வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26

0

தி.இரா. மீனா

பிரசாதி போகண்ணா

தத்துவ போதனை, சரணரைப் போற்றுதல், பக்தனின் இயல்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இவர் வசனங்கள் அமைகின்றன. ’சென்ன பசவண்ணப்பிரிய போக மல்லிகார்ச்சுனலிங்கா’ இவரது முத்திரையாகும்.

1. “தத்துவத்தின் வழி மெய்யறிய நினைத்தால்
அது குரங்கின் கை கண்ணாடி போலாம்
வெறுமே ஆடியதன்றி எதையும் காணவில்லை.
மலைக்குகையில் அழைப்பது வெற்றொலியாம்
நம்பிக்கைக்குரியவன்
சென்ன பசவண்ணப்பிரிய போக மல்லிகார்ச்சுன இலிங்கம்”

2. “பக்தியென்பது வேர், விரக்தியென்பது மரம்
கனியென்பது ஞானம்,
பக்குவமடைந்தால் எல்லையற்ற ஞானம்
காம்பிலிருந்து விடுபட்டால் பரமஞானம்
சுவைக்கும் போது உள்முக ஞானம்
மகிழ்வு தன்மயமாகும்போது புனித ஞானம்
புனிதஒளி நிலைக்கும் போது பரிபூரண ஞானம்
அது மேலான உடலென்பதற்கிடமில்லை
சென்னபசவண்ணப்பிரிய போகமல்லிகார்ச்சுன இலிங்கம்
அளவிற்கு எட்டாத காரணத்தால்“

3. “உலோகப் பந்து ஊடுருவிச் செல்ல முடியுமா?
மலரும் முன்னால் செடிக்கு மணமும் நிறமுமேது?
இந்த துவைத அத்வைத இரண்டும்
சென்னபசவண்ணப்பிரிய போகமல்லிகார்ச்சுன
இலிங்கத்துள்ளுண்டு.“

4. “காற்று அடங்கிய பெரிய கடல்போல
ஒலியில் அடங்கிய மௌனம் போல
வெட்ட வெளியைத் தொடாத உறுதியைப் போல
சென்னபசவண்ணப்பிரிய
போக மல்லிகார்ச்சுனனுள் அடங்கிய நட்பாம்“

பிரசாதி லெங்க பங்கண்ணா

சரணர்களுக்கு சேவை செய்வது இவர் காயகம். ’தகன சண்டிகேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும்.

“பிரசாதமே உடலெனக் கொண்டவனின் இருப்பு
பச்சை மண்பாண்டம் உடைந்தது போலிருக்க வேண்டும்
கானல் நீர் நிரப்பிக் கொட்டியது போலிருக்க வேண்டும்
தீயில் எரிந்த கற்பூரக் குன்று போலிருக்க வேண்டும்
பிரசாதத்திற்கு மறுப்போர் இல்லாதது போலிருக்கவேண்டும்
தகனசண்டிகேஸ்வர இலிங்கத்தில் இணையவேண்டும்“

பத்தலேஸ்வரனின் புண்ணியஸ்திரி குட்டவ்வே

நாடோடிகளில் ஒருவரான பத்தலேசுவரனின் மனைவி ’நிம்பேஸ் வரா’ இவரது முத்திரையாகும்.

“மனம் நிர்வாணமாகாத வரையில்
உடல் நிர்வாணமாகியென்ன?
விரதம் தவறிய பின்பு விரதம் தவறியவரோடு சேர்ந்தால்
விரதம் கடைப்பிடித்தென்ன பயன்?
அது நரகமே நிம்பேஸ்வரனே.“

பசவலிங்கதேவா

குருவின் மீது எல்லையற்ற அன்பு கொண்டதான நிலையில் இவர் வசனங்கள் அமைகின்றன. ’மத்பிராண நாத மஹாகுரு சித்தலிங்கேஸ்வரா’ என்பது இவரது முத்திரையாகும்.

1. “மண்ணாசையில் மனம் கொள்ளவைத்தது உயிராத்மா
பெண்ணாசையில் வாட்டியது அந்தராத்மா
பொன்னாசையில் கருக்கியது பரமாத்மா
தனதான்யத்தில் பொடியானது  தூய ஆத்மா
தாய் தந்தை உறவில் சுழன்றது ஞான ஆத்மா
உடன்பிறப்பு உறவுகளெனத் தவித்தது உடலாத்மா
இப்படி ஜடமான ஆன்மாக்களின் நட்பில் கெட்டேன்
என் கதியென்ன குருலிங்க ஜங்கமமே?
ஹரஹர சிவசிவ ஜெயஜெய கருணாகரனே
’மதபிராணநாத மஹாகுரு சித்தலிங்கேஸ்வரா“

2. “என்னுள் எள்ளளவும் நல்லெண்ணமில்லை
ஏழு தீவுகள் அளவு குற்றமுடையவன் நான்
கருணையால் என்னைக் காப்பீரோ?
குருலிங்க ஜங்கமமே குற்றம் பொறுப்பவரே,
ஹரஹர சிவசிவ ஜெயஜெய கருணாகரனே
’மதபிராணநாத மஹாகுரு சித்தலிங்கேஸ்வரா”

பஹூரூபி சௌடய்யா

நாட்டுப்புறக் கலைஞரான இவர் கல்யாண் நகரில் பலவேட காயகத்தின் மூலம்  சரணவாழ்வு வாழ்ந்தவர். ’ரேகண்ணப்பிரிய நாகி நாதா’ இவரது முத்திரையாகும்.

1. “ஐவரோடு இணைந்து ஆடினேன்
சிவனொடு நட்பானேன்
நான் நீயெனும் வேற்றுமை நீங்கிப் பார்த்தேன்
கூடினேன் கேடில்லாத கூட்டத்துடன்
ஆட்டம் போலியானது நோட்டம் முடிந்தது
ரேகண்ணப்பிரிய நாகிநாதனே“

2. “எல்லாவுலகங்களிலும் அவன் இருந்தாலென்ன?
உலகைப் போன்றவனல்லன் சிவன்
உலகைத் தன்னுள் வைத்து தான் வெளியிலிருப்பின்
பிரம்மாண்டம் போன்றவனோ? இல்லை
ஆகாயம் போல உள்ளும் புறமும் ஆற்றலின் ஆதாரம்
நம் ரேகண்ணப்பிரிய நாகிநாதன்“

3. “கையை மறந்து சண்டை போடுவது எத்தகையது?
உணர்வை மறந்து பார்க்கும் பார்வை  எத்தகையது?
பயத்தை மறந்து செய்யும் பக்தி எத்தகையது?
குருவை மறந்து இலிங்கத்தை விரும்புவாயெனில்
இலிங்கமுமில்லை குருவுமில்லை
ரேகண்ணப்பிரிய நாகநாதனே”

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *