இறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

0

மூல ஆசிரியர்: ஸ்டான்லி
மூல மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

மரணத்தின் ஈரம் முகத்தில். நான் மீண்டும் மீண்டும் உமிழ்ந்து ஈரத்தை அதிகப்படுத்தினேன். இரண்டு விபத்துகளில் மரணத்தைத் தோற்கடித்த ஆஜானுபாகுவாக நின்ற எனக்குப் பொன்னாடையும் பொருளும் பரிசாகத் தர முகமில்லாத கடவுள் கடந்து வந்தார்.

மருத்துவமனை படுக்கை அறையில் ஒருமுறை நான் இறந்து கிடந்தேன். ஓ மன்னிச்சிருங்க. மரத்துக் கிடந்தேன். நினைவுகளைப் புதிதாகப் படைத்துக் கொண்டிருந்தேன்.

கடவுள் விருந்தாளியாகக் கட்டிலுக்கருகில் வந்தபோது நான் ஆச்சர்யப்படவும், ஆதரவாக அவரைப் பார்த்து அருகிலுள்ள இருக்கையில் உட்காரவும் வைத்தேன். நான் அவரைப் படுக்கையில் அமர்த்தவில்லை. அது என் மனைவிக்கு மட்டும் உரிமையானது.

பொன்னாடையும் பொருளும் எனக்குக் கொடுத்துவிட்டு துக்கத்துடன் அவர் செல்லுகையில் கட்டிலுக்கடியில் அவர் மறைத்து வைத்த பழையதும் உடைந்ததுமான முகக் கவசத்தை அவர் குனிந்தெடுத்தார். நான் நன்றியை வெளிப்படுத்தக் கையெடுத்து வணங்கியதும் அவர் என் இடுப்புக்குக் கீழே போர்த்தியிருந்த சிவப்புப் போர்வையைத் தூக்கிப் பார்த்தார். வலது காலின் தொடை எலும்பிற்கு கீழ் ஒன்றுமே இல்லாதிருப்பதைக் கண்டதும் முகக் கவசததின் இரண்டு துவாரங்கள்  வழி கொஞ்சம் நீர் சொரிந்தது.

கையிலும் நெற்றியிலும் காய்ந்து கொண்டிருக்கும் காயங்களுடன் மனைவி கட்டிலுக்கருகில் வந்து நின்று அழுதாள். மருந்தின் வாசம் நிறைந்த சூழலில் கணவரின் ஆயுளுக்காகத் தாலியைக் கையில் பிடித்துக்கொண்டு ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். ஒரு சுபமுகூர்த்தத்தில் தர்ப்பைப் புற்கள் தூவி என் மனைவியாக உறுதிப்படுத்தப்பட்டது இந்த உறவு. பிறகு ஏன் இப்படியாயிற்று?

துக்கம் விசாரிக்க வந்த, மனைவியைத் தேடி வந்த பெண்குழுக்கள், கட்டிலுக்கருகில் வரிசையாய் வந்து நின்றனர். குழுவில் குட்டையான ஒருத்தி முண்டியடித்துக்கொண்டு என் மனைவியின் கண் பார்வையில் படுமாறு வந்து நின்றாள். திரும்பச் செல்லும் போதும் பஸ் பயணச் செலவை மனைவியே ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை என்று வேண்டிக்கொண்டாள். மனைவி  மூக்கைச் சீந்தியதும் அனைவரும் அதேபோல செய்தனர். நான்காவதாக நின்றவள் வலதுகையால் மூக்கைச் சீந்தியதும், மூன்றாவதாக நின்றவளின் பார்வை பட்டதும் இடது கைவிரலால் மூக்கைத் துடைத்தாள். அவள் அமைதியானாள். இந்தத் துக்கங்களைப் பார்க்க முடியாமல் நான் கசடில்லாத தூய வானத்தைப் பார்த்துச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். வானத்தில் தூய அழகு மட்டும் நிலைத்தது.

என் கவனத்தைத் திருப்பவும் மனைவியை மகிழ்விக்கவும் மீண்டும் உரையாடல் தொடங்கியது.

ஸ்கூட்டர்ல போனதனாலதா இப்படியொரு விபத்து ஏற்பட்டுச்சு.  சைக்கிள்ல  போயிருந்தா இப்படி நடந்திருக்காது. ஒரு வேளை தலை மட்டும் இழந்திருக்கலாம். அது இதைவிட பரவால்லையே. மாதக் கணக்கில் மருத்துவமனைல படுக்க வேண்டியிருந்திருக்காது. சாலையில இவ்வளவு ஆழத்தில குழி தோண்டக்கூடாதுதா. பைப்பு போடணும்னா வானம் வழியா போட்டிருக்கலாமில்ல. கான்ட்ராக்ட் எடுத்தவனுக்கும் உதவணும். கார்ப்பரேஷனோட ஊழல நிறுத்தணும். மனைவிக்கு நெற்றியிலும் கையிலும் அடிபட்டதிலும் வருத்தமிருந்தது. அவளுடைய தொடைக்குக்கீழே கால் இருந்ததிலும் போராட்டக்காரர்களின் தொண்டை இடறியிருக்கணும். இறுதி யாத்திரையைக் கொண்டாட முடியாமல் போனதில் வருந்தி, போராட்டக்காரர்கள் சென்றனர்.

அவரவருடைய இறுதி யாத்திரைக்கான தாகத்தோடு சிந்தித்துக்கொண்டு கிடந்தேன்.

“திடீர்னு இது கைக்கடியில வெச்சு நடக்க கஷ்டமாதா இருக்கும். நல்லாப் பழகணும்”

பச்சை அறையில் ரசிகர்களின் கூட்டம். பாராட்டு மலைக்கு நடுவில் மனசாட்சிகளின் நுனிகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அடர்த்தியான பௌடரை கலைக்கப் பூசப்பட்ட தேங்காய் எண்ணெய், உலர்ந்த துணியால் அழுத்தித் துடைத்தபோது முகம் வலித்தது. தொலைவிலிருந்து வந்த ரசிகர்களுக்குப் பணம் கொடுத்துச் சரியான நேரத்தில் அவர்களைத் திரும்ப அனுப்பிவைக்க வேண்டுமென்ற அறிவிப்பு மீண்டும் மீண்டும் குழுவினரால் ஒலிபரப்பப்பட்டது. வேகமாகக் கிளம்பியபோது நண்பர்கள் எப்போதுமுள்ள பார்ட்டியின் விஷயத்தைக் கூறித் தடுத்தனர். மனைவி என்ற கம்பார்ட்மென்ட் உடன் இருப்பதைக் கூறினர். மனைவியின் முகம் எதிர்பார்த்த அளவிற்குப் பொலிவுடையதாகத் தெரியவில்லை.

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபோதும். கொஞ்ச தூரம் சென்ற போதும் மனைவி ஒன்றும் பேசவில்லை. தேவையில்லாமல் வேணும்னே போட்ட பிரேக்கில பின்னால தள்ளி உட்கார்ந்திருந்த மனைவி நெருங்கி வந்தாள். அப்போ மெல்ல கேட்டேன்.

”இன்றைய நடிப்பு எப்படி இருந்துச்சு.?”

மனைவியின் திடமான மௌனம்

“ஓ இப்படியொண்ணும் இனிமே நடிக்க வேண்டாம். கண்ணும் காலும் இல்லாம. காலில்லாம தடி  ஊன்றி ஸ்டேஜ்ல வந்ததும் பதறிப் போச்சு…….

என்னுள் ஏதோ உணர்வு வெளிப்பட்டது.

“ஒரு காலு போனா என்ன, நடிப்பு நல்லா இருந்துச்சில்ல. முதல் பரிசும் கிடச்சிதில்ல”

ஒரு சரக்கு லாரியின் தீக்கண்கள் என் கண்களை இருட்டாக்கியது. முன்னால் ஒரு பெரிய குழி இருந்ததோ……..

ஒன்றுமே நினைவில்லை…………….

கண்கள் திறந்தபோது மருத்துவமனை கட்டிலில் கருநாக்கால ஒண்ணும் சொல்லாதீங்க மூஸண்ணா நீலிக்கே அறிவுரை கூறுவது போல.


ஆசிரியர் குறிப்பு

கொச்சியில் பிறந்த மலையாளியான ஸ்டான்லி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நடிகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல துறைகளில் கால்தடம் பதித்தவர். பதினான்கு மொழிபெயர்ப்பு நூல்கள் உட்பட இருபது புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார். கோவை மலையாள சமாஜத்தின் குட்டன் நாயர் நாடக விருதை ஏழு முறை பெற்ற இவர், நல்லி திசைஎட்டும் விருது, நாராயணகுரு விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *