தொடாமலே ஒரு தொடுகை

8

ஷைலஜா
shylaja
தோழியின் திருமணத்தில்
அவள் கணவனின் நண்பனாயிருந்த நீ
அறிமுகப்படுத்தியதுமே எனக்குக்
கை கொடுத்திருக்கலாம்

தாம்பூலப்பை கொடுக்கும் சாக்கில்
தயங்கியாவது விரல் உரசி இருக்கலாம்.
சாப்பாட்டுப் பந்தியில்
பரிமாறவந்த பாயசத்தை
மீண்டும் கேட்டு
கண்களை மோத விட்டிருக்கலாம்.

கல்யாணக் கும்பலுடன்
கோவிலுக்குப் போனபோது
சாமி குங்குமத்தை
யாரும் பார்க்காதபோது என்
நெற்றியில் இட்டிருக்கலாம்.

கேலிச் சீண்டல் பேச்சில்
தெறித்த கோபத்தை
செல்லமாய் என் கன்னத்தைக்
கிள்ளியாவது தெரிவித்திருக்கலாம்.

முதலிரவுக் கட்டிலில்
முல்லைப்பூ தூவும்போது
முகப்பூவாய் அருகில் நின்றவளை
அள்ளி அணைத்திருக்கலாம்.

இத்தனை வாய்ப்புகள் இருந்தும்
இதையெல்லாம் விட்டு
எங்கோ மறைந்திருக்கும்
என் இதயத்தைத்
தொட்டது ஏனடா?

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “தொடாமலே ஒரு தொடுகை

  1. நீங்க இதை
    எழுத ஆரம்பிக்கும்பொழுது
    கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்

    எழுதி முடிச்சபிறகாவது
    படிக்கறவங்க நிலையை
    நினைச்சிப் பார்த்திருக்கலாம்

    கவிதைன்னு எழுதினதை
    கதையாவாச்சும்
    முயற்சி செஞ்சிருக்கலாம்

    குறைஞ்சபட்சம்
    எழுதி வெளியான பிறகு
    லிங்க் கொடுக்காமலாவது
    இருந்திருக்கலாம்

    இப்படி படிக்க வெச்சு
    கொலவெறியாக்குறது
    ஏன் அக்கா?!

  2. தொடாமலே ஒரு தொடுகை புரிந்தது அவன் மட்டுமல்லன் இந்தக் கவிதையும் கூட 🙂 வாழ்த்துகள்…

    எழுச்சியுடன்,
    கலை.செழியன்

Leave a Reply to அப்பாவி தங்கமணி (Bhuvana Govind)

Your email address will not be published. Required fields are marked *