தர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா

1

நாகேஸ்வரி அண்ணாமலை

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது அமெரிக்கா ஜனநாயகத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தது. அமெரிக்க அரசியல் ஊழல் இல்லாதது, அமெரிக்க அரசியல்வாதிகள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர்கள் என்ற எண்ணம் இருந்தது.  இப்போது அந்தக் காலம் மலையேறிவிட்டதுபோல் தெரிகிறது.

நான் அடிக்கடி சொல்வதுபோல் அமெரிக்க ஜனாதிபதியாவதற்குச் சில தகுதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர் விவாகரத்து செய்துகொண்டவராக இருக்கக் கூடாது; உலக சரித்திரம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்; நல்ல புத்தி கூர்மையுள்ளவராக இருக்க வேண்டும்; ஆலோசகர்கள் இருந்தாலும் அவர்கள் கூறுவதைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்; நாட்டை நல்ல முறையில் வழிநடத்தத் தெரிந்திருக்க வேண்டும். இப்போது ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப்பிடம் இதில் எந்தக் குணங்களும் இல்லையென்பதோடு இவற்றுக்கு நேர்மாறான குணங்கள் நிறைய இருக்கின்றன. இவருக்கு உண்மை பேசத் தெரியாது என்பதோடு பொய் பேசுவதில் வல்லவர். பதவியேற்றதிலிருந்து எத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறார் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுக் கூறியிருந்தது. அது ஆயிரக் கணக்கில் இருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி விவாகரத்து செய்துகொண்டவராக இருக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி. டிரம்ப் மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் என்பதோடு பல பெண்களோடு வேண்டத்தகாத உறவில் ஈடுபட்டிருந்திருக்கிறார். இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ‘நீங்கள் என்னென்ன புத்தகங்கள் படித்திருக்கிறீர்கள்?’ என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு ‘பைபிள்’ என்று பதில் சொன்னாராம். அவர் படித்ததாகச் சொன்ன ஒரே புத்தகமான பைபிளிலிருந்துகூட எதையும் சொல்லத் தெரியவில்லை.

மே 26, 2020 அன்று ஜனாதிபதிப் பதவிக்கு வேட்பாளராக ஜனநாயகக் கட்சி தேர்ந்தெடுக்கப் போகும் பைடன் வாய் குழறி, டிரம்ப்பை ஒரு முட்டாள் என்று கூறிவிட்டார்.  அது எதில் போய் முடியப் போகிறதோ என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  அவர் சொன்னது முற்றிலும் சரி.  டிரம்ப் ஒரு முட்டாள்தான்.  நினைத்த நேரம் நினைத்ததைப் பேசும் ஒரு கோமாளி. ஒரு நாட்டின் தலைவர், அதிலும் உலகிலேயே வலிமை வாய்ந்த, பணக்கார நாடான அமெரிக்காவின் தலைவர் இப்படிப் பேசும்போது தர்மசங்கடமாக இருக்கிறது.

டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்குத் தகுந்த மனைவி என்றாலும் ஒரு ‘முதல் பெண்’ணிற்கு (First Lady) உரிய தகுதி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.  இவர் கடந்துவந்த பாதை அப்படிப்பட்டது. மாடலாக இருந்தவர்; தன் உடலைப் பலவகையில் காட்டித் தொழில் நடத்தியவர். இவர் ‘முதல் பெண்’ என்றால் மனது ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இப்படிப்பட்ட மனைவி உடைய ஒருவரை அமெரிக்க மக்கள் எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியவில்லை. 

இன்னும் 40% மக்களிடம் டிரம்ப்புக்கு ஆதரவு இருக்கிறது என்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவ ஆரம்பித்தபோது, ‘அது ஒன்றுமே இல்லை.  தானாக மறைந்துவிடும்’ என்று சொன்னார்.  இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்பது உண்மைச் செய்தி இல்லை என்கிறார். மலேரியாக் காய்ச்சலுக்குக் கொடுக்கப்படும் மருந்தை கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களும் உட்கொள்ளலாம் என்றார். பின் தானே அதைச் சாப்பிடுவதாகவும் கூறினார்.

இவரை விட்டுவிடுவோம். இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் இவருக்கு இன்னும் மக்களிடையே ஆதரவு இருக்கிறதாம். அடுத்த முறையும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.  இது என்ன கொடுமை என்று தெரியவில்லை. அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர்களும் இவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக்கொண்டு இவர் பின்னால் செல்லத் தயாராக இருக்கிறார்களாம். இந்தியாவில்தான் எல்லாக் கட்சி உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் கட்சித் தலைவரின் கட்டளையை அப்படியே பின்பற்றுவார்கள். அப்படிச் செய்யாவிட்டால் அந்தக் கட்சியில் அவர்களால் இருக்கவே முடியாது. அ.தி.மு.க. உறுப்பினர்களும் அமைச்சர்களும் சந்தனப் பேழை அம்மையார் காலில் அல்லவா விழுந்தார்கள். இவர்கள் யாரும் சுயமாகச் சிந்திப்பதில்லை.

அமெரிக்காவிலும் இரண்டு கட்சிகளுக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்படிதான் உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. குடியரசுக் கட்சி இடதுசாரிக் கட்சி என்று பெயர் வாங்கியிருக்கிறது. இக்கட்சி உறுப்பினர்கள் பொதுவாக இடதுசாரிக் கொள்கைகளை உடையவர்களாக இருப்பார்கள். ஆனாலும் முழுக்க முழுக்க இடதுசாரிக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில விஷயங்களில் அவர்கள் நடுநிலைமை வகிப்பவர்களாகவும் இருப்பார்கள்; அல்லது வலதுசாரிக் கொள்கையுடையவர்களாகவும் இருப்பார்கள். இதே மாதிரித்தான். குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலதுசாரிக் கொள்கைகளைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை.

இப்போது டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் ட்ரம்ப்பின் பின்னால் போகிறார்கள்.  அவர் சொல்வது சரியென்று நினைக்கிறார்கள்.  ட்ரம்ப்பிற்கு மக்களிடம் இன்னும் ஆதரவு இருக்கிறது, அவருக்கு ‘ஆமாம் சாமி’ போடாவிட்டால் மக்களிடம் தங்களுக்கு ஆதரவு கிடைக்காது, அதனால் தேர்தலிலும் ஜெயிக்க முடியாது என்று நினைப்பதுபோல் தெரிகிறது. அமெரிக்க அரசியல்வாதிகள் தாங்களாகச் சிந்தித்துச் செயல்படுபவர்கள் என்று நினைத்ததெல்லாம் இப்போது பொய்யாகிவிட்டதுபோல் இருக்கிறது.  சில சமயங்களில் தங்கள் நலன்களை மட்டுமே பார்த்துக்கொள்வதில் நம் இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சிவிடுவார்கள் போல் தெரிகிறது.

டிரம்ப்பின் காலில் விழும் அளவுக்குப் போகாவிட்டாலும் அவர் சொல்வது எதையும் எதிர்த்துப் பேசும் அளவுக்கு அவர்களுக்குத் துணிச்சல் இல்லை; அவரைப் பதவியிறக்கம் செய்ய ஜனாதிபதிக் கட்சி கீழவை உறுப்பினர்கள் முயன்றபோது குடியரசுக் கட்சி செனட்டர்கள் யாரும் ஓட்டளிக்கவில்லை. அடுத்த தேர்தலில் தங்களுக்கு ஜெயிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதால்தான் இப்படிச் செய்தார்கள் என்கிறார்கள். தங்களுக்காவே வாழும் இந்த அரசியல்வாதிகளைப் பார்த்து அயர்ச்சி ஏற்படும் அதே சமயம், நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக மட்டுமே வாழ்ந்த நம் அண்ணல் காந்தி மகான் பிறந்த மண்ணில் பிறப்பதற்கு என்ன தவம் செய்திருக்கிறோம் என்ற எண்ணம் பிறந்து மனத்தில் சொல்லவொணாத ஆறுதல் பிறக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா

  1. No profession is bad. People/writers like you who always blames/question a women’s character instead of the actual issues are the real bad ones. You are a worst writer.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *