை அறைகூவியவர் அன்பனே ஓலம் ஓலம் என இங்கு இருமுறை அடுக்கிக் கூவினார்.

இறைவன் தம்மையே ஒப்புவிக்கும் பொருள் அடியாரின் அன்பு ஒன்றுதானே! இதனை, “பத்திவலையிற் படுவோன் காண்க“ என்ற  திருவாசகத்திலும், “பத்திரனடிமை யென்றான்“ எனத் திருவிளையாடலில், இறைவன் பாணபத்திரருக்குத் தம்மை அடிமையாக்கிக் கொண்டபகுதியிலும் காண்க. “அன்பே சிவமாவ தாரு மறிகிலர்“ என்பது திருமந்திரம். அன்பிலே கலந்துகொண்டு இரண்டற நிற்பவர் ஆதலின் அன்பனுக்கு இருமுறை ஓலமிட்டனர்!

அடுத்து, ‘’செயற்கருஞ் செய்கை செய்த தீரனே!’’ என்ற தொடரால், மேற்பாட்டில் ஆசிரியர் தம் வாக்கினால் நாயனாரது அரிய செய்கையைப் பாராட்டியதையும், இங்கு இறைவனும் அவ்வாறு பாராட்டியதையும்  தெரிவிக்கின்றார்.

அடுத்து,  ‘’மயக்கறும் மறை ஓலிட்டு’’ என்ற தொடரில், மயக்கம் என்பது மோகத்தைக் குறித்தது.  உயிர்களுக்கு உள்ள மயக்கம் போக்கி உண்மை உணர்த்துவது வேதம். மயக்கறும் மறை, மயக்கம்  அறுதற்குக் காரணமான மறையைக் குறித்தது. ஓலமிட்டு என்பது ஒலிட்டு என நின்றது.  ஓலிடவும், தேடவும் நின்றான் என்றுவிரித்துரைக்க. மறை ஓலிடுதலாவது எல்லா  வகையானும் சொல்லியும் இறைவன் தன்மை தன்னளவுட் படாமல் இளைத்து நின்று விடுதல். இதனை,

‘’வேதங்கள்  ஐயா  என ஓங்கி  ஆழ்ந்தகன்ற  நுண்ணியனே!’’

என்ற திருவாசகம் விளக்கும்.  இகலி நின்ற பிரமவிட்டுணுக்களினிடையே நான்கும் வேதங்களும் வெளிப்பட்டடு நீவிர் இருவரில் ஒருவரும் பரமல்லர் இறைவனே பரம்பொருள் என்பதை ஆதாரங்கள் காட்டி, முறையிடவும் என, உரைத்தலும் ஆகும்! நாதரூபமாகிய மறை, நாதாந்த ரூபனாகிய இறைவனை ஓலமிட்டு அழைத்தல் இயல்பாம்.

மறை ஓலிட்டு, என்பதை மறைச் சொற்களால் ஒலமிட்டு, மாலயன் தேட என்று இவ்விரண்டினையும் ஒன்று கூட்டி உரைக்கலாம். மறை ஓலிடவும் நின்ற  இறைவன், நாயனார் பெயரைக்  கூவி ஓலமிட்டான் என அடியாரது பெருமையை விளக்கினார்!

மறைவழி நின்ற முனிவர் பெரியர்; அவரிலும் அவர்களால் வழிபடப் பெற்ற வேதம் பெரிது; அவற்றினும், அவ்வேதத்தால் வழிபடப்பெற்றவனும் அதைச் சொன்னவனுமாகிய இறைவன் பெரியன்; அவனும் ஓலமிட நின்ற மிகப் பெரியார் இந்நாயனார்! என இவரது உயர்வைக்  குறித்தார். இதனையே, முன்னர் முனிவர் என்றபோது,  ஐந்தவித்த முனிவனாகிய கௌதமனினும் அங்ஙனம் அவியாது நின்றே உலகச்சார்பை விட்டு அறுத்த நாயனார் ஆற்றல் மிகப் பெரிதென்பதை உணர்த்தினார்.

இயற்பகையார், முனிவராதலே வருவாய் என்றழைக்கக் காரணம்; அவர் அயராமையே முனிவராதற்குக் காரணம்; அன்பு அதற்கு அடிப்படை; அதுவே செயற்கரிய செய்கை செய்வித்தது எனத் தொடர்புபடுத்திக் கொள்க.

அறுபகையும் செற்றவர் நாயனாராதலின் இறைவன் கூவிய ஓலங்களும்  அறுவகைப்பட்டன!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *