ஏறன் தமிழ்த்தாய் வாழ்த்து!
ஏறன் சிவா
சிந்தனை மிகவே தந்தும்;
சிறுமைகள் விலகச் செய்தும்;
நிந்தனை செய்தார் பேச்சின்
நிலைகடந் தேற வைத்தும்;
சந்தனம் போல் மணக்கும்
பாடலைத் தாளில் தந்த,
செந்தமிழ்த் தாயே நின்றன்
திருவடி வாழ்த்து வோமே!
அறவொளி; உயிர்கள் மீதே
அன்பொளி; நமை வளர்க்க
அறியாமை மறைய வைக்கும்
அறிவொளி; நாட்டைக் காக்கும்
மறம்திறம் இரண்டும் ஊணில்
மனத்தினில் ஊற வைத்த
நறுஞ்சுவைத் தமிழே நின்னை
நாளெலாம் வாழ்த்து வோமே!
உண்மைகள் உணர வைத்தும்;
உரிமையை உரைக்க வைத்தும்;
பெண்மையை மதிக்க வைத்தும்;
பெரும்பொருள் ஆசை பற்றும்
புன்மைகள் புதைய வைத்தும்;
பொழுதெலாம் பயனாய்ச் செய்யும்
வண்டமிழ்த் தாயே உன்றன்
மலரடி வாழ்த்து வோமே!
இலையிடை ஆட வைத்தும்;
இசையிடைப் பாட வைத்தும்;
மலையிடை மயங்க வைத்தும்;
மலரிடை மணக்க வைத்தும்;
சிலையிடை உயிரே உள்ள
சிலைபோல நிற்க வைத்தும்;
கலையிடைப் பணிய வைத்த
கனித்தமிழ் வாழ்த்து வோமே!
எத்தனை கலைச்செல்வங்கள்!
எழில்மிகு தோற்றம் கண்டோம்!
அத்தனை இன்பம் யாவும்
அருளிய உமக்கெம் ஆவி
மொத்தமீந் தாலும் சற்றும்
முற்றாதெம் பற்றே என்று
முத்தமிழ்த் முகையே நின்னை
முடிதாழ வாழ்த்து வோமே!